திரும்ப வருமா தேரிக்காட்டு ரயில்? : நினைவலைகள்





நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது. வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே திசையன்விளை, குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன. பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி... ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடியதென்றால் நம்பவா முடிகிறது? காலச் சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினால், கருப்பட்டிக்காகவே ஓடிய ஒரு ரயிலின் கண்ணீர்க் கதை நம்மை ஆசுவாசப்படுத்தும்...

70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன. அந்த ரயிலின் பின்னணி இதுதான்...

சென்னையைத் தலைமையிடமாக கொண்ட ‘பாரி அன் கோ’ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. அந்த ஆலையின் சரக்குப் போக்குவரத்துக்காக ‘குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே’ (கே.எல்.ஆர்) என்ற பெயரில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கும் தனித்தனியாக சுமார் 46 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உருவாக்கப்பட்டது. இந்த தேரிக்காட்டு ரயிலின் பயணம், அந்த கிராமங்களில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்க ஆரம்பித்தது...



‘‘அந்த ரயில இப்ப நெனச்சாலும் மனசு நெறஞ்ச மாதிரி இருக்கு. பிராயத்துல மாட்டு வண்டில தொங்கிட்டு போறதுக்கே நாங்க ரொம்ப சந்தோஷப்படுவோம். பாரி கம்பெனிக்காரன் ரயிலும் அதே வேகத்துலதான் போகும் அதுல ஏறி ஏறி இறங்குறதுன்னா ஏக குஷிதான். நான் பிச்சிவிளை ஸ்டேஷன்ல 6 மாசம் மட்டும் ஸ்டேஷன் மாஸ்டராவே இருந்திருக்கேன். மாசம் 23 ரூவா சம்பளம். அன்னைக்கி அது பெரிய காசு’’ என படுக்கையில் இருந்து எழ முடியாமல் விசும்பினார் 97 வயதாகும் ஜெயமுருகையா.

‘‘இன்னிக்கி நீங்க பார்க்கிற திசையன்விளையே வேற தம்பி. அந்தக் காலத்துல இதே தேரிகாட்ல பயினி (பதநீர்) வாசனை கமகமன்னு தூக்கும். பொழுது விடியறதுக்குள்ளே பயினிய கொண்டாந்து பாரிக்காரன் வச்சிருக்கிற தொட்டியில அளந்து ஊத்திடுவாங்க. தேரிக்காட்டு பயினிய கொண்டு போறதுக்கு அவங்க திசையன்விளைல இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாயே பதிச்சிருந்தாங்க. குழாயில பயினிய ஊத்தி விட்டா சீனி ஆலைக்குப் போய் சேந்துரும். இதே தேரி காட்ல அப்ப 50 பனமரம் இருந்தா போதும், ஆயுசுக்கும் நிம்மதி!’’ என பழங்கால நினைவுகளை அசை போட்டார் திசையன்விளை கருப்பட்டிக் கடை உரிமையாளர் ஜெயராமன்.

பதனீரும், கருப்பட்டியுமே தேரிக்காட்டு ரயிலின் ஆரம்பகால தேடலாக இருந்திருக்கிறது. ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்தியதின் பேரில், பின்பு பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டிருக்கிறது. இரண்டு அடி அகலம் கொண்ட இந்த ரயில்பாதையில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம், ஆலந்தலை, உடன்குடி ஆகிய ஊர்களில் ரயில் நிலையங்கள் இருந்தன.

‘‘திசையன்விளையில உள்ள எங்க பாட்டி வீட்டுக்கு 2, 3 முறை நான் அதுல போய் வந்திருக்கேன். அப்போ எனக்கு 6 வயசிருக்கும். என் டிரவுசரை கழட்டிட்டுத்தான் எங்கப்பா அந்த வண்டியில கூட்டிட்டுப் போனாரு. ஏன்னா, அம்மணமா போற சின்ன புள்ளைக்கு டிக்கெட் கெடையாது. கால் துட்டுக்கு அந்த ரயில்ல ஓமப்பொடி கொடுப்பாங்க. அப்படியே நாக்குல எச்சி ஊறும். அந்த ட்ரெயின்ல குடிக்கிறதுக்கு கலரு கேட்டு நா அழுதுருக்கேன்’’ என்னும் கொம்மடிக்கோட்டை சிம்சோனுக்கு இப்போது 83 வயது.

‘‘குலசேகரன்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், ‘பானி’ எனப்படும் களி போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சீனியாக மாற்ற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது’’ எனக் குறிப்பிடுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன்.


தெற்கு ரயில்வேயின் வரைபடத்தில் தேரிக்காடுகள் இடம் பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த ரயிலின் முடிவும் சோகம் நிரம்பியதுதான். 1930களில் சீனி ஆலைக்குச் சென்ற பதநீரில் சிலர் குளத்து நீரையும் கலந்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆலைக்கு சென்ற பதனீரில் மீன்கள் செத்து மிதந்ததில் பாரி நிறுவனத்தார் டென்ஷன் ஆகியிருக்கின்றனர். சுதந்திரப் போர் மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்திருக்க, இரண்டாம் உலகப் போர் உலகைச் சூழ்ந்திருக்க, தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 1940ம் ஆண்டு இந்த ரயில் சேவையை பாரி நிறுவனத்தார் படிப்படியாக நிறுத்திவிட்டனர்.

‘‘யார் விட்ட சாபமோ எல்லாம் போச்சு. 29 ஏக்கர் 71 சென்ட்ல எங்க ஊருல சீனி ஆலை பிரமாண்டமா இருந்துச்சு. அதுல வேலை செஞ்சவங்களும், ரயில் டிரைவர்களும் எங்க ஊருக்காரங்கதான். இன்னிக்கு ஆலை இருந்த சுவடு தெரியலை. உழக்குக்கு ஆசைப்பட்டு பதக்கும் பாழா போன கதை மாதிரி, ஓடுன ரயில ஓச்சிக் கட்டிட்டாங்க’’ என ஆதங்கப்பட்டார் குலசேகரன்பட்டினத்தைச் சேர்ந்த முத்து.

‘‘என் அப்பா இசக்கிதாஸ் மணப்பாட்டில் ஆசிரியராக வேலை செய்தார். எங்கள் ஊரைச் சேர்ந்த குழைக்கநாதர் என்பவர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகவும், மாடன் என்பவர் ரயில்வே ஊழியராகவும் வேலை செய்தனர். இன்று அந்த ரயில் தடமே மறைந்து விட்டது. அந்த தண்டவாளங்கள் இன்றும் பல வீடுகளில் உத்திரங்களாகவும், கதவு நிலைகளாகவும் பயன்படுத்தப்
படுகின்றன. மறைந்த அந்த ரயிலின் பயணங்கள் இன்றும் நினைவுகளில் நிழலாடுகின்றன. இந்த நிழல¢ எப்போது நிஜமாகுமோ!’’ - குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாகராஜனின் ஆதங்கம் இது.



பாரி நிறுவனம் ரயிலை நிறுத்தினாலும், பயணிகளுக்கான ரயில் சேவையை தொடர்ந்து நடத்த ஆள் தேடியது. நெல்லை மாவட்ட நிர்வாகம் ரயில் சேவையை வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்துக்கு வங்கிகளும் கடன் கொடுத்து உதவுவதாக வாக்குறுதி அளித்தன. இருப்பினும் இத்திட்டம் கைகூடவில்லை.

‘தேரிக்காட்டு ரயில் திரும்ப வருமா?’ - இப்பகுதியில் குடியிருக்கும் லட்சோப லட்ச மக்களின் மனதில் இக்கேள்வி இப்போதும் நிழலாடுகிறது.

- க.முத்துகிருஷ்ணன், ஸ்ரீ.மாசானமுத்து
படங்கள்: மா.கண்ணன்

அன்றே இயங்கிய சிறப்பு ரயில்!
வர்த்தக வளம்கொழித்த திசையன்விளை வாரச்சந்தை அக்காலத்தில் திருவிழா போல் நடக்குமாம். வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று திருச்செந்தூரில் இருந்து திசையன்விளைக்கு ‘சிறப்பு ரயில்’ கூட இயக்கப்பட்டதாம். திசையன்விளை- திருச்செந்தூர் இடையே மூன்று மணிநேரப் பயணத்துக்குக் கட்டணம், 13 அணாவாக (78 பைசா) இருந்தது. இதே கால கட்டத்தில் திருநெல்வேலியிருந்து திருச்செந்தூருக்கு தென் இந்திய ரயில்வே நிறுவனம் மீட்டர்கேஜ் ரயில்களை இயக்கியதும் குறிப்பிடத்தக்கது.

நினைவுப் பதிவுகள்!
தேரிக்காட்டு ரயிகள் 30 முதல் 40 குதிரை சக்தி கொண்ட நிலக்கரி எஞ்சின்களில் இயங்கின. அப்போது பயன்படுத்தப்பட்ட நிலக்கரி துண்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை குலசேகரப்பட்டினம் கடற்கரையில் கிடந்துள்ளன. இந்த ரயிலின் நினைவாக, குலசேகரன்பட்டினம் பி.எஸ்.எம் நடுநிலைப் பள்ளியில் இன்றும் தண்டவாளத் துண்டு ஒன்றை பாதுகாத்து வருகின்றனர். தேரிக்காட்டு ரயிலின் டிக்கெட்டுகள் சென்னை பாரீஸ் கார்னரில் உள்ள பாரி நிறுவன தலைமையகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.