நியூஸ் வே



கோட் சூட்டில் விக்ரம்பிரபு, மனைவி, மகளுடன் வெங்கட்பிரபு, கூடவே யுவன்ஷங்கர் ராஜா, மனைவி பார்வதியுடன் ஜெயராம், ஜிவ் சிகப்பில் ‘சூது கவ்வும்’ சஞ்சிதா ஷெட்டி, சூரியுடன் சிவகார்த்திகேயன்,

தமன்னா இவர்களுடன் பல்துறை பிரபலங்கள் வந்திருக்க, ஐ.டி.சி. சோழாவில் நடந்த ஆடி-ரிட்ஸ் விருது விழா ஒரே கலர்ஃபுல். சபரிமலைக்கு மாலை போட்டிருந்ததால் மனைவிக்கு அருகே உட்கார்ந்திருந்தாலும் ரொம்பவே தள்ளியே உட்கார்ந்திருந்தார் ஜெயராம்.

சிம்புவின் மீது இருக்கும் அன்புக்காக ‘இது நம்ம ஆளு’ படத்தில் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அதற்காக கொடுத்த செக்கை திரும்ப சிம்புவின் பாக்கெட்டில் வைத்து விட்டார் யுவன். இசையமைத்த சிம்புவின் தம்பி குறளரசனையும் பாராட்டித் தள்ளி விட்டாராம்.

‘என்னை அறிந்தால்’ படம் முடிய இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் இரண்டு பாடல்கள் போட்டுத் தர வேண்டும். அனுஷ்கா டிசம்பரில்தான் மீதித் தேதிகள் கொடுத்திருக்கிறார். இப்படியிருக்கும்போது பொங்கல் ரிலீஸ் சாத்தியமா என எல்லோரும் வியக்கிறார்கள்.

‘விருமாண்டி’க்குப் பிறகு அமெரிக்கா, டி.வி. ஷோ என ரவுண்ட் வந்த அபிராமி, மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஜோதிகா நடித்து வரும் மலையாளப் பட ரீமேக்கில்தான் அபிராமியின் ரீ-என்ட்ரி. ஸ்வீட் வெல்கம் அபி!

முன்பே வெளியான படங்களின் தலைப்புகளை வைத்தார்கள். இப்போது பிரபல நாவல்களின் பெயரை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ‘காக்கா முட்டை’ படத்தை எடுத்த மணிகண்டன் இப்போது ‘குற்றமும் தண்டனையும்’ என அடுத்த படத்திற்கு பெயர் வைத்துவிட்டார். தாஸ்தாயெவ்ஸ்கியின் பிரசித்தி பெற்ற நாவல் பெயர் இது.

‘லிங்கா’வில் ரஜினியின் மனைவியாக மணிபாரதி என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடிக்கும் ரஜினி மகள்களை ‘அக்கா’ என அன்போடு அழைத்து மகிழ்வாராம் சோனாக்ஷி.

நடிகர் விவேக்கின் தந்தை அங்கய்யா சென்னையில் காலமாகிவிட்டார். ‘‘அப்பாவுக்கு வயசாகிடுச்சு. அவரோட ஆசைப்படி சொந்த ஊர் கோவில்பட்டியில இறுதிச் சடங்கு நடந்திருக்கு. என் வளர்ச்சியைப் பார்த்து எப்பவும் சந்தோஷப்படுறவர் அவர்’’ என கண்கள் கலங்கி நெகிழ்கிறார் விவேக்.

மணிரத்னத்தின் வேகம் பற்றித்தான் இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சாக இருக்கிறது. துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்கிறார்கள். பிரகாஷ்ராஜ், பி.சி.ஸ்ரீராம் என அவருக்கு நெருக்கத்தில் உள்ளவர்களே, மணியின் ஸ்பீடைக் கண்டு வியந்திருக்கிறார்கள்.

கீதாஞ்சலி செல்வராகவன், தன் கணவர் கொடுத்த ஸ்கிரிப்ட்டை வைத்துக்கொண்டு ‘மாலை நேரத்து மயக்கம்’ பாதிப் படத்திற்கு மேல் முடித்துவிட்டார். ‘ரஷ்’ பார்த்த செல்வா, ‘‘எனக்கு வாரிசு நீதான்’’ என புகழ்ந்து தள்ளிவிட்டார். கல்யாண மேடையில் வெட்கப்பட்டதை விட அன்றுதான் சந்தோஷப்பட்டிருக்கிறார் கீதாஞ்சலி. ஐஸ்வர்யா, சௌந்தர்யா வரிசையில் இப்போது கீதாஞ்சலியும் சேர்ந்துவிட்டார்.

அம்மா ஆகியிருக்கிறார் ஜெனிலியா. கடந்த 2012ல் திருமணம் செய்துகொண்ட ஜெனிலியா-ரித்தேஷ் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. திடீர் உடல்நலக் குறைவால் மறைந்த தன் அப்பாவும் முன்னாள் மகாராஷ்டிர முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மீண்டும் வந்து பிறந்திருப்பதாக நெகிழ்கிறார் ரித்தேஷ்!

‘உதவி இயக்குநர் வேலை காலி இல்லை. செப்டம்பர் 2015க்கு பிறகு தொடர்பு கொள்ளவும்’ என தன் அலுவலகக் கதவில் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார் மிஷ்கின்.

ஒரு படத்தை முடித்துவிட்டு உடனே அடுத்த படத்தை அறிவிப்பது ஹரி பாணி. கதை விவாதத்திற்காக இதுவரை தமிழ்நாட்டைக்கூட தாண்டாத ஹரி, அடுத்து சூர்யாவை வைத்து இயக்கும் படத்தின் கதைக்காக சுவிட்சர்லாந்து பறந்திருக்கிறார். ‘சிங்கம் பார்ட் 3’யாகக் கூட இருக்கலாமோ?

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், மீண்டும் ஜெய்க்கு ஒரு கதை ரெடி பண்ணி, ஷூட்டிங்கையும் முடித்துவிட்டார். படத்தின் பெயர் ‘வலியவன்’. ஹீரோயின் ஆண்ட்ரியா. சென்னையில் துவங்கி டெல்லி வரை நடக்கும் கதை இது.

விஜய்சேதுபதி தான் நடிக்கும் ‘ஆரஞ்சு மிட்டாயை’ அவரே தயாரிக்கிறார். இப்போது அவர் நடிக்காமல் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற பெயரில் அடுத்த படம் தயாரிக்கிறார். அதனால் புரொடியூசர்கள் தவிர டைரக்டர்களும் அவரது அலுவலகத்தை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

‘மாஸ்’ படத்தில் சூர்யாவின் இன்னொரு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்க வேண்டியிருந்தது. அவர் அடிக்கடி லண்டனுக்குப் பறந்து விடுவதால், அவரைக் கண்டுபிடிக்கவே நேரம் ஆகிவிடுகிறதாம். அதனால் தம்பி கார்த்தியின் ‘சகுனி’ ஜோடி பிரணிதா அந்தக் கேரக்டரில் நடிக்கிறார். எமிக்கு ‘ஸாரி’ சொல்லி விட்டார்கள்.