மாணவியாக மாறிய போலீஸ்!மாணவியாக மாறிய போலீஸ்!



கல்லூரியில் படிக்கிறீர்கள். உங்களுடன் சில வாரங்கள் நெருங்கிப் பழகிய ஒருவர், திடீரென ஒரு நாள், ‘நான் உங்கள் கல்லூரி மாணவி இல்லை. போலீஸ்! ராகிங் செய்பவர்களைப் பிடிப்பதற்காக கல்லூரி மாணவி போல் வேடமிட்டு நடித்தேன்...’ என்று சொன்னால் எப்படி இருக்கும்?

திரைப்படக் காட்சியைப் போல் தெரியும் இந்த சம்பவம்தான் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இருக்கும் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் அரங்கேறியிருக்கிறது.
ஒரு சக மாணவியைப் போல் அந்த கல்லூரியின் கேண்டீனில் எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்த ஷாலினி சவுகான், திடீரென ஒரு நாள் போலீஸ் கான்ஸ்டபிளாக அவதாரம் எடுத்தார். ராகிங்கில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்யக்காரணமாக இருந்திருக்கிறார்.

ஷாலினி சவுகான், உண்மையில் ஃப்ரெஷ். ஆம். சமீபத்தில்தான் காவல்துறையில் சேர்ந்திருந்தார். போலீஸ்காரரான அவரது அப்பா 2010- ஆண்டில் காலமாக, தானும் அவரைப் போல் ஒரு போலீஸாக வேண்டும் என்று விரும்பி இந்தத் துறைக்கு வந்திருக்கிறார். இந்நிலையில் சன்யோகிதாகஞ்ச் காவல் நிலையத்தில் அவர் கான்ஸ்டபிளாக சேர்ந்த சில மாதங்களில் ஒரு புகார் வந்திருக்கிறது. இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் புதிய மாணவர்களை ராகிங் செய்கிறார்கள் என்பதுதான் அந்தப் புகார்.

ஜூலை மாதம் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டுபிடிக்க கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்கள் போலீஸார். ஆனால், அவர்கள் விசாரணைக்குச் சென்றபோது பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களை ராகிங் செய்தவர்களைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டத் தயங்கியுள்ளனர். என்ன செய்வது என்று யோசித்த போலீஸார், கடைசியில் தங்கள் காவல் நிலையத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள, பார்ப்பதற்கு கல்லூரி மாணவியைப் போல் தோற்றமளித்த ஷாலினியை, அதே கல்லூரிக்கு ஒரு மாணவியைப் போல அனுப்பத் திட்டமிட்டனர்.

ஷாலினியும் அதற்குச் சம்மதித்து ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பையில் சில புத்தகங்கள் என்று ஒரு நர்சிங் மாணவியைப் போல் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினார். ஒன்றல்ல... இரண்டல்ல... மொத்தம் 60 நாட்கள் நர்சிங் மாணவி போல் கல்லூரியில் வலம் வந்தார். ஷாலினிக்கு பாதுகாப்பாக சில ஆண் போலீஸார் கேண்டீனில் உணவு வாங்கச் செல்வதைப் போல் அவ்வப்போது சென்று கேண்டீனை நோட்டமிட்டனர். கிளாஸைக் கட் அடித்து கேண்டீனிலேயே சுற்றும் மாணவி என்ற பிம்பத்தை ஏற்படுத்திய ஷாலினி, தினமும் 5 மணிநேரம் வரை மாணவர்களுடன் பழகி, ராகிங் செய்த 11 பேரை பிடித்திருக்கிறார்.

“ராகிங்கில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் மாணவர்களின் லிஸ்டை எங்கள் உயர் அதிகாரி என்னிடம் கொடுத்தார். அதை வைத்து அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கினேன்.
பொதுவாகக் கல்லூரியில் மாணவர்கள் சகஜமாக இருக்கும் இடம் கேண்டீன். அங்கு யாரும் ஐடெண்டி கார்டை கேட்க மாட்டார்கள். அதனால்தான் நான் அவர்களைக் கண்காணிக்க கேண்டீனை தேர்வு செய்தேன். பார்ப்பவர்களுக்கு நான் கிளாஸைக் கட் அடித்து கேண்டீனில் சுற்றுவதுபோல் தோன்றும்.

கேண்டீனிலேயே இருந்த நான் மெதுவாக அங்கு வரும் கல்லூரி மாணவர்களை நட்பாக்கி, அங்கு நடக்கும் விஷயங்களைத் திரட்டினேன். ராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களிடம் இருந்து விஷயங்களை வாங்கினேன்...” என்று இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த கதையைச் சொல்கிறார் ஷாலினி.

ஜான்சி