இஸ்ரேல் Vs ஈரான்... என்ன நடக்கிறது?
இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது பேச்சுவார்த்தையின் வழியாக தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்குமா அல்லது யுத்தமாக உருவெடுத்திருக்குமா?
 தெரியவில்லை.ஆனால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்திருப்பதும் பதிலுக்கு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுத்திருப்பதும் இக்கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில் நிஜம். இந்த பரஸ்பர தாக்குதலால் கொத்துக் கொத்தாக இருநாட்டு மக்களும் மரணமடைந்திருப்பது சத்தியம். இரு நாட்டு நகரங்களும் கொழுந்துவிட்டு எரிவது உண்மை. இஸ்ரேல் - காசா, ரஷ்யா - உக்ரைன், இந்தியா - பாகிஸ்தான்... இப்பொழுது இஸ்ரேல் - ஈரான்.

இவை அனைத்துமே உலக ஒழுங்குமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களின் வெளிப்பாடு. உண்மையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அல்ல இது... அமெரிக்கா, பிரிட்டன் தலைமையிலான நாடுகளின் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தாக்குதல் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.  இதற்கு ஆதாரமாக ‘தற்பொழுது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு செய்தி அனுப்பிவிட்டுதான் செய்கிறோம்’ என்று இஸ்ரேல் கூறியதையும்; ‘எங்களிடம் ஒப்புதல் பெறவில்லை. ஆனால், தகவல் தெரிவித்தார்கள்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். தாக்குதலுக்கான காரணமாக பிரசாரம் செய்யப்படுவது ஈரான் அணு ஆயுதத்தை தயார் செய்கிறது என்பதும், அதற்கான செறிவூட்டுப் பொருட்களை அதிகமாக ஈரான் வைத்திருக்கிறது என்பதும்.ஆனால், இதுவரை இஸ்ரேல் மட்டுமல்ல... அமெரிக்காவும் இதற்கு எவ்வித ஆதாரத்தையும் காண்பிக்கவில்லை.
எனில் ஏன் இந்தத் தாக்குதல்?
எண்ணெய் வளங்கள்தான் என்கிறார்கள்.முதலில் ஈராக் என்ற நாட்டை தாக்கியதற்கும், அடுத்தடுத்து லிபியா, சிரியா, ஏமன் என தாக்குதலை தொடர்வதும் எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்குத்தான்.மத்திய கிழக்கு நாடுகளில் அரபு தேசியம் எழுச்சி பெற்ற போதெல்லாம் அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அமெரிக்காவும் பிரிட்டனும் தூண்டிவிட்டார்கள்.
அமெரிக்க ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நிர்ப்பந்தத்தினால் தங்கள் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை தாங்களே தீர்மானித்துக் கொள்வோம் என்று நடவடிக்கை எடுத்தால் அது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை ‘பாதிக்கிறது’ என்ற காரணத்தினால் அந்த நாடுகள் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கின்றன என்று தாக்குதல் நடத்தினார்கள், அல்லது தீவிரவாதிகளை உருவாக்கினார்கள், அல்லது அது ஒரு தீவிரவாத நாடு என்று பிரசாரம் செய்து தாக்குதல் நடத்துவதை கொள்கையாக வைத்துள்ளார்கள்.
எகிப்து, துனீசியா, ஈராக், ஈரான், ஏமன், ஆப்கன்... போன்ற நாடுகளில் சிஐஏ செய்த சதிராட்டங்கள் நேற்றைய நிகழ்வுகளல்ல. இன்றும் அரங்கேறும் சம்பவங்கள். மாறி வருகின்ற உலக ஒழுங்கில் ஈரான் ரஷ்யாவுடனும், சீனாவுடனும் தனது உறவை மேம்படுத்திக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, சவுதி அரேபியாவுடன் ஈரான் உறவை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் முக்கிய நாடாக ஈரான் இன்று இடம்பெற்றுள்ளது.இவையெல்லாம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலகை பதற வைத்துள்ளது என்கிறார்கள்.
காரணம், உலகில் எண்ணெய் வளம் அதிகமாக உள்ள நாடுகளில் வெனிசுலா முதல் இடத்திலும், அதற்கு அடுத்து சவுதி அரேபியாவும் மூன்றாவதாக ஈரானும் இருக்கின்றன.
இவை தவிர வளைகுடா நாடுகளில் மட்டும் உலகில் உள்ள எண்ணெய் வளங்களில் 55% முதல் 57% வரை இருக்கிறது.
ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் வலுமிக்க ஒரு நாடாக வரலாற்று வேர்களுடன் திகழ்கிறது. மக்கள் தொகையிலும் சரி, பரப்பளவிலும் சரி உலக அளவில் 17வது இடத்திலும், ஆசிய கண்டத்தில் ஆறாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. மற்ற வளைகுடா நாடுகளை விட அதிக அளவு மலைப்பாங்கான பகுதிகளையும் ஈரான் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆக ஈரானின் வளர்ச்சியும், எழுச்சியும், ராணுவ படைகளின் உயர்வும் மேற்குலக நாடுகளின் எண்ணெய்வள கனவுகளை தகர்த்து விடும் என்பது சிம்கார்டும் செல்போனும் போல் நிஜம். கொஞ்சம் ரீவைண்ட் செய்தால் புரியும்.முகமது மொசாடெக் என்பவர் 19 பேர்களுடன் இணைந்து 1949ம் ஆண்டு ஈரானில் தேசிய முன்னணி என்ற கட்சியைத் துவங்கினார். இவர் அரசியல்வாதி மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் கூட.
ஈரானில் 1905 மற்றும் 1911ம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டது. முகமது மொசாடெக் 1923ம் ஆண்டிலேயே இந்த பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மன்னர் ஆட்சியின் கீழ் இந்தப் பாராளுமன்றம் அன்று இருந்தது. ஈரான் அரசியலில் ஜனநாயகத்திற்காகவும், அந்நிய சக்திகள் தலையிடுவதற்கு எதிராகவும் தொடர்ந்து களம் கண்டவர் முகமது மொசாடெக் மற்றும் அவரது ஈரான் தேசிய முன்னணி என்ற கட்சியினர் என வரலாறு பதிவு செய்துள்ளது.
1951ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மொசாடெக்கை மன்னர் பிரதமராக பதவி ஏற்கச் செய்தார்.
ஆனால், முகமது மொசாடெக் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு அவர் செய்த பணிகளைக் கண்டும், அவரது செல்வாக்கு உயர்வதைப் பார்த்தும் மன்னர் அவரை பிரதமர் பதவியில் இருந்து 1952ல் நீக்கினார். இதனை எதிர்த்து மக்கள் அணிதிரளவே வேறு வழியில்லாமல் மீண்டும் அவரை பிரதமராக மன்னர் அமர்த்தினார்.
முகமது மொசாடெக் ஆட்சியில் இருந்தபொழுது, வேலையின்மைக்கு இழப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் காயம் அடைந்த தொழிலாளர்களுக்கும், நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று உத்தரவு கொண்டுவரப்பட்டது.
விவசாயத் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் நில உரிமையாளர்களின் தோட்டங்களில் அடிமை வேலை செய்வது தடை செய்யப்பட்டது. 1952ம் ஆண்டு முகமது மொசாடெக் நிலச் சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றினார். இந்த சட்டத்தின்படி நில உரிமையாளர்கள் தங்கள் வருவாயில் 20 சதவீதத்தை மேம்பாட்டு நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
தேசத்தின் சொத்துக்களை, குறிப்பாக எண்ணெய் வளங்களை 1913ம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் அரசு எடுத்துச் சென்று கொண்டிருந்தது. அன்றைய மன்னர்கள் மூலமாக ஆங்கில - ஈரானிய எண்ணெய் நிறுவனத்தை உருவாக்கி எண்ணெய் வளத்தை மொத்தமாக சுருட்டினார்கள். ஈரான் நாட்டில் ஒரு பிரிட்டிஷ் அரசு போலவே இந்த நிறுவனம் செயல்பட்டது.
முகமது மொசாடெக் இந்த நிறுவனத்தை தேசியமயமாக்கினார். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல ஒப்பந்தங்களை ரத்து செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தார்.
இந்த ஒரு நிறுவனத்தின் வருவாய் முலமாக ஈரான் நாட்டின் முழு பட்ஜெட்டையும் பூர்த்தி செய்து, வறுமை மற்றும் பின் தங்கிய நிலைமைகளை சரி செய்ய முடியும் என்று அறிவித்தார். ஆங்கில ஈரானிய எண்ணெய் நிறுவனத்தில் பிரிட்டிஷார் தலையிடமுடியாமல் தடுக்கப்பட்டதால் அவர்களின் கப்பற்படைக்கு சேரவேண்டிய எண்ணெய் கிடைக்கவில்லை.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பட்ஜெட் பற்றாக்குறையை சரி செய்யக்கூடிய நிதியையும் ஈரான் எண்ணெய் வளத்திலிருந்தே எடுத்துச் சென்றார்கள். அதிலும் ஒரு நெருக்கடி ஏற்பட்டது. இதன் விளைவாக உதவிக்கு அமெரிக்காவையும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையையும் பிரிட்டன் அணுகியது.
பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள், ஈரானிய பிரதமரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறைக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட அமெரிக்க சிஐஏ நிறுவனம், மக்கள் செல்வாக்கு மிக்க முகமது மொசாடெக்கை பிரதமரிலிருந்து நீக்க திட்டங்களைத் தீட்டியது.ஈரான் மன்னர் ஷா, ஏற்கனவே சூடுபட்டதால் முகமது மொசாடெக்கை பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார்.
என்றாலும் அமெரிக்க உளவுத்துறை, ‘ஆபரேஷன் அஜாக்ஸ்’ திட்டத்தை உருவாக்கி, ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியது. ஈரான் பிரதமர் முகமது மொசாடெக்கை பதவி நீக்கம் செய்ய இந்தப் பணத்தை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறையும், பிரிட்டனின் M16 உளவுத்துறையும், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் தங்களுக்கான தளங்களை ரகசியமாக அமைத்துக் கொண்டன. மெல்ல மெல்ல பிரதமர் முகமது மொசாடெக்கிற்கு எதிராக கலவரங்கள் உருவெடுத்தன; உருவாக்கப்பட்டன.
அது மட்டுமல்ல... ‘கருப்பு பிரசாரம்’ என்ற பெயரில் ஒரு பிரசாரத் திட்டத்தை உருவாக்கி முகம்மது மொசாடெக்கை தொடர்ந்து இழிவுபடுத்தி, மக்களுக்கு விரோதமானவர் என்ற பொய்பிம்பத்தை உருவாக்கினார்கள்.
விளைவு... 1953ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பிரதமர் மொசாடெக் பதவி நீக்கம் செய்யப்பட்டு ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார். தனிமைச் சிறை. 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி புற்றுநோயால் இறக்கும் வரை அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதன்பிறகு அமெரிக்காவின் கைப்பாவையாக ஈரான் மாறியது. மன்னர் ஷாவின் ஆட்சி 1979ம் ஆண்டுவரை, அதாவது இஸ்லாமிய புரட்சி நடக்கிற வரை இருந்தது.
இதே காலத்தில்தான் ஈரான், இஸ்ரேலின் நெருக்கமான நாடாக செயல்பட்டது!ஆம். 1948ம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானதும் ஈரான் அதை அங்கீகரித்தது.
இஸ்ரேல் அரபு நாடுகளுக்கு எதிராக ஈரானை தனது நட்பு நாடாக கருதியது. ஈரானிய விவசாய நிபுணர்களுக்கு இஸ்ரேல் பயிற்சி கொடுத்தது; தொழில் நுட்ப அறிவையும் வழங்கியது. ஈரானுக்கான ஆயுதப் படைகளின் கட்டமைப்பை செய்வதற்கு உதவியது. இதற்கு பதிலாக ஈரான் மன்னர் இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கினார். காரணம், இஸ்ரேலின் வளர்ச்சிக்கு எரிபொருள் அடிப்படையான தேவையாக இருந்தது. அதுமட்டுமல்ல... இஸ்ரேலுக்கு வெளியே இரண்டாவது பெரிய யூத சமூகம், ஈரானில்தான் அன்று இருந்தது. 1979ம் ஆண்டு அயதுல்லா கோமேனி தலைமையில் இஸ்லாமிய ஆட்சி ஏற்படும் வரை இதுதான் நிலைமை.
ஆனால், கோமேனி ஆட்சிக்கு வந்ததும் இஸ்ரேல் நாட்டுடன் இருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தார். பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.
இதனால் ஈரானுக்கு மத்திய கிழக்கு பிராந்தியங்களில் செல்வாக்கு வளர்ந்தது. 1982ம் ஆண்டு இஸ்ரேல், தெற்கு லெபனானுக்குள் நுழைந்து உள்நாட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றபோது, ஈரானிய அரசு புரட்சிகர காவல் படையை லெபனானுக்கு அனுப்பி இஸ்புல்லா போராளி குழுக்களுக்கு உதவியது. இப்படியாக பிராந்திய செல்வாக்கின் அளவை ஈரான் அதிகரித்துக் கொண்டது. இதை அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் விரும்பவில்லை. ஈரான் நாட்டிற்கு எதிராக ஈராக்கை தூண்டி விட்டார்கள். ஈராக் அதிபராக அன்று இருந்த சதாம் உசேனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் அமெரிக்கா கொடுத்து உதவியது. ஆயுதம் கொடுத்தவர்களே பிறகு அபாயகரமான ஆயுதம் என்று சொல்லி ஈராக்கை அழித்தது தனிக்கதை. இங்கு அது தேவையில்லை.
தற்பொழுது ரஷ்ய - சீன - வடகொரிய உறவுகள் மேம்பட்டு வருகின்றன. அத்துடன் ரஷ்ய, சீன, ஆப்பிரிக்க நாடுகளின் நெருக்கமும், பொருளாதார உறவுகளும் புதிய மாற்றங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இச்சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ - பொருளாதார பலமிக்க ஒரு நாடாக ஈரான் பரிணமித்தால்..?
எனவேதான் இஸ்ரேலைத் தூண்டி ஈரான் மீது தாக்குதலை மேற்குலகம் ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இனி... என்ன நடக்கும்? தெரியவில்லை. ஆனால், மத்திய கிழக்கின் நிலமெல்லாம் ரத்தம் என்பது மட்டும் உண்மை.
பேராச்சி கண்ணன்
|