சிறுகதை - நெருப்பு...



சந்தோஷ் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த இரும்புக் கட்டில் அது. நல்ல மெதுவான மெத்தையுடன் சாஃப்ட்டாக இருந்தது.  

அவன் உட்கார்ந்திருந்த இடம் வீடல்ல. ஹோட்டல் அறை. 
இரண்டு பெட் அறை.முப்பத்தி ஒன்பது வயது சந்தோஷ்  தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தரையைப் பார்த்து உட்கார்ந்திருந்தான். வெளியே மழை வருவதற்கான அறிகுறியாக சில்லென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. ஹோட்டல் ரூமை ஒட்டி இருந்த நான்கைந்து மரங்கள் காற்றுக்கு தலையை விரித்து ஆடிக்கொண்டிருந்தன.

இவன் மனதில்தான் நெருப்பு அணைந்தபின்னும் புகைந்து கொண்டிருப்பதுபோல் அனல். மனசு பூராவும் பூரான் ஓடுவது போல ஒரு குறுகுறுப்பு.உள்ளே பாத்ரூமில் பவானி குளிக்கும் சத்தம் கேட்டது.பவானி அவன் மனைவியல்ல. அவன் மேனேஜர்..பவானியை கண்டால் அவன் ஆபீசில் இருக்கும் இருபது சொச்சம் ஆண்களுக்கும் நடுக்கம். காரணம், அவள் வாயிலிருந்து வருவது வார்த்தைகள் அல்ல. விஷம். சிறிய தப்பு கூட நடக்கக் கூடாது அவளுக்கு.

ஒரு முறை தப்பாக ஸ்டேட்மென்ட் ரெடி செய்து கொடுத்த பர்ச்சேஸ் டிபார்ட்மென்ட் மோகன் மேல் அதைத் தூக்கி எறிந்தாள். அதுவும் நான்கு பேர் முன்னிலையில்.
‘‘என்ன மேன் புடுங்கற, வேலை செய்யாம?’’ இதற்கு மேல் அவள் பேசிய வார்த்தைகள் சென்சாருக்குரியவை.பக்கத்து சீட் ஸ்வேதாவிடம் சிரித்துப் பேசிய ஒரே காரணத்திற்காக மார்க்கெட்டிங் கணேசனை வேலையைவிட்டுத்தூக்கினாள்.

பத்து நிமிடம் லேட்டாக தண்ணீர் கொண்டு வந்த கணேசனுக்கு அரை நாள் சம்பளம் கட் செய்திருக்கிறாள்.இவள் வரும்போது கவனிக்காமல் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் மூன்று நாள் சஸ்பெண்ட் ஆனான். ஆபீசில் அவளுக்கு வைத்திருக்கும் பெயர் ‘பொம்பள ஹிட்லர்’. அங்கு வேலை செய்யும் பெண்களுக்குமே அவளைப் பிடிக்காது.
ஐந்தடி உயரம். சற்றே பருமனான உடல். மாநிறத்துக்கும் குறைவான நிறம். ஒரு முறைக்கு மறுமுறை பார்க்க வைக்கும் அழகோ, வசீகரமோ கிடையாது. வயது முப்பத்தைந்து. இன்னும் கல்யாணமாகவில்லை.

‘‘இந்த அழகிய எவன் கட்டிப்பான்?’’ என்பார்கள் ஆபீசில் இருந்த பெண்களே. அந்த ‘அழகி’யில் அழுத்தமும், ஏளனமும் இருக்கும்.ஆனால், வேலையில் திறமைசாலி. மார்க்கெட்டிங் மேனேஜராய் வந்தவள் மூன்றே வருடங்களில் ஆபீஸுக்கு மேனேஜரானாள். யாரையாவது அவள் அழைத்தால் அழைக்கப்பட்டவனின் கை கால் எல்லாம் உதற ஆரம்பிக்கும். வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக்கொண்டுதான் போவான்.

அன்று மதியம் மூன்று மணிக்கு தன் அறைக்கு சந்தோஷை அழைத்தாள். ‘‘நாளை மறுநாள் நம்ம தர்மபுரி பிரான்ச்சுக்கு போறோம். இன்டர்னல் ஆடிட்டிங். நானும், நீங்களும் ரெண்டு நாள் தங்கற மாதிரி இருக்கும். தயாரா இருங்க...’’ விஷயம் தெரிந்ததும் அவனை எல்லோரும் பரிதாபமாகப் பார்த்தார்கள்.அடுத்த நாள் காலை தர்மபுரியில் இருத்தார்கள் சந்தோஷும், பவானியும்.

இரண்டு நாள் வேலை முடிந்ததும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பத்து மணிக்கு மேலாக வந்தார்கள். இரண்டு பெட் அறை அது. எவ்வளவு முயன்றும் சிங்கிள் அறை எந்த ஹோட்டலிலும் கிடைக்கவில்லை.சாப்பிட்டு விட்டு பெட்டுக்கு வந்தபோது மணி பதினொன்று. காலை எழுந்ததும் ஊருக்குக் கிளம்பவேண்டும். இருந்த களைப்பில் படுத்ததும் தூங்கிப் போனான்.

இரவு பன்னிரெண்டுக்கு மேலிருக்கும். திடீரென இருட்டு. கரன்ட் கட்டாகி இருக்கும் போல. திரும்பிப் படுத்தவன் மேல் என்னமோ வந்து மோதியது போல இருந்தது.
‘‘மேடம் நீங்களா?’’ பதறிப் போய் எழுந்தான். அவள் இடுப்பு அவன் மேல் கிடக்க, அவளைத் தூக்கி விட முயன்றான்.

‘‘பாத்ரூம் போயிட்டு வர்றப்ப கரன்ட் கட்டாயிடுச்சி. கட்டில் மேல மோதி உன் மேல விழுந்துட்டேன் இருட்டுல. சாரி சந்தோஷ்...’’மெதுவாகச் சொன்னவள் அவன் விலக்க முயன்றும் அவனை ஒட்டியே இருந்தாள்.அவள் கைகள் அவன் மார்பு மேல் இருக்க அவள் பாதி உடம்பு அவன் மேல்தான் இருந்தது.

‘‘மேடம்...’’ ‘‘நோ சந்தோஷ். எனக்கு ஒரு மாதிரி இருக்கு. நீ வேணும். ப்ளீஸ்... புரியுதா உனக்கு..?’’
‘‘மேடம்...’’ ‘‘நோ...’’ அவனை இறுக்கி அணைத்தாள். ஆசை தீர முத்தமிட்டாள்.

அவன் மட்டும் புத்தனா என்ன?

அவளுள் இதுவரை தன்னுள் நெருப்பாக எரிந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று தணிந்தது போல நிம்மதி.எழுந்து உட்கார்ந்தபோது கரன்ட் வந்திருந்தது.அவள் முகம் பார்த்த அவனுக்கு அத்தனை ஆச்சரியம். அவள் முகம் அத்தனை பிரகாசம். 

அத்தனை அமைதி. கண்களில் அவ்வளவு சாந்தம்.‘‘இரு... குளிச்சிட்டு வந்துடறேன்...’’உள்ளே போனவள் குளித்துக் கொண்டிருக்க, இவன் தலையில் கை வைத்து தரை பார்த்து அமர்ந்திருந்தான்.‘கோமதிக்கு தெரிஞ்சா என்னாகறது? அவளுக்கு நான் செய்யற துரோகமில்லியா?’ அவன் யோசித்துக் கொண்டிருந்தபோதே வந்து விட்டாள்.

‘‘ஆண் ஸ்பரிசம், தொடுகை முதல் முறையா உன் மூலமாதான் கிடைச்சிருக்கு... தேங்க்ஸ் சந்தோஷ்...’’நடந்ததன் வீரியம் அவனுக்கு அப்போதுதான் புரிய ஆரம்பித்திருக்க மனதில் விஷமேறியதைப் போல ஒரு உணர்ச்சி.மெதுவாய் வந்து அவன் தோளைத் தொட்டாள் பவானி.

‘‘மேடம்...’’
‘‘நோ. பவானினு கூப்பிடு...’’அவன் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.எதிரில் உட்கார்ந்தாள். அவனுக்கு அவள் முகம் பார்க்க முடியவில்லை. மனதின் புழுக்கம் உடல் எரிவது போலிருந்தது.நீல நிற ஆடையில் இருந்தாள். முகத்தின் பிரகாசம் லைட்டின் பிரகாசத்தை விட அதிகமாக இருந்தது.
‘‘என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும் சந்தோஷ்?’’

லேசாய் நிமிர்ந்து பார்த்தான். எத்தனையோ நேரம் அவள் திட்டும்போது அவளை, அவள் கண்களை பயமில்லாமல் பார்த்திருக்கிறான். இப்போது அந்த தைரியம் அவனிடம் இல்லை.
‘‘நீங்க எனக்கு மேனேஜர். அபார திறமைசாலி. நிறைய கோவம் வரும். எல்லோரையும் நிறைய திட்டுவீங்க...’’அவள் சிரித்தாள். காரணமே இல்லாமல் சிரித்தாள்.

சிரிப்பு சந்தோஷத்தின் வெளிப்பாடாக மட்டும் இருந்து விடுவதில்லை. பல நேரங்களில் கோபத்தின், விரக்தியின், இயலாமையின், போதாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். வெற்றி மட்டுமா சிரிப்பைத் தரும்? இதில் இது எந்த வகை சிரிப்பெனத் தெரியவில்லை.‘‘மேடம்...’’‘‘பயப்படாத சந்தோஷ். நான் நல்லாத்தான் இருக்கேன். நான் கோவக்காரி. நிறைய திட்டுவேன்னு சொன்னியே... அது கோவம் இல்ல சந்தோஷ். 

எனக்குள்ள இருந்த வலி. நான் அடிபட்ட வலி. நான் அவமானப்பட்ட வலி. இத்தனை வருஷமா எனக்குள்ள அடக்கி வச்சிருந்த வலியோட வெளிப்பாடு. நான் வாங்குனத எல்லாம் திருப்பித் தந்தாகணும். அப்பதான் நான் சமநிலை அடைவேன். எனக்குள்ள இருக்குற முள்ளை பிடுங்கி எறியணும். அப்பதான் பூ பூக்க ஆரம்பிக்கும். புரியலல?’’உண்மைதான். அவனுக்கு புரியத்தான் இல்லை.

‘‘சந்தோஷ்... நீ காதலிச்சிருக்கியா?’’
‘‘ம். ரெண்டு பேரை...’’‘‘குட். அந்தந்த வயசுல அந்தந்த இன்பங்களை அனுபவிச்சுடணும். அதான நிறைவான வாழ்க்கை. ஆனா, அது எல்லோருக்கும் அமையறதில்ல. எல்லா செடியும் பூக்கறதில்ல. எல்லா மரமும் பருவத்துல காய்க்குறதில்ல. நான் அப்படி பருவத்துல காய்க்காத மரம்...’’சந்தோஷ்க்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

‘‘நான் அழகில்லை. நான் கலரில்ல. நான் பார்க்க வசீகரமில்ல. ஆனா, இது என் தப்பா? என்னை படைச்ச கடவுள் பண்ண தப்புக்கு நான் எப்படி பொறுப்பாவேன்?’’
கண் மூடி நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தாள். 

பட்ட அவமானங்களும், வலிகளும் அவள் மனதில் இவ்வளவு நாளாக உறைந்திருந்திருந்தது கண்களின் முன்னால் வந்து சென்றிருக்கக் கூடுமெனத் தோன்றியது அவனுக்கு. அப்போது பட்ட வலிகளின் சூடுகளும், சுவடுகளும் அப்போதை விட இப்போது அதிகம் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடும் என்பது புரிந்தது.

‘‘எனக்கு சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ் யாருமில்ல. என் கூட பழக தயங்குவாங்க. என் சொந்தக்காரங்க கூட என் கூட நெருக்கமா பழக மாட்டாங்க. ஆனாலும் என்ன பெத்தவ மட்டும் சொல்லுவா.... ‘உனக்கென்னடி... நீ பேரழகி’ம்பா. கறுப்பே அழகும்பா. 

நம்ம வீட்டு தோட்டத்துல விளைஞ்ச பாவக்காயும் நமக்கு இனிப்புதான?’’
சந்தோஷ் எதுவும் பேசவில்லை. துயருறுபவர்களின் மொழி ஆறுதல் தேடி மட்டும் வருவதில்லை. தங்களின் துயரை, சோகத்தை, வலியை, அவமானத்தை தங்களிடமிருந்து சொற்களாக மாற்றி வெளித் தள்ளவும் வருகிறது.

‘‘நான் நல்லா படிப்பேன் சந்தோஷ். என் அழகு அது மட்டும்தான்னு எனக்கு புரிஞ்சது. கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டினு எதிலும் நான் தோத்ததில்ல. என் வசீகரம் அதான்னு புரிஞ்சுக்கிட்டேன். நல்லா பாடறவனுக்கு அவன் குரல் அழகு. நல்லா பேசுறவனுக்கு அவன் பேச்சு அழகு. நல்லா கவிதை எழுதறவனுக்கு அவன் தமிழ் அழகு. எனக்கு என் படிப்பு அழகுனு புரிஞ்சுக்கிட்டேன். நல்லா படிச்சேன். என் மார்க்கை பார்த்து பணக்காரங்க படிக்கிற காலேஜ்ல சீட் கிடைச்சது.

அங்கயும் எங்கிட்ட யாரும் நெருங்கி பழகல. கோ எட் காலேஜ் அது. ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியா சுத்துறப்ப நான் மட்டும் தனியா சுத்துவேன். நமக்கு எது கிடைக்கலையோ அது நமக்கு இரண்டுல ஒண்ணு தரும். 

ஒண்ணு தாழ்வு மனப்பான்மை. இல்லாட்டி வைராக்கியம். எனக்கு வைராக்கியம் தந்தது. இன்னும் நல்லா படிச்சு, எல்லா போட்டிகள்லயும் கலந்துக்கிட்டு வெற்றி அடைஞ்சு நான் யார்னு காட்டுற வைராக்கியம். நான் அப்படியே பண்ணேன். நான் போரடிக்கலயே சந்தோஷ்?’’‘‘இல்ல...’’

‘‘எனக்குள்ளயும் ஒரு காதல் பூத்தது. ஒருத்தனால ஈர்க்கப்பட்டு வெக்கத்த விட்டு நானே என் காதலைச் சொன்னேன். அதுக்கு அவன் ‘விருப்பமில்லை’னு சொல்லிருந்தா கூட பரவால்ல. என்னைப் பார்த்து ஏளனமா ஒரு சிரிப்பு சிரிச்சான் பாரு... செருப்புல அடி வாங்குன மாதிரி இருந்தது. என் பெண்மை அடி வாங்குன முதல் இடம் அது. உலகத்துல ரொம்ப வலி தரக்கூடியது என்ன தெரியுமா சந்தோஷ்? புறக்கணிப்பு.

எந்த ஆண்கள் என்னை புறக்கணிச்சாங்களோ அந்த ஆண்களைத் தண்டிக்கணும்னு நினைச்சேன். அதுக்கு எங்கிட்ட இருந்த ஒரே ஆயுதம் என் படிப்பும், திறமையும்தான். என் திறமையால கேம்பஸ்ல செலக்ட் ஆனேன். அதே திறமையால, கடுமையான உழைப்பால மேனேஜர் ஆனேன்.

அதுக்கு பின்னால என்னை பொண்ணு பார்க்க வந்தவங்க இருபது பேருக்கும் குறையாது. எல்லோரும் என்னைப் பார்த்துட்டு பிடிக்கலைனு சொன்னப்ப என் பெண்மை இன்னும் அடி வாங்கி இறுகி கல்லாச்சு. 

ஒரு கட்டத்துல கல்யாணமே வெறுத்துப் போய் என்னை அவமானப்படுத்தின ஆண் இனத்து மேலயே வெறுப்பும், பெரும் கோபமும் வந்தது. ஆண் இனத்தை பழி வாங்க நினைச்சேன்...’’நிமிர்ந்து பார்த்தான் சந்தோஷ். ‘‘எந்த ஆணோ உங்களை அவமானப்படுத்துனா அதுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் மேடம்?’’

‘‘ஒரே சம்பந்தம்தான். எல்லோரும் ஆண்கள். என் கீழ இருக்கற ஆண்கள் என்கிட்ட கை கட்டி, தலை கவிழ்ந்து நின்னப்ப நான் என்னை புறக்கணிச்ச ஆண்களை ஜெயிச்சுட்டதா சந்தோஷம். என் பெண்மையை மதிக்காத ஆண்மையை பழி வாங்கிட்டதா குதூகலம்...’’ சந்தோஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘‘இன்னைக்கு நான் சந்தோஷமா இருக்கேன். என் பெண்மை ஒரு ஆண்மையால மதிக்கப்பட்டிருக்கு. நெருப்பு எரிஞ்சுக்கிட்டிருக்கற வரைதான் ஆபத்து. தணிஞ்சிட்டா சாதாரணமாயிடும். என் உள்ளுக்குள்ள எரிஞ்சிட்டு இருந்த நெருப்பு தணிஞ்சிடுச்சி சந்தோஷ்... உன்னால. இந்த ஒரு நாள், அதுவும் இந்த நிமிஷங்கள் போதும் எனக்கு. வாழ்நாள் பூரா இதை நினைச்சே என் நெருப்பை அணைச்சுப்பேன்...’’அவள் எழுந்து அவனருகில் வந்தாள். அவனை இறுக்கி கட்டிப் பிடித்து உடலெங்கும் முத்தங்களாகத் தந்தாள்.

 ஆசை தீர அவனை காதலாய் பார்த்தாள். விலகினாள்.‘‘என் மனசுல எந்த குற்ற உணர்ச்சியும் இல்ல. சந்தோஷமாத்தான் இருக்கேன். உனக்கும் குற்றவுணர்ச்சி வேணாம். இப்போ நடந்தது தப்பானதில்ல. மருத்துவம். ட்ரீட்மென்ட். போ. போய் நிம்மதியா படுத்துத் தூங்கு...’’கட்டிலில் போய் படுத்தவள் நிம்மதியாய் அடுத்த பத்தாவது நிமிடம் தூங்கிப் போனாள்.

அடுத்த நாள் அவன் ஆபீஸ் வரவில்லை. வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது மதியம் போன் வந்தது, அப்பா திடீர் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டதாக. இரண்டு வாரங்கள் லீவு சொல்லிவிட்டுக் கிளம்பினான்.மீண்டும் ஆபீஸ் வந்தபோது சீட்டில் பவானி இல்லை.‘‘மேடம் இன்னும் வரலியா?’’ கேட்டான் மோகனிடம்.‘‘உனக்குத் தெரியாதுல்ல... அவங்க ஒரு வாரம் முன்னாடியே வேற பிரான்ச்சுக்கு டிரான்ஸ் ஃபர் வாங்கிட்டு போயிட்டாங்க...’’சந்தோஷ் எதுவும் சொல்லாமல் தன் இருக்கையில் அமர்ந்தான்.

 - கே.ஆனந்தன்