வெட்டி ஆபீஸர்!



தமிழ்நாட்டில் இன்று பல வெற்றிப் படங்களின் கதாநாயகன் கதிரவனுக்கும், கல்லூரி மாணவர்களின் கனவுக் கன்னியான நடிகை மணிமொழிக்கும் நான்கு மாதமாக காதலாம்!

அதைப் பற்றி தினசரி ஏதாவது ரூபத்தில் ஒரு செய்தியையும், ‘ஸ்டில்’லையும் தங்கள் பத்திரிகையில் பிரசுரம் செய்யாவிட்டால், சாமி கண்ணைக் குத்தி விடும் என்று எல்லாத் தமிழ் பத்திரிகைகளும் நினைக்கின்றன.

போன வாரம் திடீரென்று கதிரவனுக்கும், மணிமொழிக்கும் ஏதோ கருத்து வேறுபாடு! மணிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில் கதிரவனுக்குப் பிடிக்காத வேறு ஒரு நடிகரைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டாள். அதைப் பார்த்து விட்டு, கதிரவன் வேறு ஒரு நடிகைக்கு தான் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பதைப் போன்ற ஓர் போட்டோவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டான்.

அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து இதே போன்ற போட்டோக்களை இருவரும் மாற்றி மாற்றி இணையதளத்தில் உலவ விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் படங்களுக்கு, பல ஆயிரம் ‘லைக்ஸ்’களும், ‘கமென்ட்’களும் தினசரி வந்து குவிந்தன.சிங்காரவேலன் மத்திய உளவுத்துறையில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பவர்.

அவர் கடந்த பத்து நாட்களாக இந்த நடிகர், நடிகை பிரச்னையில் தொடர்ந்து ‘லைக்’ போடுபவர்களையும், ‘கமென்ட்ஸ்’ கொடுப்பவர்களையும் பட்டியல் எடுத்து, அவர்களின் இணையதள முகவரிகளையும், இன்ன பிற தகவல்களையும் திரட்டிக் கொண்டிருந்தார்.

அதைக் கவனித்த அவர் மனைவி மகேஸ்வரிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர் இதுபோன்ற வெட்டி வேலை எல்லாம் செய்பவர் அல்ல. அதற்கெல்லாம் அவருக்கு நேரமும் கிடையாது!

‘‘எதற்கு இந்த வெட்டி வேலையை நீங்க செய்திட்டிருக்கிறீங்க?” அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்...‘‘நானா செய்யறேன்? புது கவர்ன்மென்ட் ஒரு லிஸ்ட் கேட்டிருக்கு. அதுக்காகத்தான் தயார் பண்ணிட்டிருக்கேன்!’’
‘‘லிஸ்ட் எதுக்காம்?’’

‘‘தமிழ்நாட்டுல ஓரளவு படிச்சிட்டு, படிப்பையும் நேரத்தையும் உபயோகமில்லாம வெட்டியா பயன்படுத்திக்கிட்டு திரியிற ஒரு லட்சம் இளைஞர்களின் முகவரி தேவையாம்! அவங்க எதிர்காலத் தில் இது மாதிரி வெட்டி வேலையில ஈடுபடாம தடுத்து, நாட்டோட வளர்ச்சியில அவங்களை ஈடுபடுத்தப் போறாங்களாம். அவங்களை எப்படியெல்லாம் வேலை வாங்கலாம்னு புதுசா ஒரு திட்டத்தையே அரசு வகுத்துக்கிட்டிருக்கு தெரியுமா?

அதுக்காகத்தான் தமிழ்நாட்டில் இருக்குற வெட்டி ஆபீஸர்ஸ் லிஸ்ட் எல்லாத்தையும் எடுக்கச் சொல்லியிருக்காங்க!’’‘‘அப்படியா! ரொம்ப சந்தோஷம்... அப்ப நம்ம பையனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்குன்னு சொல்லுங்க!’’‘‘என்னடி நீ சொல்றே?’’‘‘உங்களுக்கு ஊரையும் உலகத்தையும்தான் உளவு பார்க்கத் தெரியும்!’’ என்று முகத்தைச் சுளித்துக்கொண்டு உள்ளே போனாள் மகேஸ்வரி!    கதிரவனுக்குப் பிடிக்காத வேறு ஒரு நடிகரைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டாள்!

கௌரிசங்கர்