ஐந்தும் மூன்றும் ஒன்பது...



‘‘எனது ஆய்வுக் காலத்தில் எவ்வளவோ தேடல்கள்! அதில் அமுதசுரபி குறித்த என் தேடல் என் சகாக்களிடையே பெரிதும் கேலிக்குரியதாக அமைந்துவிட்டது. ஒரு கட்டத்தில் நான் அதை கைவிட்டு விட்டது போல நடித்தேன். இதனால் என் சகாக்களும் சற்று அமைதியானார்கள். இருந்தும் அவ்வப்போது என்னை சீண்டுவார்கள்.


ஒரு இஸ்லாமிய நண்பர் வீட்டில் ஒருமுறை விருந்தளித்தார்கள்.  மணக்க மணக்க பிரியாணி! பொதுவாக அவர்கள் பீங்கான் தட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். அன்று எங்களுக்கு வெள்ளித்தட்டில் விருந்து! அந்த தட்டுகளும் ஹைதராபாத் நிஜாம் காலத்து தட்டுகள். தட்டில் நிறைய வேலைப்பாடுகளும் கூட! அதில் ஒரு தட்டு புத்தம் புதிய வெள்ளித்தட்டைப் போல பளபளவென்று இருந்தது.

தட்டை வைத்து பிரியாணி போடும்போது ‘இந்த வெள்ளித்தட்டு மட்டும் கறுக்கவே மாட்டேன் என்கிறது. எப்படி என்றும் தெரியவில்லை. இதன் பளபளப்பு அப்படியே இருக்கிறது’ என்றார் விருந்தளித்த நண்பர். நானும் ஆச்சரியப்பட்டேன். என் சகாக்களுக்கு என்னை கிண்டல் செய்ய அதுவும் ஒரு வாய்ப்பாகிவிட்டது. ‘அப்படியென்றால் இதுதான் அமுதசுரபியாக இருக்க வேண்டும். கணபதி சுப்ரமணியன்... இதை நீங்கள் மேலும் ஆய்வு செய்து, அமுதசுரபிக்கென ஏதாவது மந்திரம் இருந்தால் கூறுங்கள். இதில் ேசாறு வருகிறதா பார்ப்போம்’ என்றனர். நான் முறைத்தேன்.

 உடனே அந்த இஸ்லாமிய நண்பரும் திகைத்துப் போய், ‘சார்! அமுதசுரபி என்கிற ஒன்று நிஜமா... நீங்கள் அதைத் தேடுகிறீர்களா... அந்த அமுதசுரபி இந்தத் தட்டு போலவா இருக்கும்?’ என்று படபடக்கத் தொடங்கிவிட்டார். அந்த நேரம் அவர்களை சமாளிக்க, ‘அதெல்லாம்  கற்பனை’ என்றேன். அப்படியே, ‘இந்தத் தட்டு கறுக்காமல் இருப்பது உண்மையில் ஆச்சரியம்.  யாராவது ஒரு மெட்டலர்ஜி படித்த பேராசிரியரிடம்  இதைக் காட்டி கேட்கலாமே?’ என்றேன். விருந்து கொடுத்த நண்பர், நான் சொன்னதைக் கேட்டு அசந்து போய் விட்டார்.  பிறகு இன்னொரு தகவலையும் கூறினார்.

‘சார், இது விருந்தினர் தட்டு! இதில் பல வி.ஐ.பிக்கள் சாப்பிட்டுள்ளனர். ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இதில் சாப்பிட்டவர்கள் அவ்வளவு பேருமே அதன்பின் மேலும் மிகப்பெரிய நிலைக்குச் சென்று விட்டனர். ஒருவர் கவர்னராகவே ஆகிவிட்டார்’ என்றபோது எனக்குள் என் பகுத்தறிவையும் மீறி ஒரு கற்பனை ஊற்றெடுக்கத் தொடங்கியது. நான் பெரிதும் எதிர்பார்க்கும் ‘பத்ம பூஷண்’ போன்ற பட்டங்கள் எனக்குக் கிடைக்கும் என்றும் தோன்றியது...’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

ப்ரியா கையை நீட்ட, கணபதி சுப்ரமணியன் அதிர்ச்சியோடு பார்த்தார். ஆனால் பத்மாசினி அலறத் தொடங்கினாள். ‘‘போதுண்டி... நீ உள்ளே போ! இதை இவரே போய் தூக்கிப் போடட்டும். இதைக் கையாலயே தொடாதே! இது வீட்டை விட்டுப் போனாதான் நல்லதே நடக்கும்’’ - என்றவளை ப்ரியா வெறித்தாள்.
வர்ஷனோ, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்து நிற்பதுபோல உணர்ந்தான். ‘‘அங்கிள்... தாங்க அங்கிள்! நான் போய் இதைப் போட்டுட்டு வர்றேன்’’ என்று கணபதி சுப்ரமணியனிடமிருந்து அந்த தகரப்பெட்டியை வாங்கியே விட்டான்.

‘‘சரிப்பா! யாரோ ஒருத்தர்... போய் தூக்கி எறிஞ்சிட்டு வாங்க... புறப்படுங்க’’ என்றார் கணபதி சுப்ரமணியன்.இருவருமே புறப்பட்டனர். பத்மாசினி ப்ரியாவை பயத்தோடு பார்த்தவளாக, ‘‘நீ போகாதே... வர்ஷன் போனா போதும்’’ என்றாள்.‘‘எனக்குத் தெரியும்... நீ போய் சாதகம் பண்ற வழியைப் பார்... பை தாத்தா...’’ என்று மிகவே வேகமானாள் ப்ரியா. போர்ட்டிகோவை அடைந்து பின் சீட்டில் பெட்டியை வைத்துவிட்டு முன்புறமாக ப்ரியா ஏறிக்கொள்ள, வர்ஷன் டிரைவிங் சீட்டில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.

‘‘ப்ரியா! எப்படி பெட்டியை எடுக்கப் போறோம்னு நினைச்சு வந்தா, அதுவா வந்து மடில விழுந்துடுச்சு. இட் ஈஸ் எ ஒண்டர்’’ என்று தலையை சிலுப்பிக் கொண்டான் வர்ஷன்.அந்த சாண்ட்ரோ அவன் காரைத் தொடர்ந்து வரத் தொடங்கியிருந்தது. ப்ரியா  திரும்பிப் பார்த்தாள்.
‘‘அந்தக் கார் ஃபாலோ பண்ணுதா?’’‘‘பின்ன?’’

‘‘ஸ்கௌண்ட்ரல்ஸ்... ப்ரியா! நான் ரொம்பவே ஃபூலாயிட்டேன்...’’‘‘நீ ஃபூலா...? நோ... நோ... நீ சரியான திருடன். நீ எல்லாம் அரசியல்வாதியா இருந்திருந்தா எங்கயோ போயிருப்பே...’’‘‘தப்பா சொல்றே ப்ரியா! என்னை அரசியல்வாதிகளோட மட்டும் கம்பேர் பண்ணாதே... சுத்தமா பிடிக்காது எனக்கு!’’
‘‘பிடிக்காதா... நீயா சொல்றே? அங்க டீலே கிடையாது. எல்லாமே ஃபிக்சட். ஒரு கான்ட்ராக்ட் எடுத்தேன்னு வை. அதுல அம்பது பர்சன்ட்தான் செலவு. மீதி அப்படியே உன் பேங்க் அக்கவுன்ட்டுக்குப் போயிடும்!’’

‘‘போதும் நிறுத்து... என் மேல சத்தியமா சொல்றேன். நான் இனி ஒரு சின்ன தப்புகூட பண்ண மாட்டேன்’’ - அவன் கசிந்து போய் பேச, ப்ரியா திரும்பி அந்தப் பெட்டியைப் பார்த்தாள். மெல்ல கை நீட்டி சிரமப்பட்டு எடுத்து மடிமேல் வைத்துக்கொண்டு திறந்தாள். கரகரவென்று தகரம் உரசும் சப்தத்தோடு திறந்து கொண்டது. உள்ளே சோழிகள், காம்பஸ், ஏட்டுக்கட்டு, ஸ்படிக பெண்டுலம்... கூடவே, ஒரு சோழர் கால நாணயமும், உள்ளங்கையில் அடங்கிவிடும் ஒரு மண் கலயமும்  இருந்தது. ப்ரியாவின் நெற்றியில் வரிகள் விழத் தொடங்கின.

வர்ஷனும் பக்கவாட்டில் அவ்வப்போது பார்த்தான். பார்த்தபடியே கேட்டான். ‘‘என்ன ப்ரியா... கடைசி கடைசியா ஒரு பார்வை பாத்துக்
கிறியா?’’‘‘ஆமா... அதேசமயம் இந்த நாணயமும், கலயமும் எனக்கு புதுசா இருக்குடா!’’‘‘என்ன சொல்றே?’’‘‘வள்ளுவர் இந்தப் பெட்டியோட வந்து இதை காட்டினப்ப இதெல்லாம் உள்ள இல்லை...’’‘‘அதனால என்ன இப்போ?’’‘‘அப்ப இல்லாதது இப்ப மட்டும் எப்படி வந்தது?’’

‘‘இதைத் தூக்கிக் கொடுக்கப் போறோம். நம்மை விட்டுப் போகப் போற இதுல எது இருந்தா என்ன... இல்லாட்டாதான் என்ன?’’- வர்ஷன் கேட்டதும் சரிதான். ஆனாலும் ப்ரியாவிடம் பதில் இல்லை. முகத்தில் தீவிர யோசனை!‘‘என்ன யோசனை?’’‘‘ஒண்ணுமில்ல...’’ என்றபடி திரும்பிப் பார்த்தாள்.  சாண்ட்ரோவின் ஃபாலோ அப்பில் தடையே இல்லை. அவள் பார்க்கவும்,  சாண்ட்ரோவின் கார் ஹெட்லைட் ஒருமுறை எரிந்து அணைந்தது.

அதேவேளை டிராஃபிக்கில் கார் தேங்கி நின்றது.  பக்கவாட்டில் யதார்த்தமாக பார்வை போனது. அங்கே ஒரு ஃப்ளக்ஸ் போர்டு - அதில் பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் திருமுகங்கள். கீழே லஞ்சம் கொடுத்தவர்களின் புலம்பல் வரிகள். அந்த நிலையிலும் அதைப் பார்த்த ப்ரியாவிடம் சிரிப்பு.
‘‘என்ன சிரிக்கறே?’’

‘‘தப்பு பண்ணவங்ககூட அதுல ஒரு நியாயத்தை எதிர்பார்க்கறாங்க பார். இது ரொம்ப வினோதமான நாடுடா...’’ என்றவளை பரிதாபமாகப் பார்த்தான் வர்ஷன். ‘‘நீ என்ன பரிதாபமா பாக்கறே.. உன்ன இவங்களோட கம்பேர் பண்ணதாலயா?’’‘‘இதை விடு... எதுக்குதான் ஃப்ளக்ஸ் வைக்கறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாத நாடு இது. இதனால நல்ல பெயின்டர்களோட வாழ்க்கை தொலைஞ்சதுதான் மிச்சம். பை த பை ப்ரியா! இந்தப் பெட்டியை ஒரு பிளாக் மெயிலுக்கு கட்டுப்பட்டு தூக்கிக் கொடுக்கப் போறத நினைச்சா எனக்கு ரொம்பவே வலிக்குது ப்ரியா!’’

‘‘இதோ பார்... இப்ப நமக்கு உன் தங்கை அனுஷாதான் முக்கியம். ஆமா, எங்க போன்?’’அவன் காரை நகர்த்தியபடியே எடுத்துத் தர, அதில் அவள் அந்த கிட்நாப்பர்களை எட்டிப் பிடித்தாள். ‘‘நான் இப்ப பெட்டியோட வந்துக்கிட்டு இருக்கேன்!’’‘‘தெரியும்.’’
‘‘நீங்க எங்க இருக்கீங்க?’’‘‘ஹாஸ்பிடல் கேம்பஸ்ல...’’‘‘அஞ்சு நிமிஷத்துல வந்துடு வோம்!’’
‘‘அதுவும் தெரியும்...’’

‘‘அதான் கார் ஒண்ணு எங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டே வருதே?’’‘‘அதெல்லாம் எங்க அசைன்மென்ட்டோட ஒரு பார்ட். பை த பை, நீ ரொம்பவே சீக்கிரமா பெட்டியை எடுத்துக்கிட்டு வந்துட்டே. அதுவே நீ எவ்வளவு தூரம் பயந்துட்டேங்கறத சொல்லுது.’’‘‘உனக்கு ஒரு அக்காவோ தங்கையோ இருந்து கடத்தப்பட்டா, அப்ப தெரியும்...’’‘‘ஃபீல் பண்ணாத ப்ரியா... நாங்க என்ன உங்க சொத்தையா கொள்ளையடிச்சிருக்கோம். ஒரு பழைய தகரப் பெட்டி...’’
‘‘அஃப்கோர்ஸ், அந்தப் பெட்டிக்குத்தானே நீயும் அம்பது லட்ச ரூபாய் விலை வெச்சிருக்கே?’’

‘‘ஆக மொத்தம், நாங்க நல்ல விலை கொடுத்துத்தான் வாங்கறோம். இதுக்கு நீங்க சந்தோஷம்தான் படணும்...’’‘‘உன் பணமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம். அனுஷாவை எதுவும் பண்ணாம விட்டா போதும்...’’‘‘சாரி! இந்தப் பணம் ெபட்டிக்காக மட்டுமில்ல... காலப்பலகணி பற்றி நீங்க இனி யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாதுங்கறதுக்காக! இந்த விஷயத்தையே நீங்க மறந்துடணும்ங்கறதுக்காக...’’‘‘நாங்க மறக்கறது இருக்கட்டும். நீங்க கவனமா இருங்க. பேராசை பெருநஷ்டம்ங்கற மாதிரி இது உங்ககிட்ட வரப்போற நேரம், உங்களுக்கும் ஏதாவது ஆகிடப் போகுது...’’

‘‘அது எங்க பிரச்னை. நீ அநாவசியமா கவலைப்படத் தேவையில்லை!’’- பேச்சின் முடிவில் கே.ஆர். ஹாஸ்பிடல் போர்டு தெரிந்தது. காரும் வளைந்து புகுந்து ஒரு ஓரமாக நின்றது. பின்னாலேயே வந்த சாண்ட்ரோவும் நுழைந்து நின்றது. அதிலிருந்து சராசரியாக ஒருவனும் அப்நார்மலாக வடக்கத்திய பிராமண பண்டிட் தோற்றத்தில் ஒருவரும் இறங்கினர். பண்டிட்ஜியின் கழுத்தில் மிகப்பெரிய ருத்ராட்ச மாலை; ஆனாலும் அநியாய ெபரிய மூக்கு;

நெற்றியில் ஸ்கேல் வைத்து கோடு ேபாட்டது போல் விபூதிப்பட்டை - நடுவில் செந்தூரம் தீபச்சுடர் போல... அந்த பண்டிட்டுக்கு பூனைக் கண் வேறு! அவரை யாராவது ஒரே ஒருமுறை பார்த்தால் கூட போதும்... அந்த முகம் புகைப்படம் எடுத்த மாதிரி பதிவாகி விடும். அவர்களைப் பார்த்த
படியே வர்ஷன் தகரப்பெட்டியைக் கையில் எடுத்தான்.

கச்சிதமாய் ஒருவன் வர்ஷன் அருகில் வந்து நின்றான்.
‘‘பெட்டியை உள்ள வை...’’‘‘காருக்குள்ளயா?’’
‘‘ஆமாம்...’’வர்ஷன் தயங்கினான்.

‘‘அட, வைன்னா...’’ - அவன் அதட்ட, வர்ஷனும் அமைதியாக வைத்தான். அந்த பண்டிட்ஜி அருகில் வந்து காருக்குள் ஏறி அமர்ந்தவராக பெட்டியைத் திறந்து ஒவ்வொன்றையும் பார்க்க ஆரம்பித்தார்.சோழர் கால நாணயம் அவர் முகத்தில் பிரகாசத்தை ஏற்படுத்தியது. மண்குவளை கண்களை அகலமாக்கியது. பெண்டுலம் அவர் விரல்களில் ஆடியது. சோழியும் இரு கைகளுக்குள் குலுங்கி சப்தமிட்டன. சப்தத்தை காதருகே வைத்து பரிசோதிப்பது போல கேட்டார். இறுதியாக ஏட்டுக்கட்டைத் தொட்டு, ஒவ்வொரு ஏடாக எடுத்து ஒரு பார்வை பார்த்தார். பின் திரும்பி தன்னை அழைத்து வந்தவர்களைப் பார்த்தார். பார்வையே ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்பது போல் இருந்தது.

‘‘நல்லது... தேங்க் யு வர்ஷன்! உன் அக்கவுன்ட்ல பணம் ேபாட்டுருக்கோம். கேஷா கொடுத்தா கணக்குல வராது. கணக்குல வரணும்னுதான் போட்டுருக்கோம். திரும்பவும் சொல்றேன், இந்தப் பெட்டி பத்தி நீங்க யார்கிட்டயும் வாயே திறக்கக்கூடாது. நீங்க உண்டு, உங்க வேலை உண்டுன்னு இருக்கணும்... என்ன?’’
அவன் அதட்டலாக சொல்லி முடித்தான்.

‘‘அதான் பணம்லாம் வேண்டாம்னு சொன்னேனே... அப்புறம் எதுக்கு அக்கவுன்ட்ல போடறே?’’‘‘எல்லாம் காரணமாகத்தான். அது உங்க வரைல ஒரு லாக். பை த பை... ப்ரியா! உன் தாத்தா இந்தப் பெட்டியைக் காணோம்னு தேடினா என்ன செய்வீங்க?’’‘‘தூக்கி கூவத்துல போட்டுட்டேன்னு சொல்லிடு வேன். அதைப் பத்தி நீ கவலப்படாதே. எங்க அனுஷா...?’’‘‘அதோ...’’ - அவன் கை காட்டிய அதே நொடியில், அனுஷா உள்ளிருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள்.
வர்ஷன் ஓடினான்.

‘‘வர்ஷ்... நீ... நீ எப்படி இங்க?’’
‘‘பைத்தியம். எனக்கு எதுவுமில்லை. ஐ ஆம் ஆல்ரைட்.’’
‘‘ஆல்ரைட்டா... அப்ப ஐ.சி.யு.ல இருக்கறது யார்?’’
‘‘நீ கார்ல ஏறு... விவரமா சொல்றேன்!’’

‘‘என்ன வர்ஷா நடக்குது... எனக்கு எதுவுமே புரிய மாட்டேங்குதே!’’
‘‘பதற்றப்படாதே... இது ஒரு டி.வி. கேம் ஷோ! ‘ஏமாறாதே - ஏமாற்றாதே’ன்னு இதுக்குப் பேர். நீ கார்ல ஏறுங்கறேன்ல...’’
- வர்ஷன் அதட்ட, அவளும் காரில் ஏறிக் கொண்டாள்.‘ஏமாறாதே - ஏமாற்றாதேவா, நல்லா சமாளிக்கறேடா!’ என்பது போல பார்த்தபடியே ப்ரியாவும் ஏறிக்கொள்ள, கார் புறப்பட்டது!

அங்கே பங்களாவில் பத்மாசினியின் செல்போன் ரிங்டோனில் ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ...’ என்கிற கர்நாடக சங்கீதத்தின் ஒலிப்பு. எடுத்து ஆன் செய்து காதைக் கொடுத்த பத்மாசினியின் முகம் இறுகியது.‘‘முத்தழகுவைக் காப்பாற்ற முடியவில்லையாம்...’’ அனந்த
கிருஷ்ணன்தான் பேசினார்!

ஜோக்ஸ் 

‘‘தலைவர் கம்ப்யூட்டர் பயன்
படுத்த ஆரம்பிச்சதும் ரொம்ப மாறிட்டாரு...’’
‘‘எப்படிச் சொல்றே?’’
‘‘கட்சியை பலப்படுத்த எதிர்க்கட்சியிலேந்து சிலபேரை நம்ம கட்சிக்கு காப்பி பேஸ்ட் பண்ணச் சொல்றாரே!’’

‘‘அந்த டாக்டர் ரொம்ப சிம்பிளா ட்ரீட்மென்ட் பண்ணுவாரு...’’
‘‘அதுக்காக, ஸ்கேன் எடுக்கறதுக்கு பதிலா உடம்பை ஜெராக்ஸ் எடுக்கச் சொல்றது ரொம்ப ஓவர்!’’

‘‘அந்த ஜோசியர்கிட்ட அரசியல்வாதிங்க கூட்டமா இருக்கே... ஏன்?’’
‘‘கறுப்புப் பணத்தை மீட்க முடியாதபடி பதுக்கறதுக்கு ஸ்பெஷல் தாயத்து போடுறாராம்!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

நாங்க என்ன உங்க சொத்தையா கொள்ளையடிச்சிருக்கோம். ஒரு பழைய தகரப் பெட்டி...’’
‘‘அந்தப் பெட்டிக்குத்தானே நீ அம்பது லட்ச ரூபாய் விலை
வெச்சிருக்கே?

(தொடரும்)

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்