எலான் மஸ்க்...ஹீரோவா... வில்லனா... காமெடியனா..?



உலகளவில் இப்போது ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுக்கொண்டிருப்பவை இரண்டு போர்கள். ஒன்று உக்ரைன் - ரஷ்யா இடையிலானது. மற்றொன்று காஸா - இஸ்ரேல் இடையிலானது.
இவ்விரு போர்களுமே பிரதேசங்களுக்காக நடப்பவை; யாருடைய ஆதிக்கத்தில் அந்நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக அரங்கேறுபவை.

ஆனால், கடந்தவாரம் உலகையே சூடுபிடிக்க வைத்த போர் ஒன்று இருக்கிறது. அது பிரதேசத்துக்கானதல்ல, நிலத்துக்கான உரிமை அல்ல. மாறாக இரு தனி மனிதர்களுக்கு இடையிலானது.
ஆனால், இது தனிப்பட்ட இரண்டு மனிதர்களுக்கு இடையிலான பிரச்னை - சண்டையாக மட்டுமில்லை என்பதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம். அதனால்தான் இரு தனி
மனிதர்களுக்கு இடையில் நடக்கும் இந்த யுத்தம் - போர் சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஏனெனில் இவ்விரு மனிதர்களால் அவர்கள் வசிக்கும் அமெரிக்கா மட்டுமல்ல உலகத்தையே மாற்றும் வாய்ப்பிருக்கிறது. எனவேதான் மொத்த உலகமும் இப்பிரச்னையை உன்னிப்பாக கவனிக்கிறது.புரிந்திருக்குமே... அவ்விரு தனிமனிதர்கள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப்பும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க்கும்.

டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகியிருக்கிறார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத பெரும் தொகையை நன்கொடையாக வழங்கினார் எலான் மஸ்க்.

மட்டுமல்ல... டிரம்ப்பின் வெற்றிக்காக, தனது சமூகவலைத்தளமான ‘எக்ஸ்’ஸை - முன்பு டுவிட்டர் - எலான் மஸ்க் பயன்படுத்தினார்.தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதும் அவரைவிட எலான் மஸ்க்தான் அதிகம் மகிழ்ந்தார்.தான் வெற்றி பெற உதவிய எலான் மஸ்க்குக்கு அமெரிக்க அரசாங்கத்தில் உயர்பதவியையும் வழங்கினார். சொல்லப்போனால் மஸ்க்குக்காகவே DOGE எனப்படும் அரசாங்க செயல்திறன் துறையை உருவாக்கினார்.

இந்த DOGEன் பரிந்துரையை ஏற்று அமெரிக்க அரசாங்க அலுவல்களில் பல மாற்றங்கள், ஆட்குறைப்புகள் அரங்கேறின. இது அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. என்றாலும் மஸ்க்கின் ஆதிக்கம் அமெரிக்க அரசாங்கத்தில் டிரம்ப்பின் உதவியுடன் வலுவாகவே இருந்தது.இச்சூழலில்தான் டிரம்ப்பின் பட்ஜெட் மசோதாவை கடுமையாக விமர்சித்தார் எலான் மஸ்க். இதற்கு டிரம்ப் எதிர்வினையாற்ற... இருவருக்கும் இடையிலான வார்த்தைப்போர் பகிரங்கமாக வெடித்தது.

எந்த ‘எக்ஸ்’ தளம் வழியாக அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றிபெற எலான் மஸ்க் உதவினாரோ... அதே ‘எக்ஸ்’ தளம் வழியாக டிரம்ப்பை அதிர்ச்சியூட்டும் வார்த்தைகளில் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி தரும்விதமாக எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு கொடுத்து வரும் ஆதரவை நிறுத்தும் என பதிலடி கொடுத்தார் டிரம்ப்.

போதாதா... மஸ்க்கின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் பங்குகள் கடும்வீழ்ச்சி அடைந்தன.

இது அமெரிக்க பொருளாதாரத்தில் எதிரொலிக்கத் தொடங்கவே, அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், வெள்ளை மாளிகை தலைமைப் பணியாளர் சூசிவைல்ஸ் மற்றும் கிரிப்டோ ஆலோசகர் டேவிட்சாக்ஸ் ஆகியோர் எலான் மஸ்க்கை அழைத்து இந்தப் பிரச்னையை சரி செய்யுமாறு எடுத்துச் சொன்னார்கள். 

இதனையடுத்து, எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் பேசியதுடன் வருத்தம் தெரிவித்ததாக செய்திகள் கசிகின்றன. அத்துடன் ‘எக்ஸ்’ தளத்தில் டிரம்ப்பை எதிர்த்து, தான் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளையும் எலான் மஸ்க் நீக்கிவிட்டார்.

இப்போது சரிந்த எலான் மஸ்க் நிறுவன பங்குகள் ஏறுமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன.டிரம்ப்பும் முறுக்கிக்கொள்ளவில்லை. ‘எலான் மஸ்க், தான் பேசியதற்கு வருந்துகிறார் என்று நினைக்கிறேன். 

அவருக்கு மன்னிப்பு உண்டு’ என செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டார். இச்சூழலில்தான் உலகெங்கும் அனைத்து மொழிகளிலும் ஒரு விஷயம் அலசப்பட்டு வருகிறது. அது... எலான் மஸ்க் ஹீரோவா வில்லனா என்ற விவாதம்தான்.

மஸ்க்கின் சொந்த நாடு தென் ஆப்பிரிக்கா. இனவெறிக்கான உதாரணமாக ஒருகாலத்தில் சுட்டிக்காட்டப்பட்ட கண்டம். பிறகு கருப்பின மக்களின் விடுதலைப் போராட்டம், கலப்பினங்கள் சுமுகமாக வாழ்வதற்கான சட்ட திட்டங்களால் அந்த கண்டம் அமைதி வழியில் செல்லத் தொடங்கியது. இந்தக் கண்டத்தில் பிறந்த எலான் மஸ்க்கின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. சூட்டிகையாக இருந்த எலான், தன் 12 வயதிலேயே ஒரு வீடியோ கேம் ப்ராடக்ட்டை உருவாக்கி அதை 500 டாலருக்கு விற்றார்!

17 வயதில் கனடாவில் குடியேறிய மஸ்க், சிறிது காலத்துக்குப் பிறகு 1990களில் கல்லூரிப் படிப்புக்காக அமெரிக்கா வந்தார். கல்லூரிப் படிப்பு கசக்கவே தன் 28வது வயதில், தான் உருவாக்கிய ஜிப் 2 (zip 2) என்ற ஒரு ஸ்டார்ட் அப் தொழில்நுட்பத்தை 300 மில்லியன் டாலருக்கு விற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தான் உருவாக்கிய பேபால் (paypal) என்ற பணப் பரிவர்த்தனை appஐ 1.5 பில்லியன் டாலருக்கு விற்றார்.

இப்படி மஸ்க் மேற்கொண்ட எண்ணற்ற தொழில்நுட்ப முயற்சிகள்தான் அவரை அமெரிக்காவின் தொழில்நுட்பப் புரட்சியாளராக மாற்றியது.

ஆனால், மஸ்க் உருவாக்கிய - உருவாக்கும் - தொழில்நுட்பத் திட்டங்களுக்கு எல்லாம் சிறப்பான எதிர்காலத் திட்டங்கள் இல்லை... அவை எல்லாமே நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கும் உத்திகள் என்ற விமர்சனம் உண்டு.

விஷயத்துக்கு வருவோம். வீடியோ கேம், ஸ்டார்ட் அப், பேபால் என்று சிறுகச் சிறுக முன்னேறிய மஸ்க் அமெரிக்காவில் குடியேறிய பிறகு விதைத்த இரண்டு பெரிய தொழில்நுட்பத் திட்டங்கள் முக்கியமானவை. அவை டெஸ்லா எலக்ட்ரானிக் கார் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் எனும் ராக்கெட் திட்டம். 

ஸ்பேஸ் எக்ஸ் திட்டம் பற்றி மஸ்க்கிடம் கேட்கப்பட்டபோது, ‘உலகம் சீக்கிரம் அழிந்துவிடும். அப்போது முதியோரும், நோயாளிகளையும் காப்பாற்ற இப்பொழுதே செவ்வாய்க் கிரகத்தை ஆக்கிரமிக்க வேண்டும். இதற்குத்தான் ராக்கெட் தொழில்நுட்பம்’ என்றார்.

மஸ்க்கின் ஒவ்வொரு தொழில்நுட்பத் திட்டத்தின் ஆரம்பமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், உள்ளே நோண்டிப் பார்த்தால் பெரிய பாதிப்பு அல்லது நஷ்டம் இருக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள். 

உதாரணமாக சுற்றுச்சூழலைக் கெடுக்காத டெஸ்லா எலக்ட்ரானிக் காருக்கு அமெரிக்க நடுத்தர மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தாலும் அந்தக் காருக்கான பேட்டரியை தயாரிக்கத் தேவையான கனிமங்களை பூமியிலிருந்து எடுக்கும்போது பெரிய ஆபத்துகள் நிகழும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள். காங்கோவில் இதனால் பல குழந்தைகள் மடிந்துபோனதை இதற்கு ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறார்கள்.

சரி... ஒருகாலத்தில் டிரம்ப்பின் எதிராளிகளில் முக்கியமானவராக இருந்த மஸ்க், எப்படி அவருக்கு நண்பரானார்? இப்போது மீண்டும் எதிரானார்? தொடர்ந்து ஏன் மன்னிப்புக் கேட்டு நட்புக்கரம் நீட்டுகிறார்?

2008, 2012ம் ஆண்டுகளில் அப்பொழுது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை ஆதரித்தார் மஸ்க். மட்டுமல்ல, 2016ல் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்தார். 2020ல் ஜோ பைடனை ஆதரித்தார். இவர்கள் எல்லோருமே அமெரிக்காவின் டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், 2016ம் ஆண்டு டெமாக்ரடிக் கட்சிக்கு எதிராக இருக்கும் ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப்தான் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபரானார்.

இத்தேர்தலில் டிரம்ப்பை கழுவிக் கழுவி ஊற்றியவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்தார் எலான் மஸ்க்! இப்படி இருந்தவர் சட்டென்று மாறும் வானிலையாக டிரம்ப் பக்கம் சாய்ந்ததற்கு காரணம் தனது ‘பாக்கெட்’டுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் என சிரிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உலகப் பணக்காரர்களில் முதலிடம் அல்லது முதல் மூன்று இடங்களில் இருக்கிறார் மஸ்க். உலகின் நம்பர் ஒன் தொழில்நுட்ப நிறுவனம் எனும் பெயர் அவரது நிறுவனத்துக்கு இருக்கிறது.

ஆனால், மஸ்க்கின் நிறுவனம் அல்லது நிறுவனங்கள்... உலகை விட்டுவிடுவோம்... அமெரிக்க நாட்டுக்காவது பயனுள்ளதாக இருக்கிறதா?

இல்லை என்கிறார்கள். எடுத்துக்காட்டாக டுவிட்டர் சமூகவலைத்தளத்தை வாங்கி, ‘எக்ஸ்’ என பெயர் சூட்டினார். இத்தளத்தால் மக்களுக்கு என்ன பயன்? சொல்லப்போனால் கருத்து சுதந்திரம்தான் பறிக்கப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக டுவிட் செய்யும் பதிவுகள் உடனுக்குடன் நீக்கப்படுகின்றன. 

போலவே சென்ற ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை ஆதரித்தார் மஸ்க். அத்துடன் தேர்தல் செலவாக சுமார் 288 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் எவ்வளவு வரும் என கூகுளைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். வெளிப்படையாக இங்கு எழுதினால் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல... இக்கட்டுரையை எழுதுபவருக்கும் ஹார்ட் அட்டாக் வரும்!) வாரி வழங்கினார்.

சும்மா இல்லை. டிரம்ப் அதிபரானதும் தனக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கேற்ப டிரம்ப் வெற்றி பெற்றதும் அமெரிக்க அரசின் 17 துறைகளில் இருந்து மஸ்க் நிறுவனத்துக்கு காண்டிராக்டுகள் கிடைத்தன! கூடவே DOGE துறையின் தலைமைப் பொறுப்பு.இதனால் லாபம் அடைந்தது எலான் மஸ்க் என்ற தனிமனிதர். நஷ்டமடைந்தது ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள்!

இச்சூழலில் சில துறைகளுக்கு, தொழில்களுக்கு, சேவைகளுக்கு மானியம் கிடையாது... சில துறைகளுக்கு வரிச் சலுகை கிடைக்கும் என டிரம்ப் அறிவித்தார். இதை மஸ்க் எதிர்த்தார்... எலானின் நிறுவனத்துக்கு வழங்கும் ஆதரவை டிரம்ப் நிறுத்தப் போவதாக மிரட்டினார்... மஸ்க் மன்னிப்பு கேட்டார்... என்ற நாடகங்கள் அரங்கேறி முடிந்திருக்கின்றன.

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள் தனது சுயநலத்துக்காக தலைகீழாக நிற்கவும் மஸ்க் தயங்கமாட்டார். லாபம் கிடைக்கும் என்றால் மாட்டுச் சாணத்தைக் கூட கார்ப்பரேட்மயமாக்கி விற்பார். ஆனால், மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்க மாட்டார் என்கிறார்கள்.

இது உண்மையும் கூட என மஸ்க்கின் ஆதரவாளர்களே ஆமோதிக்கிறார்கள். ஏனெனில் பேச்சுரிமை பற்றி வாய்கிழியப் பேசுவார் மஸ்க். இதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ‘பேச்சுரிமை முக்கியம். ஆனால், அது சட்டத்துக்கு உட்பட்டிருக்கவேண்டும்’ என்றார். கருத்துச் சுதந்திரம் என்பதே அது சரியோ தப்போ, அதை தீர்மானிப்பது பொது மக்கள்
தானே? அப்படி இருக்க இப்படி பிற்போக்காக மஸ்க் பேசியதை எப்படி ஏற்பதென்றே தெரியவில்லை என கையை பிசைகிறார்கள் மஸ்க்கின் ஆதரவாளர்கள்.

அதேபோல், பொதுப் போக்குவரத்தை எல்லாம் மூடிவிடவேண்டும்... அதற்குப் பதிலாக பூமிக்கடியில் போகும் அதிவேக ரயில், விமானங்களைப் பயன்படுத்தவேண்டும் என்கிறார் மஸ்க்.

ஏன் என ஒருவர் கேட்கவே, ‘பொதுப் போக்குவரத்தில் பல சீரியல் கில்லர்கள் நடமாடுகிறார்கள். இது மக்களுக்கு ஆபத்தானது’ என்றார்! கடைசியாக மஸ்க்கின் திருவாய் முத்துக்கு முத்தாய்ப்பான ஒன்று... ஈ.வி.எம் எனும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் திருட்டு நடப்பது பற்றிக் கேட்கப்பட்டபோது மஸ்க் என்ன சொன்னார் தெரியுமா?

‘எல்லாத்துலயும் திருடலாம். இது எல்லாம் ரொம்ப சாதாரணம்...’ என்றார். இப்பொழுது தலைப்பைப் படித்துவிட்டு பதில் சொல்லுங்கள்!

டி.ரஞ்சித்