Must Watch



நாளே ராஜா கோழி மஜா

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை அள்ளி வரும் கன்னடப் படம், ‘நாளே ராஜா கோழி மஜா’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. ஒரு சிற்றூரில் வசித்து வரும் சிறுமி, சிநேகா. பள்ளியில் படித்து வரும் சிநேகாவுக்கு சிக்கன் உணவு வகைகள் என்றால் உயிர். 

அவளால் வாரத்தில் ஒரு நாளாவது சிக்கன் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிநேகாவின் வீட்டில் சிக்கன் இல்லாமல் இருக்காது.  சிநேகாவுக்கான ஸ்பெஷலாக சிக்கனைச் சமைப்பார்கள்.

வழக்கம்போல ஒரு ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமையன்று காந்தி ஜெயந்தி வேறு. அதனால் அன்று நாடு முழுவதும் சிக்கன், மட்டன் என்று இறைச்சி விற்பனைக்குத் தடை. சிக்கன் விற்பனை தடை செய்யப்பட்ட நாளில் சிக்கன் விரும்பியான சிநேகா என்ன செய்கிறாள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.

ஓர் எளிய கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்திருக்கின்றனர். படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே எதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இதன் இயக்குநர் அபிலாஷ் ஷெட்டி.

த அக்கவுன்டன்ட் 2

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக் கொண்டிருக்கும் ஆங்கிலப்படம் ‘த அக்கவுன்டன்ட் 2 ’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. முன்னாள் அமலாக்கத்துறை இயக்குநர், ரேமண்ட் கிங். பணத்துக்காக கொலை செய்யும் அனைஸ் என்ற மர்மமான பெண்ணைச் சந்திக்கிறார் ரேமண்ட்.

சல்வடூரியன் குடும்பம் இருக்கும் இடத்தைக் காட்டும்படி அனைஸுடம் உதவி கேட்கிறார் ரேமண்ட். அவரிடம் அந்தக் குடும்பத்தினரின் பழைய புகைப்படம் மட்டுமே இருக்கிறது. அனைஸ் உதவ மறுப்பதோடு, ரேமண்ட் கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாகச் சொல்கிறாள். அடுத்த சில நிமிடங்களில் சுடப்பட்டு இறக்கிறார் ரேமண்ட்.

அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி ரேமண்ட் உடலை அடையாளம் காண்கிறார். ஒரு அக்கவுன்டன்டை கண்டுபிடிக்கும் வேட்டையில் ரேமண்ட் இருந்திருக்கிறார் என்பது அந்த அதிகாரிக்குத் தெரிய வர, சூடுபிடிக்கிறது திரைக்கதை.

சில வருடங்களுக்கு முன்பு ‘த அக்கவுன்டன்ட்’ என்ற ஆக்‌ஷன் திரில்லர் படம் வெளியாகி, வசூலில் சக்கைப்போடு போட்டது. அதன் இரண்டாம் பாகம்தான் இது. ஆக்‌ஷன் விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது. இதன் இயக்குநர் கேவின் ஓ’கானர்.

ஜாட்

‘நெட்பிளிக்ஸி’ன் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திப் படம், ‘ஜாட்’. இலங்கையில் ஜெடிஎஃப்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. ஜெடிஎஃப்பின் பின்புலத்தில் யாருக்குமே தெரியாமல் நிறைய தங்கம் இருப்பது தொழிலாளி ரணதுங்காவுக்குத் தெரிய வருகிறது. தங்கத்தை அடைய முயற்சிக்கிறர் ரணதுங்கா. இந்நிலையில் இலங்கை இராணுவம் ரணதுங்காவை அடக்க முயலும்போது, தனது ஆட்களுடன் சேர்ந்து இராணுவ வீரர்களைக் கொல்கிறார் ரணதுங்கா.

பிறகு ஆந்திரப் பிரதேசத்துக்கு வரும் ரணதுங்கா, போலீஸ்காரர்களுக்குத் தங்கத்தை லஞ்சமாகக் கொடுத்து இந்தியாவின் குடிமகன் ஆகிறார். விரைவில் ஒரு கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கி, அதன் தலைவராகிறார். ரணதுங்காவின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையே பயப்படுகிறது. ரணதுங்காவையும், அவரது மனைவியையும் கைது செய்ய, காவல்துறை வருகிறது. ஆனால், ரணதுங்காவின் ஆட்கள் காவலரைத் தங்களது வீட்டில் பிடித்து வைக்கிறார்கள்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக ரணதுங்காவின் ஊருக்கு வருகிறார் சிபிஐ அதிகாரியான சத்தியமூர்த்தி. ரணதுங்கா கைது செய்யப்பட்டாரா, அவரது கொள்ளைக்கூட்டம் அழிக்கப்பட்டதா? என்பதே மீதிக்கதை.இப்படத்தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனி.

படக்களம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப்படம், ‘படக்களம்’. இப்போது ‘ஜியோ ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஜித்தின், ராம், நகுல், கண்ணன் ஆகிய நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் பி.டெக் படித்து வருகின்றனர். ஜித்தினுக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாள். பேராசிரியர் சாஜியின் வகுப்பு முன்பு ஜித்தினுக்கும், அவனது கேர்ள் ஃபிரண்டுக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது.

இந்தச் சண்டையால் தன்னுடைய காதல் உணர்வுகளை எல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறான் ஜித்தின். இந்நிலையில் ஹெச்ஓடி குறித்து மாணவர் போராட்டம் வெடிக்க, வகுப்பு தடைபடுகிறது. இந்தக் குழப்பத்துக்கு நடுவில் ஜித்தின் எழுதிய காதல் கடிதத்தை தவறுதலாக எடுத்துக்கொண்டு அலுவலக அறைக்குச் செல்கிறார் சாஜி.

கல்லூரியில் பிரபலமான பேராசிரியரான ரஞ்சித், புதிய ஹெச்ஓடியாக சாஜியை நியமித்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறார். ஆனால், ரகசியமாக சாஜியை ரஞ்சித் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இந்த விஷயம் ஜித்தினுக்குத் தெரியவர, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை. படத்தின் இயக்குநர் மனு ஸ்வராஜ்.

தொகுப்பு: த.சக்திவேல்