அப்பா ஆக்‌ஷன் டைரக்டர்...நான் காமெடி படம் இயக்கியிருக்கேன்!



90களில் புகழ் பெற்ற இயக்குநராக கார்த்திக் நடித்த ‘அமரன்’, சிம்ரன் நடித்த ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ போன்ற படங்களை இயக்கியவர் கே.ராஜேஸ்வர். தற்போது இவருடைய மகன் விக்ரம் ராஜேஸ்வர் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் வழியாக இயக்குநராகியுள்ளார். இதில் வைபவ் நாயகனாக நடித்துள்ளார்.
‘‘ஹீரோவும் அவருடைய நண்பர்களும் கொள்ளை அடிச்ச பணத்தைத் தொலைத்து விடுகிறார்கள். அந்தப் பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை வரும்போது ஹீரோவும் அவருடைய நண்பர்களும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளோம்...’’ புன்னகைக்கிறார் விக்ரம் ராஜேஸ்வர்.

ஹீரோ செலக்‌ஷன் எப்படி நடந்துச்சு?

நானும் வைபவும் நெருங்கிய நண்பர்கள். சேர்ந்து படம் பண்ணலாம் என்பது பல நாள் திட்டம். காமெடிப் படம் என்பதால் வைபவ் பொருத்தமாக இருந்தார். ஏனெனில் அது அவருடைய ஏரியா. அந்தவகையில் என்னுடைய முழு முதல் சாய்ஸ் அவர் மட்டுமே.
ஹீரோயின் அதுல்யா ரவி. தமிழ் பேசும் பெண்ணாக இருந்தால் பெட்டராக இருக்கும்னு நெனைச்சேன். படத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்கிறார்கள். டைம் குறைவாகவே இருந்துச்சு. வேற மொழி பேசக் கூடியவர்களாக இருந்தால் ரீடேக் நிறையப் போகும். அந்தவகையில் அதுல்யாவிடமிருந்து  சிறந்த ஒத்துழைப்பு கிடைச்சது.

ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில், மணிகண்டா ராஜேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், சாம்ஸ், விபின் என எல்லோருக்கும் படம் முழுவதும் வரக்கூடிய ரோல். ஹீரோயின் அப்பாவாக லிவிங்ஸ்டன் சார் வர்றார். ரெடின் கிங்ஸ்லி பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் கால்ஷீட் கொடுத்தார். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட்.மறைந்த கராத்தே வீரர் ஹுசைனி இருக்கிறார். அப்பா இயக்கிய ‘அமரன்’ அவருடைய முதல் படம். துரதிர்ஷ்டவசமாக இது அவருடைய கடைசிப் படமாக மாறிடுச்சு.

மியூசிக் யார் ?

இமான் சார் என்னுடைய ஸ்கூல் சீனியர். அவர் ஸ்டைலில் இல்லாமல் என்னுடைய ஸ்டைலில் கேட்டேன். பெரிய படங்கள் பண்ணியவர். ஈகோ இல்லாமல் லத்தீன் அமெரிக்க ஸ்டைலில் பாடல்கள் வேணும்னு கேட்டதும் அதைச் சிறப்பாகப் பண்ணிக் கொடுத்தார். கேமரா டிஜோ டோமி. ‘நிறங்கள் மூன்று’ பண்ணியவர். லைட்டிங், கேமரா மூவ்மெண்ட்ஸ் என எல்லாமே கதையோடு கலந்திருக்கும். தயாரிப்பு பாபி பாலசந்திரன்.

அப்பாவிடமிருந்துதான் டைரக்‌ஷன் கத்துக்கீட்டிங்களா?

‘கோவில்பட்டி வீரலட்சுமி’ ஷூட்டிங் நடந்தப்ப அப்பா என்னையும் அழைத்துச் சென்றார். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கும்போதுதான் டைரக்‌ஷன் மீது இன்ஸ்பிரேஷன் வந்துசுச்சு. அப்பாவிடம் என் விருப்பத்தை சொன்னதும் புத்தகங்கள் படிக்கச் சொன்னார். நிறைய புக்ஸ் படிச்சு, படிச்சு சினிமாவை கத்துக்கிட்டேன். அப்பா பிசியாக இருந்தபோது நான் சின்னப் பையன். புக்ஸ், படங்கள் பார்த்துதான் சினிமா கத்துக்கிட்டு முதலில் விளம்பர படங்கள் செய்ய ஆரம்பிச்சேன்.

இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள் செய்துள்ளேன்.இது என்னுடைய முதல் படம். எல்லோரும் ‘அப்பா ஆக்‌ஷன் படங்கள் பண்ணியவர். நீங்கள் காமெடி படம் எப்படி’ என்று கேட்டார்கள். எனக்கும் ஆக்‌ஷன் படங்கள் பிடிக்கும். இது தற்செயலாக நடந்துச்சு. இது அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம். அந்த இன்ஸ்பிரேஷன்ல இந்தக் கதை பண்ணினேன். ஆடியன்ஸை நிச்சயம் என்டர்டெயின் பண்ணும் என்ற நம்பிக்கை இருக்கு.

எஸ்.ராஜா