இந்திய ஜனாதிபதி மாளிகையில் முதல் டும் டும் டும்!



இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்பு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். அதுவும் முன்கூட்டியே முறைப்படியான அனுமதியை வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். அதிலும் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்தான் அங்கு பொதுவாக நடக்கும்.

அப்படிப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் பிப்ரவரி 12ம் தேதி - கடந்த புதன்கிழமை - முதல் முறையாக ஒரு தனியாரின் நிகழ்ச்சி நடந்தது. மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பூனம் குப்தா எனும் பெண் அதிகாரியின் திருமணம்தான் அந்த நிகழ்ச்சி. இதன் மூலமாக ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் முதல் திருமணம் என்கிற பெருமை பூனம் குப்தாவின் திருமணத்துக்கு கிடைத்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து யார் இந்த பூனம் குப்தா என்கிற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் personal security officer ஆக வேலை பார்ப்பவர்தான் பூனம் குப்தா.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவபுரி என்கிற பகுதியைச் சேர்ந்தவரான பூனம் குப்தா, கணிதத்தில் பட்டம் பெற்றவர். 2018ம் ஆண்டில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையில் வேலை பார்த்து வருகிறார்.

பீகார் மாநிலத்தில் நக்சல்கள் நிறைந்த பகுதியில் சிறப்பாகப் பணியாற்றிய பூனம் குப்தா, பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களில் சிறந்தவராகக் கருதப்படும் பூனம் குப்தா, சமீபத்தில் 74வது குடியரசு தின அணிவகுப்பின்போது அனைத்து பெண்களும் அடங்கிய ஒரு படைப்பிரிவை வழிநடத்தி தன் திறமையை வெளிப்படுத்தினார்.

பூனம் குப்தாவுக்கும், காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையில் துணை கமாண்டன்ட் ஆக இருக்கும் அவ்னாஷ் குமாருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது.
தான் வேலை பார்க்கும் ஜனாதிபதி மாளிகையிலேயே தன் திருமணம் நடக்க வேண்டும் என்று பூனம் குப்தா விரும்பி இருக்கிறார். இதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் அனுமதி கேட்டிருக்கிறார்.பூனம் குப்தா ஒரு சிறந்த அதிகாரி என்பதால், ராஷ்டிரபதி பவனில் அவரது திருமணம் நடக்க இந்திய ஜனாதிபதியான திரௌபதி முர்மு அனுமதி கொடுத்தார்.

அதன்படி பிப்ரவரி 12ம் தேதி ராஷ்டிரபதி பவனில் இருக்கும் மதர் தெரசா க்ரவுன் காம்ப்ளக்சில் பூனம் குப்தாவின் திருமணம் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் நடைபெற்றது. எளிய முறையில் என்றாலும் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற முதல் திருமணம் இதுதான்!
வாழ்க மணமக்கள்!

ஜான்சி