உலகின் மிகப்பெரிய பள்ளி!
இந்தியா முழுவதும் சுமார் 15 லட்சம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் அடங்கும். இந்தப் பள்ளிகளில் சுமார் 25 கோடி மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்; 98 லட்சம் ஆசிரியர், ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் பற்றாக்குறை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. விஷயம் இதுவல்ல.
 உலகிலேயே மிகப்பெரிய பள்ளியும் கூட இந்தியாவுக்குள்தான் இருக்கிறது. ஆம்; லக்னோவில் இயங்கி வரும் சிட்டி மான்டிசோரி ஸ்கூல் எனும் சிஎம்எஸ் பள்ளிதான் உலகிலேயே மிகப்பெரிய பள்ளி என்று கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.
 கடந்த ஆகஸ்ட் 2023ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி, சிஎம்எஸ் பள்ளியில் 61,345 மாணவ - மாணவிகள் படித்து வந்தனர். இப்போது 65 ஆயிரம் மாணவ - மாணவிகள் படிக்கின்றனர். 3,500 ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அலுவலர்கள் இப்பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 3900 மாணவ - மாணவிகள் பொதுத்தேர்வில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
ஆங்கில வழிக் கல்விமுறையில் இயங்கி வரும் சிஎம்எஸ் பள்ளியில் கிண்டர் கார்டனிலிருந்து பிளஸ் 2 வரை உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வியாளரான ஜெகதீஷ் காந்தியும், அவரது மனைவி பார்தி காந்தியும் இணைந்து 1959ம் வருடம் சிஎம்எஸ் பள்ளியை உருவாக்கினார்கள். லக்னோவில் இருந்த ஜெகதீஷ் காந்தியின் வீட்டிலிருந்த ஒரு சிறிய அறையில் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
300 ரூபாய் முதலீட்டில் உருவான சிஎம்எஸ் பள்ளியில் முதலில் ஐந்து மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். ஐந்து மாணவர்களுடன் ஓர் அறையில் ஆரம்பிக்கப்பட்ட சிஎம்எஸ் பள்ளி, 66 வருடத்தில் 65 ஆயிரம் மாணவர்களுடன் 1000க்கும் மேலான வகுப்பறைகளைக் கொண்ட மிகப்பெரிய பள்ளியாக அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட இடம் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், வளர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.பிரமாண்டமான வளாகம், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமல்ல இப்பள்ளியின் அடையாளம். இந்தியாவில் சிறப்பான கல்வியை வழங்குகின்ற பள்ளிகளில் இதுவும் ஒன்று.
2002ம் வருடம் சிஎம்எஸ் பள்ளியின் கல்விச் செயல்பாட்டை கௌரவிக்கும் விதமாக ‘யுனெஸ்கோ’ நிறுவனம் விருது கொடுத்தது. தவிர, தலாய் லாமாவிடமிருந்து ‘மனிதத்தின் நம்பிக்கை’ விருதையும் பெற்றிருக்கிறது இந்தப் பள்ளி. இதுபோக ஏராளமான கௌரவங்களையும், விருதுகளையும் அள்ளியிருக்கும் சிஎம்எஸ், லக்னோ முழுவதும் இருபது கிளைகளுடன் இயங்கி வருகிறது.
த.சக்திவேல்
|