யுத்தப் பறவைகள்!



ட்ரோன்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்..!

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடும் போர் நடந்து வருகிறது. குறிப்பாக இரண்டு நாடுகளும் ட்ரோன்கள் வழி தாக்குதலில் அதிகம் ஈடுபட்டு வருகின்றன.
சமீபத்தில்கூட உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் விமானத் தளங்களைக் குறி வைத்து, ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ என்ற பெயரில் ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியது. இதில் 41 விமானங்கள் சேதமடைந்ததாகச் சொல்லப்பட்டது.

இதற்கு ரஷ்யா உடனடியாக, 400 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதல் நீண்ட மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக மாறி உலகையே அச்சுறுத்தியது.முன்பு ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தினமும் டஜன் கணக்கில் மட்டுமே ட்ரோன் வழி தாக்குதலை நடத்தி வந்தது. 
ஆனால், இப்போது ஒரு நாளில் 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தி வருவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ‘ஆபரேஷன் ஸ்பைடர் வெப்’ தாக்குதலுக்குப் பிறகு அடுத்த சில நாட்களிலேயே ரஷ்யா 479 ட்ரோன்களை ஏவி தாக்குதலை நடத்தியதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இப்படி போர்களில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து ட்ரோன் தாக்குதலே நடத்தி வருகிறது. கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. ஆனால், நடுவானிலேயே அந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில் ட்ரோன்கள் என்பது என்ன, எந்தெந்த நாடுகள் தங்கள் ராணுவத்தில் ட்ரோன்கள் தொழில்நுட்பத்தை கையாளுகின்றன, எத்தனை வகையான ராணுவ ட்ரோன்கள் உள்ளன என்பது குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
 
ட்ரோன்

ட்ரோன் என்பது ஒரு ஆளில்லா வான்வழி வாகனமாகும். அதாவது மனித விமானி இல்லாமல் பறக்கக்கூடிய ஒரு இயந்திரம். இதனை ஆங்கிலத்தில் UAV அல்லது UAS என்கின்றனர். இது Unmanned Aerial Vehicle அல்லது Unmanned Aerial System என்பது இதன் விரிவாக்கம். இதன் விமானப் பாதை சாஃப்ட்வேர் ப்ரொகிராம் மூலமாகத் திட்டமிடப்படுகிறது அல்லது ரிமோட் கண்ட்ரோல் வழியாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

நாமெல்லாம் உயரே சென்று புகைப்படம் எடுத்து தரும் சிறிய அளவிலான ட்ரோன்களை மட்டுமே பார்த்திருப்போம். ஆனால், விமானம் போல் விதவிதமான வடிவில் ட்ரோன்கள் உள்ளன.
இந்த ட்ரோன் தொழில்நுட்பம் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக முன்னேறியுள்ளதால் ராணுவப் பயன்பாட்டில் இதற்கு ஏக டிமாண்ட்.இதற்குக் காரணம் நிகழ்நேரத்தில் உளவு பார்ப்பது, துல்லியமான தாக்குதல்கள் செய்வது, மனித உயிர்களைப் பணயம் வைக்காமல் செயல்களை மேற்கொள்வது போன்ற நன்மைகளை ட்ரோன்கள் வழங்குகின்றன என்பதே! இதனால் ஆளில்லா இந்த இயந்திரங்கள் போர்க்களத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

ராணுவத்தில் ட்ரோன்கள்

பொது வாக ட்ரோன்களில் பல வகைகள் இருக்கின்றன. இதில் வான்வழி ஆய்வுக்கும், வான்வழி புகைப்படங்கள் எடுக்கவும், விவசாயத்திற்கும், கண்காணிப்பிற்கும், பொழுதுபோக்குப் புகைப்படங்கள் எடுக்கவும் என வெரைட்டியான ட்ரோன்கள் உள்ளன.

ஆனால், ராணுவத்தைப் பொறுத்தவரை உளவு மற்றும் கண்காணிப்பிற்கான ட்ரோன்கள், போர் அல்லது தாக்குதலுக்கான ட்ரோன்கள், தளவாடங்கள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்லும் ட்ரோன்கள், சிறப்பு ட்ரோன்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

இதிலும் ட்ரோன்களின் எடையைப் பொறுத்து அவை சிறிய, நடுத்தர, பெரிய ட்ரோன்கள் எனப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில் அதிநவீன கேமராக்கள், சென்சார்கள், தாக்குதலுக்கான குண்டுகள் உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. 

இதில் முதலாவதாக உளவு மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் உளவுத் தகவல்களை சேகரிக்கவும் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, ‘ஆர்க்யூ 4 குளோபல் ஹாக்’ என்ற அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் சுட்டிக்காட்டப்படுகிறது. ஏனெனில், இது அதிக உயரத்தில் நீண்டநேரம் நீடித்து கண்காணிப்புப் பணிகளைச் செய்யும் திறன் கொண்டது.

போர் அல்லது தாக்குதலுக்கான ட்ரோன்கள் ஆயுதம் ஏந்திச் செல்பவை. ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் பொருத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் குறிப்பிட்ட இலக்கை தாக்கும் திறன்
கொண்டவை. இதற்கு உதாரணமாக எம்க்யூ-9 ரீப்பர் என்ற ட்ரோனை குறிப்பிடுகின்றனர் நிபுணர்கள். 

இதுவும் அமெரிக்காவின் விமானப்படையில் இருப்பதுதான்.ஆனால், மற்ற நாடுகளும் போர் ட்ரோன்கள் வைத்துள்ளன. இதில் காமிகேஸ் ட்ரோன் தனிரகம். இது தற்கொலை ட்ரோன் என அழைக்கப்படுகிறது. இது ஆயிரம் கிமீ தூரத்திற்கும் அப்பால் உள்ள இலக்கைக்கூட தாக்கும் திறன் உடையது.     

ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக, ‘ஷாஹெட்-136’ என்ற கேமிகேஸ் ட்ரோன்களையே பயன்படுத்தி வருகிறது. இதை ஈரானுக்கு சொந்தமான நிறுவனம் தயாரிக்கிறது. ஈரானும், ரஷ்யாவும் ஷாஹெட் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அடுத்து தளவாட மற்றும் சரக்கு ட்ரோன்கள் என்பவை ராணுவத்திற்குத் தேவையான தளவாடங்கள், சரக்குகள், மருந்துப்பொருட்கள் போன்றவற்றை இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

இறுதியாக சிறப்பு ட்ரோன்களை ராணுவங்கள் வைத்துள்ளன. இவை ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்குபவை. இதில் ஸ்வார்ம் ட்ரோன்கள், எலக்ட்ரானிக் வார்ஃபேர் ட்ரோன்கள் என்ற வகைகள் இருக்கின்றன.

இதில் ஸ்வார்ம் ட்ரோன்கள் என்பவை குழுவாக இணைந்து கம்யூனிகேட் செய்து செயல்படும்படி வடிவமைக்கப்பட்டவை. இவை ஒரு குழுவாக இணைந்து கண்காணிப்பு செய்து தாக்குதல்களை நடத்தும். எலக்ட்ரானிக் வார்ஃபேர் ட்ரோன்கள் எதிரிகளின் தகவல் தொடர்பு மற்றும் ரேடார் அமைப்புகளை சீர்
குலைக்கும் திறன் கொண்டவை.

ட்ரோன் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள நாடுகள்

உலகில் அதிக இராணுவ ட்ரோன்களைக் கொண்டுள்ள முதல் பத்து நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடம் சுமார் 13 ஆயிரம் ட்ரோன்கள் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இதற்கடுத்த இடத்தில் இருப்பது துருக்கி. இந்நாட்டில் சுமார் 1,421 ட்ரோன்கள் உள்ளதாம். பிறகு போலந்து சுமார் 1,209 ட்ரோன்களுடன் மூன்றாவது இடத்திலும், ரஷ்யா சுமார் 1,050 ட்ரோன்களுடன் நான்காவது இடத்திலும், ஜெர்மனி 670 ட்ரோன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தொடர்ந்து ஆறாவது இடத்தில் இந்தியா 625 ட்ரோன்களுடன் வீற்றிருக்கிறது. இதனையடுத்து ஃபிரான்ஸ் 591 ட்ரோன்களுடன் ஏழாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 557 ட்ரோன்களுடன் எட்டாவது இடத்திலும், தென்கொரியா 518 ட்ரோன்களுடன் ஒன்பதாவது இடத்திலும், பின்லாந்து 412 ட்ரோன்களுடன் பத்தாவது இடத்திலும் உள்ளதென பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்தியாவிடம் உள்ள ட்ரோன்கள் அனைத்தும் இஸ்ரேலிடம் வாங்கப்பட்டவை என்கின்றன தகவல்கள். இந்தியாவிடம் உள்ள 625 ட்ரோன்களில் 600 ட்ரோன்கள் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பைலைட் மாடல்கள். இது உளவு, கண்காணிப்பு, இலக்கை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை.  
 
ட்ரோன் மூலம் காடுகளை உருவாக்கும் ஜப்பான்

ட்ரோன்கள் போர்களில் அழிவிற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுமா என்றால் இல்லை என்பதே பதில். பல்வேறு ஆக்கபூர்வமான வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமே ஜப்பான் செய்திருக்கும் பணி.ஏஐ மூலம் இயங்கும் ட்ரோன்களைக் கொண்டு காடுகளை மீட்டு வருகிறது ஜப்பான். 

அதாவது ட்ரோன் மூலம் காடுகளை உருவாக்குகிறது.அங்குள்ள விஞ்ஞானிகள் LiDAR ஸ்கேனிங்கை பயன்படுத்தி காடுகளிலுள்ள நிலப்பரப்பையும், மண்ணின் தன்மையையும் ஆய்வு செய்கின்றனர். பின்னர் நடவு செய்வதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிகின்றனர்.

காட்டுத்தீ பாதித்த பகுதிகளில் இந்த முறையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ட்ரோன் வழியே இடங்கள் கண்டறியப்பட்டதும் மக்கும் விதைப் பைகளை நிலத்தில் நடுகின்றனர்.
தற்போது காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட குமாமோட்டோ என்ற பகுதியில் இந்தமுறையை கையாண்டதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட விதைகள் முளைத்துள்ளன.
காடுகளை வேகமாக மீட்டெடுக்கும் தீர்வை ட்ரோன்கள் வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர் அங்குள்ள விஞ்ஞானிகள்.     

எப்படி கத்தி, ஆட்களை குத்த மட்டுமல்லாமல் காய்கறிகளை வெட்டவும் பயன்படுகிறதோ அப்படி ட்ரோன் அழிக்க மட்டு மல்ல, ஆக்கவும் பயன்படும்; பயன்படுகிறது.
மனிதனின் உழைப்பு, கற்பனையில் உருவாகியிருக்கும் இந்தக் கருவியை நாம் அழிக்கப் பயன்படுத்தப் போகிறோமா... ஆக்கபூர்வமாக பயன்படுத்தப் போகிறோமா?

சிறந்த 5 ராணுவ ட்ரோன்கள்

இதன்படி அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் எம்க்யூ-9 ரீப்பர் சிறந்த ட்ரோனாக முதலிடத்தில் உள்ளது. இது அதிக பேலோடுடன் நீண்ட தூரம் செல்லக்கூடியது. அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் துருக்கியின் பைரக்டர் டிபி2 மற்றும் தாய் அன்கா ட்ரோன்கள் உள்ளன. நான்காவதாக சீனாவின் CAIG விங் லூன்ங் II, ஐந்தாவதாக ரஷ்யாவின் க்ரோன்ஸ்டாட் ஓரியன் ட்ரோன்கள் இருக்கின்றன.

இந்த க்ரோன்ஸ்டாட் ஓரியன் ட்ரோனை ரஷ்யா உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. இது MALE (Medium altitude, long endurance) வகை ட்ரோன் ஆகும். அதாவது நடுத்தர உயரத்தில் நீண்ட தாங்கும் திறன் கொண்ட ட்ரோன் இது. இதனை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.

பேராச்சி கண்ணன்