கவிதைக்காரர்கள் வீதி





ஞாபங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்
நிறைய தொலைபேசி அழைப்புகள்
நீங்கள் யாரென்னும் கேள்வியோடு
நிராகரிக்கப்படலாம்
நிலுவையில் இருக்கும்
நிறைய வழக்குகள்
தள்ளுபடி செய்யப்படலாம்
நாளைய நம்பிக்கைகளின்
வேர்கள்
நடுக்கம் காணலாம்.
உறவுகளுக்குள்ளான
உறுதிமொழிகள்
உடனுக்குடன்
ஆவணப்படுத்தப்படலாம்.
பிறந்த நாள்
பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம்
ஒடுங்கியோ அல்லது
ஓய்ந்தோ போகலாம்.

அந்தந்த கணங்களில்
வாழ
அநேகம் பேர்
ஆயத்தமாகலாம்
நிகழ் கணங்களை
உடனுக்குடன்
பதிவு செய்ய வேண்டிய
கட்டாயம்
கவிதைகளுக்கு நேரலாம்
ஞாபகங்கள் இல்லாது
போகுமொரு நாளில்
நிறைய துரோகங்கள்
மன்னிக்கப்படலாம்
அல்லது
மறக்கப்படலாம்

செல்வராஜ் ஜெகதீசன்