மாற்றுத்திறனாளிகளும் ஈஸியாக கார் ஓட்டலாம்!
‘‘பேரியர் ஃப்ரீ என்விரான்மென்டிற்காக யு.என்னில் இந்தியா 7வது நாடாக கையெழுத்திட்டுள்ளது.  நம் தமிழ்நாடு அதைச் செயல்படுத்துகிறது. மாற்றுத்திறனாளிகள் அதிகமாகக் கார் ஓட்டுவதும், சமவாய்ப்பு பெறுவதும் தமிழகத்தில்தான் அதிகம்...’’ எனப் பேச ஆரம்பித்த சங்கர் ஜெய் கிஷன், 38 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத் திறனாளிகள் காரை ஓட்டுவதற்கான வாகன மாடிஃபிகேஷன் வேலை (retrofit) செய்துகொடுத்தும், காரை ஓட்ட பழக்கிக் கொடுத்தும் வருகிறார். 
‘‘சிறுவயதில் இருந்தே என் வயது மாற்றுத் திறனாளி நண்பனோடு கூடவே படித்து விளையாடி வளர்ந்தவன் நான். அவன் பெயர் வெங்கட். என்னைவிட அவன் புத்திசாலி. ஆனால், என்னால் முடிந்ததை அவனால் செய்ய முடியாமல் ரொம்பவே சிரமப்படுவான்.  நான் பயணிக்கும் இடமெல்லாம் அவனையும் என் வண்டியின் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் செல்வேன். அப்படியே டெக்னிக்கல் விஷயங்களிலும் ஆர்வம் இருந்ததால், கையில் கிடைப்பதையெல்லாம் திறந்து பார்த்து, எப்படி வேலை செய்கிறது, என்னவெல்லாம் உள்ளே இருக்கென ஆராய்ச்சி செய்வேன். 
தவழும் நிலையில் இருந்த என் மாற்றுத் திறனாளி நண்பனுக்காக ட்ரை வீலர் ஒன்றை வடிவமைத்து இமயமலை வரை அவனோடு சென்று வந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியாக, இதைப்பார்த்த மாற்றுத் திறனாளிகள் பலரும் என்னைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினர்.
என் நண்பனைப் போல அவர்களும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வலம் வரட்டுமே என முடிவெடுத்து, சிறிய அளவிலான ஒர்க் ஷாப் ஒன்றை வாடகை இடத்தில் தொடங்கியபோது, ரயில்வே துறையில் நான் பணியில் இருந்தேன்.ஒரு கட்டத்தில் இதுவே எனக்கான எனர்ஜியாக மாற, ரயில்வே துறை வேலையை உதறிவிட்டு இதையே முழுநேரத் தொழிலாக மாற்றத் தொடங்கினேன். மாற்றுத் திறனாளிகள் பிரச்னையை அவர்களின் நிலையில் இருந்து யோசிக்கத் தொடங்கி, அவர்கள் தடைகளை உடைக்கத் தொடங்கியதுமே, என் நட்பு வட்டம் விரிவடைந்தது. இத்
தருணத்தில்தான் பேரானந்தம் என்ன என்பதை உணர ஆரம்பித்தேன்.
குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளி குழந்தையாக இருந்தால், யாருக்கு கார், பைக் போன்ற வாகனங்கள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக அந்தக் குழந்தைக்கு மொபிலிட்டி வசதி செய்து கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் தடையின்றி கல்வி, விளையாட்டு, வேலையென அவர்கள் நகர்வார்கள்.
இல்லையெனில் கடைசிவரை காட்சிப் பொருளாகவே வீட்டிற்குள் இருப்பார்கள்...’’ என்கிற சங்கர், ‘‘காரின் அளவை டிசபிளிட்டியோடு தொடர்பு படுத்திப் பார்க்கவேகூடாது. இனோவா, பார்ச்சுனர், ஆல்கஷார், எஸ்யூவி போன்ற பெரிய சைஸ் கார்களை அசால்ட்டாக ஓட்டும் மாற்றுத் திறனாளி நண்பர்கள் இருக்கிறார்கள்.
அதேபோல் நானோவில் தொடங்கி மெர்சிடிஸ் பென்ஸ், ரேன்ஞ் ரோவர் வரை எந்தக் காரையும் மாற்றுத்திறனாளிக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்துவிட முடியும்...’’ என அழுத்தமும் நம்பிக்கையுமாக சொல்கிறார்.
‘‘மாற்றுத் திறனாளிகளைப் பொறுத்தவரை பிரச்னை எத்தனை சதவிகிதம் அவருக்கு இருக்கிறது என்பதல்ல முக்கியம். 95 சதவிகிதம் தண்டுவடம் பாதிக்கப்பட்ட குவாட்டர்பிளெஜியா மாற்றுத்திறனாளிகளும், லோகோமோட்டார் டிசபிளிட்டி உள்ளவரும் காரை தாராளமாக ஓட்ட முடியும்...’’ என முழுமையாக நம்பிக்கை தருகிறார் சங்கர்.
‘‘இது ஒன்றும் மிகப் பெரிய ராக்கெட் டெக்னாலஜி கிடையாது. வாகனத்தை ஓட்ட வைப்பது மூளைதான். மூளையிடும் கட்டளையை செய்வதே கை மற்றும் கால்கள். எனவே கால்கள் செயல்திறன் இல்லாதவர்களுக்கு கைகளிலே இயக்கவும், இடது கை செயலிழந்தவர்களுக்கு வலது கை, வலது கை செயலிழந்தவர்களுக்கு இடது கை என மாற்றத்தை செய்து கொடுக்கிறோம்.
பயம் ஒருவரின் அறிவை மழுங்கச் செய்துவிடும் என்பதால், மாற்றுத்திறனாளியின் பயத்தை போக்குவதே இதில் முதல் படி. பயத்தை முற்றிலும் நீக்கி கண்டிப்பாக அவர்களை காரை ஓட்ட வைத்துவிடுவோம்...’’ என்றவர், ‘‘மாற்றுத்திறனாளி ஒருவர் கார் ஓட்டினால் புதிய கதவுகள் அவருக்குத் திறக்கும்...’’ என்கிறார் அழுத்தமாக.
‘‘ரெட்ரோஃபிட் வேலைகள் அதிகம் வரவர ஆர்வம் உள்ள இளைஞர்கள் சிலரைத் தேடிப்பிடித்து பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்தினேன். ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டு நான் இதைச் செய்வதை, என் மனைவி முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும் உருப்படியாக நான் எதையோ செய்கிறேன். அதுவும் மாற்றுத்திறனாளிகளுக்காகச் செய்கிறேன் என்பதை உணர்ந்ததும் தோள்கொடுக்க ஆரம்பித்தார்.
பயணங்கள்தான் என் மனைவிக்குப் பிடித்தமான விஷயம் என்பதால், அவருக்கும் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தேன். இன்று அவர் கிட்டத்தட்ட 5000த்துக்கும் அதிகமான மாற்றுத்தினாளிகளுக்கு கார் மற்றும் டூவீலர் ஓட்ட பயிற்சி கொடுத்திருப்பதுடன், ஆர்டர் வெளியூர் எனில், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட அவரின் வண்டியை, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் என்றாலும் தனியாக ஓட்டிச் சென்று டெலிவரி செய்துவிட்டு வருகிறார்.
சிலரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே ஒருவாரம் அல்லது 10 நாள் எனத் தங்கி, காரை ஓட்டுவதற்கான பயிற்சியும் கொடுத்துவிட்டு திரும்புகிறார். மாற்றுத்திறனாளி வுமன் டிரைவர்கள் பலரை உருவாக்கியதில் என் மனைவியின் பங்கு முக்கியமானது.நானும் ஒரு பைக்கர் என்பதால் விடாமல் நான்-ஸ்டாப்பாக இரண்டாயிரம் கிலோ மீட்டர் கூட பைக்கினை ஓட்டுவேன். பைக் ஓட்டுவது என் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று.
ஹேண்ட்பாரில் கையை வைத்தால் நிற்காமல் கோவா போய்ச் சேர்ந்துவிடுவேன். எனவே மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்றை உருவாக்கி, ஒருங்கிணைத்து மாடிஃபிகேஷன் செய்த ட்ரை வீலரை அவர்களையே ஓட்டவைத்து, லடாக்கில் உள்ள உயரமான பாதையான கார்துங்க் லா பாஸ் வரை வருடம் ஒருமுறை அவர்களை அழைத்துச் செல்கிறேன். என் மனைவி ஜெயாவும் அவர்களுக்கு உதவ பில்லியன் ரைடராக என் பின்னால் அமர்ந்து பயணிப்பார்...’’ என மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடைபெற்றார் சங்கர் ஜெய் கிஷன்.
கார் டிரைவிங் எளிமையான விஷயம் - ஜெயா ஜெய் கிஷன்
‘‘டூவீலர் ஓட்டுவது மாதிரியே காரை ஓட்டினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் மாற்றுத் திறனாளிகள் கார் ஓட்டுவதும். நார்மலாக இருப்பவர்கள் கால்களால் பிரேக், ஆக்ஸிலேட்டரை அழுத்தினால், மாற்றுத் திறனாளிகள் கைகளால் இயக்குவர். அவ்வளவுதான். அதற்கேற்ப் வண்டியின் மாடிஃபிகேஷன் வேலைகளை என் கணவர் சிறப்பாகவே செய்வார். எப்படியான குறைகளுடன் மாற்றுத் திறனாளி வந்தாலும், அவருக்கான சப்போர்ட் சிஸ்டத்தை உருவாக்கிக் கொடுத்துவிடுவார்.
ஹேண்ட் ஆக்ஸிலேட்டர் மட்டுமே அவரவர் திறனுக்கு ஏற்ற வேக அளவில் இருக்கும். உதாரணத்திற்கு தசைச் சிதைவு நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆக்ஸிலேட்டர் ஹேண்டிலை லைட்டாகத் தொட்டாலே போதும். பிரஷ்ஷர் தேவை இல்லை. கீழ்நோக்கி லேசாகத் தொட்டாலே வண்டி நின்றுவிடும்...’’
ஓட்டுநர் உரிமம் பெற...
* மாற்றுத் திறனாளிக்கென அரசு வழங்கிய அடையாளச் சான்று அவசியம். * ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் முன்பு, எந்த மாதிரியான ரெட்ரோஃபிட் வண்டியை ஓட்ட முடியும் என்பதற்கு ஃபிட்னஸ் சான்று அவசியம். * இதற்கென சென்னை கேகே நகரில் மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு மையம் செயல்படுகிறது. அங்கு ஆர்த்தோ மருத்துவர் கை, கால், ஹிப் ஸ்ட்ரெங்த்தை பரிசோதித்து சான்று தருவார்கள். * எல்.எல்.ஆர்.க்கு விண்ணப்பிக்கும் முன்பே மாற்றுத்திறனாளி பெயரில் கார் இருக்க வேண்டும். * எல்.எல்.ஆர் பெற்று, காரை ஓட்டிப் பழகியதும் ஓட்டுநர் உரிமம் பெறலாம். * மாற்றுத்திறனாளி கார் வாங்கினால் ஆன்ரோட் விலையில் 80 சதவிகிதத்திற்கு மட்டுமே பில்லிங் செய்யப்படும். வரி விலக்கும் உண்டு. * கார் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு பணம் செலுத்தத் தேவையில்லை. ஒவ்வொரு வருடத்திற்கான காப்பீட்டுத் தொகை 50 சதவிகிதம் மட்டுமே பெறப்படுகிறது. * எங்கு சென்றாலும் ஃப்ரீ ஃபாஸ்ட் ட்ரேக் வசதியும் உண்டு.
செய்தி:மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: அருண்
|