இந்தியாவில்தான் இளம் குற்றவாளிகள்அதிகம்!
சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் ரிலீசான ‘அடாலசன்ஸ்’ (Adolescence) பிரித்தானியத் தொடர் இந்தியா உட்பட உலகம் முழுவதும் சக்கைப் போடு போட்டது.
பள்ளியில் படிக்கும் ஒரு 13 வயது வளரிளம் பருவ வாலிபன் (அடாலசன்ஸ் - 10 வயதிலிருந்து, அடல்ட் வயதை நெருங்கும் 18 வரை), தன்னோடு படிக்கும் இன்னொரு இளம் மாணவியைக் குத்திக் கொல்லுவதும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களை அலசுவதும்தான் இந்த சீரியலை பெரிய வரவேற்பு பெற வைத்தது.  நிஜத்தில் உலகளவில் இளம் சிறார்களின் வன்முறை நிறைந்த குற்றங்கள் (வயலன்ட் க்ரைம் - Violent crime) பெருகியிருப்பதால்தான் இதுபோன்ற கதைகளும், அதற்கான வரவேற்பும் இருப்பதாக அண்மைய புள்ளிவிபரம் ஒன்று படம் பிடித்துக் காட்டுகிறது.
குற்றங்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று வன்முறையானது (வயலன்ட்), மற்றது வன்முறை அற்றது ( நான் வயலன்ட்). வன்முறைக் குற்றத்தில் வன்புணர்வு, கொலை, கொலை முயற்சி, தீவைப்பு, மோசடி, கொள்ளை போன்றவை அடங்கும்.
வன்முறையில்லாக் குற்றத்தில் வேகமான டிரைவிங், அலட்சியத்தால் பிறருக்கு இறப்பை ஏற்படுத்துவது, ஃபிராடு, ஏமாற்றுவது, தடைகளை மீறுவது, களவு, ஆபாசமாக நடந்துகொள்ளல் மற்றும் பிக்பாக்கெட் என்பவற்றைச் சொல்லலாம். இப்பொழுது இனிவரும் விஷயங்களை மூச்சை அடக்கிப் படியுங்கள். இவை எல்லாம் உலகளவிலும், அதிலும் இந்தியாவிலும் நிகழும் இளம் வயதுடையோரின் வன்முறைக் குற்றம் தொடர்பான புள்ளிவிபரங்கள். 2016 மற்றும் 2020ம் ஆண்டுகளுக்கு இடையேயான நான்கு வருடங்களில் இங்கிலாந்தில் 50 சதவிகிதத்தில் இருந்து 57% ஆக வன்முறைக் குற்றங்கள் உயர்ந்திருக்கின்றன.
இந்தியாவில் இது 32லிருந்து 47 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.
கனடாவில் 32லிருந்து 44% ஆகவும்; அமெரிக்காவில் 27லிருந்து 32 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கின்றன.இதில் இந்தியாவின் வளர்ச்சிதான் மோசமான நிலையில் இருக்கிறது. குறிப்பாக இளம் குற்றவாளிகளின் வன்முறைக் குற்றங்கள்.
ஆம். இந்திய அளவில் பல்வேறு குற்றங்களுக்காக (வன்முறை மற்றும் வன்முறையில்லாத குற்றங்களுக்காக) கைது செய்யப்படும் இளம் குற்றவாளிகளில் வன்முறைக் குற்றவாளிகள், 2016ம் ஆண்டு 32 சதவீதமாக இருந்து இன்று 49% ஆக அதிகரித்திருக்கிறார்கள். அதாவது பாதிக்குப் பாதி. மாநில அளவில் இளம் குற்றவாளிகளின் நிலை கவலையளிக்கிறது. மத்தியப்பிரதேசம் 21.8 சதவீதம், மகாராஷ்டிரா 17.9%, ராஜஸ்தான் 9.6%, சத்தீஸ்கர் 8.4%, தில்லி 6.8%.
ஆனால், விகிதாச்சாரப்படி - அதாவது ஒரு மாநிலத்தின் இளம் வயதுடையோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப - ஜார்க்கண்ட் மாநிலத்தில் இளம் குற்றவாளிகள் அதிகமாம். அதாவது 67.1 சதவீதம். இரண்டாம் இடம் மத்தியப்பிரதேசம். அங்கே 60.6%. ராஜஸ்தான் 52.3%. மகாராஷ்டிரா 49.4%. ‘அடாலசன்ஸ்’ வெப் சீரிஸ் பார்க்க சுவாரசியமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அடாலசன்ஸ் நிலைமை கவலையளிக்கிறது.
டி.ரஞ்சித்
|