உலகின் மிகப்பெரிய குகை இதுதான்!



இந்த உலகிலிருந்து, இன்னொரு மர்மமான உலகிற்கு அழைத்துச் செல்கிறது, சன் டூங் குகை. உலகிலேயே மிகப்பெரிய குகை இதுதான். ஆம். 9 கிலோமீட்டர் வரை நீண்டிருக்கும் இந்தக் குகை, சில இடங்களில் 200 மீட்டர் வரை உயர்ந்திருக்கிறது. 
அதாவது, 40 மாடிக் கட்டடம் கட்டும் அளவுக்கு உயரம். அகலம் கூட 150 மீட்டர். இதன் பிரமாண்டத்தை வார்த்தைகளில் விவரிப்பது எளிதல்ல. ஒரு விமான நிலையத்தை உருவாக்கி, அதனுள் 68 போயிங் விமானங்களை நிறுத்தும் அளவுக்கு பிரமாண்டமானது இந்தக் குகை. மட்டுமல்ல, இன்னொரு உலகம் போல செயல்படுகிறது சன் டூங்.

ஆம்; இந்தக் குகைக்குள் தனித்த பருவநிலை நிலவுகிறது. அது குகைக்கு வெளியிலிருக்கும் பருவநிலையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறானது. மட்டுமல்ல, குகைக்குள்ளேயே அமேசான் மழைக்காடுகளைப் போல ஒரு காடும் உள்ளது. இங்கே அரிய பறவைகளும், வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன. 
சூரிய வெளிச்சத்தை தடுத்து, மிதமான வெப்பத்தை குகையின் மேற்கூரை வழங்குவதால் காடும், காட்டுயிர்களும் செழிப்பாக இருப்பதாக நிபுணர்கள் சொல்கின்றனர். மலைக்கு அடியில் நீண்ட காலமாக ஓடிய நதியால் சன் டூங் குகை உருவாகியிருக்கலாம் என்று குகை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சுண்ணாம்புக்கல்லால் ஆன இந்தக் குகை, 20 லட்சம் முதல் 50 லட்சம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்கின்றனர்.வியட்நாமிற்குச் சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயணிகளின் முதல் விருப்பப்பட்டியலில் சன் டூங் குகைதான் இருக்கிறது. இத்தனைக்கும் ‘கூகுள் எர்த்’தால் கூட கண்டுபிடிக்க முடியாத இடம் இது. முதல் முறையாக 2013ம் வருடம் ஒரு சுற்றுலாக் குழு சன் டூங் குகையைச் சுற்றிப் பார்த்தது. இதற்கு வழிகாட்டி கட்டணமாக ஒரு பயணிக்கு 2.56 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையில் மட்டுமே குகையைச் சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற மாதங்களில் கன மழை காரணமாக அனுமதியில்லை.
குகைக்குள் கேபிள் கார் திட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டனர். 
அப்படி கேபிள் கார் கொண்டு வந்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சூழலுக்குப் பிரச்னை ஏற்படும் என்று அத்திட்டத்தை கைவிட்டுவிட்டனர். வியட்நாமின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் உள்ள ‘போங் நா-கே பேங்’ தேசிய பூங்காவில் சன் டூங் குகை கண்டுபிடிக்கப்பட்டு, வெறும் 34 வருடங்கள்தான் ஆகின்றன. குகையைக் கண்டுபிடித்த கதையும் சுவாரஸ்யமானது.

கடந்த 1991ம் வருடத்தின் ஒரு நாள். வியட்நாமின் குவாங் பிங்ஹ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு காட்டுப்பகுதிக்கு, மரத்துண்டுகளைச் சேகரிப்பதற்காகச் சென்றார் விவசாயி, ஹோ ஹங்க்.

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மரத்துண்டுகளைச் சேகரித்து விற்பனை செய்வதுதான் இவரது வருமானம். மரத்துண்டுகளைச் சேகரித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கன மழை பெய்ய ஆரம்பித்தது. வெள்ளம் வந்துவிடுமோ என்ற பயத்தில், பாதுகாப்புக்காக ஒதுங்குவதற்காக ஓர் இடத்தைத் தேடிக் காட்டுக்குள் அலைந்தார் ஹோ.

அப்போது ஒரு குகையின் வாயிலில் தஞ்சமடைந்தார். உள்ளே நுழைய ஹோவிற்கு ஆர்வமிருந்தாலும், குகைக்குள் இருந்து கேட்ட தண்ணீர் சத்தமும், காற்றின் அலறலும் ஹோவைப் பயமுறுத்தியது. அதனால் வாயிலிலே நின்றுவிட்டார்.

மழை நின்றதும் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். தான் நின்று கொண்டிருந்தது உலகின் சிறப்புமிக்க ஒரு குகை என்று அவருக்குத் தெரியவில்லை.

கன மழைக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தவர், சில நாட்களில் குகையின் வாயில் இருந்த இடத்தை மறந்துவிட்டார். மரத்துண்டுகளைச் சேகரிப்பதை விட்டுவிட்டு, அவரது பழைய தொழிலான விவசாயத்தில் இறங்கினார்.

ஹோ ஹங்க் மரத்துண்டுகளைச் சேகரிக்கச் சென்ற காட்டுப்பகுதி, 2001ம் வருடத்தில் ‘போங் நா-கே பேங்’ தேசிய பூங்காவாக மாறியது. 15 வருடங்களுக்கு மேலாக சன் டூங் குகை இருக்கும் இடம் ரகசியமாகவே இருந்தது. ஹோ ஹங்கும் குகையைப் பற்றி பெரிதாக யாரிடமும் சொல்லவில்லை.

2006ம் வருடம் பிரிட்டிஷ் குகை ஆராய்ச்சியாளர்கள் சங்கத்திலிருந்து குகை நிபுணர்கள் வியட்நாமிற்கு வந்திருந்தனர். 857 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ‘போங் நா-கே பேங்’ தேசிய பூங்காவில் புதிதாக குகைகள் இருக்கிறதா என்று கண்டுபிடிப்பதற்காக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் இரவு, பகல் பாராமல் பல நாட்களாக பூங்காவை வலம் வந்தனர்.

இந்த விஷயம் ஹோ ஹங்கிற்குத் தெரிய வர, தான் மழையில் ஒதுங்கி நின்ற குகையைப் பற்றி அந்த நிபுணர்களிடம் சொன்னார். அவரால் குகை இருந்த இடத்தை சரியாக அடையாளம் காண முடியவில்லை. அந்த நிபுணர்கள் 2009ல் குகையின் வாயிலைக் கண்டுபிடித்தனர். அதுதான் சன் டூங் குகை!

த.சக்திவேல்