யார் இந்த திரெளபதி முர்மு?



இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், இம் மாதம் 24ம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு அளித்தால், தேர்தல் நடைபெறாமல், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார். தேர்தல் நடைபெற்றால், குடியரசுத் தலைவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் -
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரும் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநருமான திரெளபதி முர்மு களமிறக்கப்பட்டுள்ளார்.

அவ்வளவுதான். ஒட்டுமொத்த தேசமும் பற்றிக் கொண்டது. யார் இந்த திரெளபதி முர்மு... என இணையதளத்தில் தொடங்கி சகல இடங்களிலும் மக்கள் தேடத் தொடங்கினர்.
உண்மையில் கடந்த 2017ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, இவரைத்தான் வேட்பாளராகக் களம் இறக்க நினைத்ததாம். கடைசி நேரத்தில்தான் பீகாரைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் டிக் செய்யப்பட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக அமர்ந்தாராம்.

ரைட். யார் இந்த திரெளபதி முர்மு..?

ஒடிஷா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாடிபோசி கிராமத்தில் 20  ஜூன் 1958 அன்று பிறந்தவர் திரௌபதி முர்மு. சந்தால் என்ற பழங்குடி இனத்தைச்  சேர்ந்த அவர், புவனேஸ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் படித்தவர்.2020ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் தன்னைக் குறித்து சுருக்கமாக திரெளபதி முர்மு இப்படிச் சொல்லியிருக்கிறார்:
“நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள். நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று, கை நிறைய சம்பாதித்து குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பது மட்டுமே என் கனவாக இருந்தது.

நான் அரசியலுக்கு வருவேன் என ஒருபோதும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகளும், என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும் என்னை வேலையை விட்டுவிட்டு அரசியலில் சேர வைத்துவிட்டது...”திருமணத்திற்குப் பிறகு இரண்டு மகன்கள், ஒரு மகள் என அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்த திரௌபதி முர்மு, பிள்ளைகள் வளர்ந்ததும் வீட்டில் கிடைத்த ஓய்வு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்தார்.சம்பளமில்லாமல் தன்னால் முடிந்த சேவையாக அப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்த அவர், பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றில் சேர்ந்து ஒடிசா கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு தன்னால் இயன்ற வேலைகளைச் செய்தார்.

பின்னர் ஸ்ரீ அரவிந்தர் கல்வி மையத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், அதன் பிறகு ஒடிசா நீர்ப்பாசனத் துறையில் இளநிலை உதவியாளராக (ஜூனியர் அசிஸ்டண்ட்) பணிபுரிந்தார்.“நான் வளர்ந்த சமூகம் பெண்கள் மீது மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை உடையது. வீட்டு வாசலைக்கூட பெண்கள் தாண்டக்கூடாது என அவர்கள் நினைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அரசியல் என்பது மோசமான ஒரு தொழில்...” என, தான் கடந்து வந்த பாதை குறித்து கூறுகிறார் திரௌபதி.ஓய்வு நேரத்தில் சமூகசேவைகள் செய்து வந்த திரௌபதி முர்மு, மெல்ல மெல்ல அரசியலில் இறங்கினார். 1997ம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், அதே ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்தில் இருந்து கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர், 2015 வரை பாஜகவின் எஸ்.டி. மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பதவியில் இருந்தார். 2000ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராகப் பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.

2007ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதினையும் பெற்றார். அரசியலில் இத்தனை பதவிகளை வகித்து வந்த முர்மு, பாஜகவின் பழங்குடியின அமைப்பின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.அதன்பின்னர், 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பதவி வகித்ததன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற பெருமையை திரௌபதி முர்மு பெற்றார்.

அரசியலில் ஒருபுறம் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்த சூழலில், 2009ம் ஆண்டு தனது முதல் மகனையும், அதனைத் தொடர்ந்து 2013ம் ஆண்டு தனது மற்றொரு மகனையும் இழந்தார் திரௌபதி. இரண்டாவது மகன் உயிரிழந்த அதே மாதத்தில் திரௌபதி முர்முவின் தாயாரும், சகோதரரும் மரணமடைந்தனர். அதற்கு அடுத்த ஆண்டே தனது கணவரையும் இழந்தார் அவர்.
குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த  துயர சம்பவங்களால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், தியானம், யோகா மற்றும் ஆன்மிகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். பின்னர் தனது ஒரே மகளையும் ஆன்மிக வழியில் கொண்டு செல்லத் தொடங்கினார்.

குடும்பத்தில் ஏற்பட்ட துயரங்களுக்கு மத்தியிலும் அரசியலிலும், சமூக சேவையிலும் தீவிரமாகப் பணியாற்றினார் திரௌபதி முர்மு. அதன் பலனாகத்தான் இன்று நாட்டின் குடியரசுத்தலைவர் வேட்பாளராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய திரௌபதி முர்மு இரண்டு முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்து, இன்று குடியரசுத்தலைவர் வேட்பாளராகும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையை மட்டுமின்றி, நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்து குடியரசுத் தலைவரானவர் என்ற சிறப்பையும் பெறுவார்.

சித்ரா