அரங்கத்துக்குள் முடங்கிக் கிடந்த தமிழ்க் கவிதையை கடலோர மணல்வெளிக்குக் கொண்டு வந்தவர். அங்கீகாரம் தேடியலைந்த இளைஞர்களுக்கு களம் தந்து, கரம் தந்து படைப்பாளிகளாக்கியவர். உலகெங்கும் நடந்துவரும் திறந்தவெளிக் கவியரங்கங்களுக்கு முன்னோடி. காலம் குலைக்க இயலாத அற்புதமான திரைப்படப் பாடல்களை எழுதியவர். 48 ஆண்டுகளாக ‘முல்லைச்சரம்’ இதழை இடைவிடாது நடத்தி இளம் கவிஞர்களை ஊக்குவிப்பவர். வாராவாரம் இலக்கிய, இலக்கண வகுப்புகள் நடத்தி தமிழ் வளர்ப்பவர். எல்லாவற்றுக்கும் மேலாக, பாவேந்தர் பாரதிதாசனின் முதன்மை மாணவர், உதவியாளர். கவிஞர் பொன்னடியானுக்கு இப்படி ஏராளமான அடையாளங்கள் உண்டு.
எவ்வித சர்ச்சைக்குள்ளும் சிக்காமல், தனக்கென ஒரு தனிவட்டம் போட்டுக்கொண்டு இலக்கியம் செய்யும் பொன்னடியான், இன்றைய பல படைப்பாளிகளுக்கு ‘கடற்கரைக் கவியரங்கம்’ மூலம் ராஜபாதை போட்டுத் தந்தவர். மெரினா கடற்கரையில், கண்ணகி சிலையின் பின்னால் ஏழெட்டு கவிஞர்களோடு தொடங்கிய கடற்கரைக் கவியரங்கம் இப்போது 500வது மாதத்தை நிறைவு செய்திருக்கிறது.
வெறும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயலே முதலென தமிழ்ப் பணியாற்றிவரும் பொன்னடியான், 73 வயதிலும் தளராத தமிழ் பேசுகிறார்.
‘‘மாணவப் பருவத்திலேயே பாவேந்தரை வரிந்தேற்றுக் கொண்டவன் நான். 17 வயதில் குளித்தலையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரைச் சந்தித்தேன். அப்போது பாவேந்தர் ‘பாண்டியன் பரிசு’ காவியத்தை திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்தார். அடிக்கடி அவரைச் சந்திக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் ‘என்னுடனே இருந்து விடு’ என்று கூறி, தன் உதவியாளராகவும், பட நிறுவன நிர்வாகியாகவும் வைத்துக் கொண்டார். பின் ‘குயில்’ இதழைத் தொடங்கிய பிறகு, அதற்கு என்னை உதவிஆசிரியராக நியமித்தார். அவருடைய கவிதையை எப்படி வெளியிடுவாரோ, அதைப்போலவே என் கவிதைகளையும் வெளியிடுவார். அவர் காலத்தில் வாழ்வதே பெரும்பேறாகக் கருதிய எனக்கு, அவர் நிழலிலேயே வாழ இடம் கிடைத்தது பெரும் கொடுப்பினை. 62ல் ‘அனைத்துலக தமிழ்க் கவிஞர் மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பாவேந்தருடைய மறைவுக்குப் பிறகு மீண்டும் அந்த மன்றத்தைப் புதுப்பித்து, அண்ணா தலைமையில் ஆண்டு விழாவை நடத்தினேன். புதுக்கவிதை தளத்தில் பாவேந்தர் கனவு கண்ட புதிய வீச்சை உருவாக்கி, வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் 66ல் ‘முல்லைச்சரம்’ இதழை ஆரம்பித்தேன். இன்றைக்கு முன்னணியில் இருக்கிற பல படைப்பாளிகளின் முதல் அச்சுப் படைப்பு அதில்தான் வந்தது.
அக்காலத்தில் கவியரங்கம் என்பது புழுக்கமான அறைக்குள் பத்துப் பதினைந்து பேர் கூடிக் கலைகிற சம்பிரதாயமாகத்தான் இருந்தது. அதில் எனக்கு மிகுந்த ஆதங்கம் உண்டு. கவியரங்கத்தை வெளியில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் 1971 ஜூன் 13ம் தேதி கடற்கரைக் கவியரங்கத்தைத் தொடங்கினேன். டாக்டர் நாவேந்தன், பேராசிரியர் வான்முகில் உள்ளிட்ட நண்பர்கள் துணை நின்றார்கள். திரைப்பட பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். அன்று தொடங்கிய தவம் இது. மாதம்தோறும் முதல் ஞாயிறு, மாலை 6 மணிக்கு அலைச் சத்தத்தை தாண்டி ஒலிக்கும் கவிதைக்குரல்கள். மழை, புயல், வெள்ளம், வெயில் என எதற்காகவும் கவியரங்கம் நிறுத்தப்படவில்லை. ‘முல்லைச்சரம்’ இதழில் செய்தி வெளியிடுவேன். ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியில் செய்தி வரும். அவ்வளவுதான். யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சாதி, சமய, அரசியல் வன்மமற்ற கவிதைகளை வாசிக்கலாம். வாசிக்கும் கவிதைகள் திறனாய்வு செய்யப்படும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவோம்; நல்லவற்றைப் பாராட்டுவோம். ஆண்டின் இறுதியில் கவிதைகளைத் தொகுத்து நூலாக்குவோம். இப்போது 100க்கும் மேற்பட்டவர்கள் கூடுகிறார்கள். அதே எளிமை. இடம் மட்டும் மாறியிருக்கிறது. திருவள்ளுவர் சிலையின் பின்புறம்.
கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பாலகுமாரன், புலமைப்பித்தன், முத்துலிங்கம், பழனிபாரதி, சுப.வீரபாண்டியன் என பல படைப்பாளிகள் கடற்கரை கவியரங்கில் தங்கள் தமிழை கூர் தீட்டிக்கொண்டார்கள். ‘காற்று வாங்கப் போனேன்... ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்று கடற்கரை கவியரங்கத்தை மனதில் வைத்தே பாட்டு எழுதியதாகச் சொல்வார் வாலி.
இன்று உலகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் சோலைக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், பூங்கா கவியரங்கம், குளக்கரை கவியரங்கம், மாந்தோப்புக் கவியரங்கம் என திறந்தவெளிகளில் தமிழ்க்கவிதை ஒலித்துக் கொண்டிருக்கிறது. அனைத்துக்கும் தாய், எங்கள் கடற்கரை கவியரங்கமே என்கிறார்கள் படைப்பாளிகள். என் ஆயுளுக்குள் இன்னும் இதை பல படிகள் மேலெடுத்துச் செல்ல வேண்டும்...’’ என்கிறார் பொன்னடியான். ‘போடா போடா புண்ணாக்கு’, ‘என் தாயென்னும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே’ உள்பட இவர் எழுதிய ஒவ்வொரு பாடலும் தனித்துவமானது.
செயலும், வாழ்வும் தமிழெனவே வாழ்கிற பொன்னடியானை தமிழ் தானுள்ளவரை மறக்காது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்