சித்தி விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்தவர்!



உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோயிலைக் கட்டி அந்தக் கோயிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்திருப்பதுதான் லேட்டஸ்ட் வைரல். கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியைச் சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத். 77 வயதான இவர், ஒரு தொழில் அதிபர்.
கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின், காலமாவதற்கு முன் தன் மகன் கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தைக் கொடுத்தார். கால ஓட்டத்தில் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், தனது தந்தை, தாயின் நினைவாக தனக்கு வழங்கப்பட்ட 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோயிலைக் கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்தக் கோயிலுக்குள் 36 அங்குல விநாயகர் சிலை உள்ளது. எல்லாம் பூர்த்தியானதும் அந்தக் கோயிலை இந்து பக்தர்களுக்கு கேபிரியல் அர்ப்பணித்துவிட்டார்.

இந்தக் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.‘‘நான் கடந்த 1959ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்குச் சென்றேன். மும்பையில் உள்ள பிரபாதேவி கோயிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோயிலைக் கட்ட முடிவு செய்து, இப்போது நினைத்தபடி கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்துள்ளேன்.
உண்மையில் இக்கோயிலை நான் கட்டவில்லை. என் மூலமாக சித்தி விநாயகரே தனக்கான கோயிலைக் கட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு கருவியாக விநாயகர் என்னைக் கருதி தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையிலேயே இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...’’ என நெகிழ்கிறார் கேபிரியல்!

ஜான்சி