பலூன் தியேட்டர்!



சினிமா மார்க்கெட்டில் இது புதுசு!

எப்பேர்ப்பட்ட நவீன தொழில்நுட்பம் வந்தாலும் சினிமா திரையரங்கங்களின் செயல்பாடு நிற்பதில்லை. தியேட்டர் என்பது இப்போது வரை சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

டெக், விசிடி, டிவிடி... ஏன் இப்போது ஓடிடி வரை வந்துவிட்டன. 
ஆனாலும் தியேட்டருக்கு வந்து விசில் அடித்து கை தட்டும் மக்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.படமே பார்க்காதவர்கள் கூட ஏதாவது ஒரு நல்ல படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றால் குடும்பத்துடன் திரையரங்கம் வரும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. பொழுதுபோக்குகளில் உலகளவில் டாப்பில் இருப்பதும் சினிமாதான்.

என்கையில் அதைச் சார்ந்த திரையரங்க தொழில் மட்டும் அவ்வளவு சுலபமாக நின்று விடுமா என்ன? திரையரங்கங்களும் இப்போது தன்னை அடுத்த பரிணாமத்திற்கு மாற்றிக் கொண்டிருக்கின்றன. 
திரையரங்கங்களின் எண்ணிக்கை ஒருபக்கம் குறைந்து கொண்டே வந்தாலும் மிகக் குறைந்த செலவில் மக்களின் கையைக் கடிக்காத அளவிற்கு சில மாற்றங்களுடனும் இன்னொரு பக்கம் திரையரங்கங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதுதான் மொபைல் திரையரங்கங்கள் மற்றும் பலூன் திரையரங்கங்கள்.

அதாவது தற்காலிகமாக 24 மணி நேரம் முதல் அதிகமாக 40 நாட்களில் ஒரு திரையரங்கமே அமைத்து விடும் புதிய டெக்னாலஜி. தமிழ்நாட்டில் முதல்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் இந்த பலூன் திரையரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இது வழக்கமான சிமெண்ட் கட்டடமல்ல; மாறாக, இது காற்று நிரப்பப்படும் ஒரு தற்காலிக பலூன் போன்ற கட்டமைப்பு.

இவற்றை ‘இன்ஃப்லேட்டபிள் ஸ்ட்ரக்ச்சர்ஸ்’ (Inflatable Structures) என வரையறுக்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். இதற்கான கட்டுமானச் செலவு மிகக் குறைவு. மேலும் கால
அவகாசமும் ரொம்பக் குறைவு.

இதனை மையமாகக் கொண்டே தற்போது இந்த பலூன் தியேட்டர்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தற்சமயம் பிக்சர் டைம் உட்பட சில டெக்னிக்கல் நிறுவனங்கள் இதனை கார்ப்பரேட் முறையில் ஃபிரான்சைஸ் அல்லது ஸ்டார்ட் அப் தொழிலாகவே ஆர்வம் உள்ளவர்களுக்கு வைத்துக் கொடுக்கிறது.தர்மபுரி உட்பட இந்தியா முழுவதும் மிக அமைதியாக இந்த மொபைல் ஸ்டைல் தியேட்டர்கள் இதுவரை 30க்கும் மேலான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

‘‘பலூன் தியேட்டர் என்பது ஒரு பெரிய காற்று நிரப்பிய டோம் வடிவ கட்டடம்...’’ என்றபடி இதுகுறித்து பேச ஆரம்பித்தார் பிக்சர் டைம் நிறுவனர் சுஷில் சௌத்ரி.
‘‘பார்ப்பதற்கு பொருட்காட்சிகள் மற்றும் மால்களில் குழந்தைகள் குதித்து விளையாட வைத்திருக்கும் பலூன் வடிவ அமைப்பு போல இருக்கும். இது நெருக்கமான நைலான் அல்லது பிவிசி மெம்பிரேன் போன்ற மென்மையான, ஆனால், வலுவான பொருட்களால் உருவாக்கப்பட்டது.

ஹெவி-ட்யூட்டி காற்றழுத்த இயந்திரங்கள் மூலம் நிரந்தரமாக காற்று ஊதப்படுவதால், கட்டமைப்பு தளராமல் இருக்கும். சிமெண்ட் அல்லது கான்கிரீட் கட்டடங்களைப் போலல்லாமல், இதில் ஒலி வீச்சுகளைக் கட்டுப்படுத்துவது சவால்தான். அதற்காக, சுவர்களில் ‘அவுட் வென்ட்’ மற்றும் ‘சவுண்ட் அப்சார்பிங் ஃபேப்ரிக்ஸ்’ பயன்படுத்தியிருக்கோம். 5.1 அல்லது 7.1 சவுண்ட் சிஸ்டம் இதில் இணைக்கப்பட்டிருக்கும். ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாமல், இந்த தியேட்டரை எளிதில் கழற்றி வேறு இடத்திற்கு மாற்றலாம். இது Pop-Up Cinema மாதிரி அமைக்கப்படும்.

மிகக் குறைந்த காலத்திலே (24 - 48 மணி நேரத்தில் கூட) அமைக்கக்கூடியது; குளிர்சாதன வசதி கொண்டுள்ளது. எரிவாயு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய சிஸ்டங்கள்.
150 முதல் 300 பேர் வரை அமரக்கூடிய அரங்கம். 

புஷ்  பேக் இருக்கைகள், குவாட்- ப்ரொஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், திரையை எந்தப் பகுதியிலிருந்தும் தெளிவாகக் காணமுடியும்...’’ என்றவர் பார்வையாளர்களின் பாதுகாப்பு இந்தத் திரையரங்கங்களில் எப்படி உறுதி செய்யப்படுகிறது என்றும் விவரித்தார்.

‘‘ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் காற்றழுத்த அளவை சோதிக்கும் கணினி அடிப்படையிலான மானிட்டரிங் உண்டு. தீயணைப்பு, அவசர வழி, சிசிடிவி கண்காணிப்பு ஆகியவை பக்காவாக பொருத்தப்பட்டுள்ளன. காற்றழுத்தம் குறைந்தால் தானாக அலாரம் ஒலிக்கும். காற்றழுத்தம் அதிகரிக்கும் பம்பும் இயங்கும். மொத்தத்தில் இந்தத் திரையரங்கம் சூழலுக்கும் நண்பனாக இருக்கும்.

கட்டுமானச் செலவு பாரம்பரிய திரையரங்க கட்டுமானத்தை விட 60% வரை குறையும். சிறிய நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் தற்காலிக திரையரங்கமாக அமைக்கும் வசதி உண்டு.
எனவே, நிகழ்ச்சிகள், விழாக்கள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றிற்கும் இந்த அமைப்பை பயன்படுத்தலாம். இதன் வழியாக சினிமாக்கள் இல்லாத காலங்களிலும் உரிமையாளர்கள் வருமானம் ஈட்டலாம்.  

ஒரு சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டுமோ அப்படிப் பார்க்கும் அனுபவத்தை நகர மக்களுக்கும், மாடர்ன் பார்வையாளனுக்கும் மட்டுமே கொடுத்துவிட்டு கிராமத்து மக்களை காலம் காலமாகவே பொழுதுபோக்கு அம்சங்களில் நாம் புறக்கணித்து வருகிறோம். நகரவாசிகள் ஏற்கனவே சினிமாவை வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். அவர்களிடமே மீண்டும் மீண்டும் இந்த வசதிகளைக் கொடுத்தால் எப்படி வியாபாரம் ஆகும்?

பாதி இந்திய மக்களுக்கு திரையரங்க வசதியே செய்து கொடுக்காமல் தொழில் சரிந்து வருகிறது, அரங்கங்கள் மூடப்படுகின்றன... என நமக்கு நாமே புலம்பிக் கொண்டிருந்தால் எப்படி?
IMAX , Dolby Atmos... இவையெல்லாம் எப்படி இருக்கும், ஒரு நல்ல சினிமா அனுபவம் என்றால் என்ன... இதெல்லாம் டயர் 3 முதல் டயர் 5ல் உள்ள புறநகர் - கிராமப்புற பகுதிகளுக்கு கொடுக்க வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு வருடமும் சுமார் 2000 படங்கள் இந்தியாவில் வெளியாகின்றன. இதில் வெறும் 600 படங்களுக்குத்தான் சரியான திரைகளே கிடைக்கின்றன. மீதிப் படங்கள் வருமானம் ஈட்ட முடியாமல் சரிவைச் சந்திக்கின்றன. காரணம், நகரத்து மல்டிபிளக்ஸ் அரங்கங்களில் வெளியிடும் அளவிற்கு சின்ன படங்களிடம் பட்ஜெட் கிடையாது. 

என்கையில் இப்படியான பலூன் மற்றும் மொபைல் திரையரங்கங்கள் எதிர்காலத்தில் சின்ன படங்களுக்கான இடமாகவும் புறநகர் - கிராமப்புற பகுதி மக்களின் சினிமா அனுபவத்தை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பமாகவும் இருக்கும்...’’ என்கிறார் சுஷில் செளத்ரி.

ஷாலினி நியூட்டன்