நிலவின் சிறு தள்ளாட்டமும் கடலோரப் பகுதிகளில் ஏற்படப்போகும் வெள்ள அபாயமும்!



நிலவின் தள்ளாட்டம் என்பது சாதாரணமாக நிகழக்கூடியது. ஆனால், அதோடு பூமி வெப்பமடைதல் காரணமாக கடல் மட்டம் உயரும் என்பது சற்று கவலை தரக்கூடியது.

பூமியை நீள்வட்டப் பாதையில் நிலவு சுற்றி வருகிறது. அவ்வப்போது அதன் பாதையில் மிகச் சிறிய தள்ளாட்டம் காணப்படும்.
இது இயல்பானது. இதுகுறித்து ஆராய்ந்த நாசா, 2030ம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைவதால் கடல் மட்டம் உயரும் என்றும், அதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளது.
இந்த ஆய்வுக்கு ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நாசா கடல் மட்ட மாற்றம் அறிவியல் குழு உறுப்பினர்கள் பங்கேற்று உதவியுள்ளனர்.

இயற்கைச் சீற்றத்தால் அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் பில் தாம்சன் தனது ஆய்வில் நிலவின் சுற்றுப்பாதையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

சுமார் 18.6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலவின் சுற்றுப்பாதையில் இந்த மாற்றம் நிகழும் என்றும், இப்போது நிலவி வரும் புவி வெப்பமாதல் காரணமாக குறிப்பாக சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பூமியின் வெப்பம் அதிகரித்து வருவது கவலை தரக்கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளார் நிலவின் தள்ளாட்டம் என்பது 2030ம் ஆண்டு நிகழும் என்றும், இதன் காரணமாக கடலில் உயர் அலைகள் ஏற்பட்டு கடலின் உயரம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் கடலோரப் பகுதிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நிலவில் ஏற்படும் தள்ளாட்டத்தால் நாம் பூமியிலிருந்து பார்க்கக் கூடிய நிலவின் ஒளி மிகுந்த பகுதியின் கோணம் சற்று மாறுபடும், இந்த சிறு தள்ளாட்டம் காரணமாக நிலவு பூமியைச் சுற்றி வரும் நேரத்தில் 12 விநாடிகள் குறையும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக கடலில் அலைகள் ஏற்படுவது நாம் அறிந்ததுதான். இப்படி ஒரு சிறு மாற்றம் நிலவில் ஏற்படும்பொழுது அது கடலின் அலைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

கடலில் வழக்கமாக எழும் பெரிய அலைகள்  சிறிய அலைகளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. சிறிய அலைகள் மிகப்பெரிய அலைகளாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் 2019ம் ஆண்டு உயர் அலைகள் காரணமாக 600 வெள்ளப்பெருக்கு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

2030ம் ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வானது ‘நேச்சர் அண்ட் கிளைமேட்’ என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது.  வெள்ளப்பெருக்கு தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்றும், மேலும் இது ஒரு மாதம் அல்லது அதற்கு கூடுதல் காலம் நீடிக்கும் என்றும், இந்த மாற்றம் தொடர்ந்து காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நிலவின் தள்ளாட்டம் என்பது புதிதான நிகழ்வு அல்ல. இதற்கு முன் 1728ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது 18.6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மாற்றம் அந்த ஆண்டு ஏற்பட்டது. நாசா விஞ்ஞானி பில் நெல்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆய்வு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதற்கு ஏற்ப கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்காவிற்கு மட்டும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அல்ல. உலகம் முழுவதும் கடலோரப் பகுதிகளில் இந்த மாற்றத்தை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் மனிதன் ஏற்படுத்தும் அபாயகரமான சீர்கேடுகள், மெல்ல மெல்ல கோள்கள் மற்றும் துணைக்கோள்கள் சுழற்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை மிகவும் கவனத்துடன் கையாளவில்லை என்றால் மனிதகுலம் இன்னும் பெரும் துயரங்களை தொடர்ந்து சந்திக்க வேண்டி வரும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு தனிமனிதனும் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு எடுக்கும் சிறு சிறு நடவடிக்கைகளும் பல மாற்றங்களையும் நல்ல தாக்கத்தையும் ஏற்படுத்தும். அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

நிலாவே வா...

நிலவுதான் பூமியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள். இது சூரிய குடும்பத்தில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும், இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும்.

நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறது. புவிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள சராசரித் தொலைவு 3,84,403 கிமீ. இந்த தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82 + 0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது. ஆனால், இந்த கூடும் வீதம் ஒரேமாதிரி இருப்பதில்லை.

ஈர்ப்பு விசை  என்பது ஒரு வான் பொருள் மற்றொரு வான் பொருளைச் சுற்றிவரும்போது ஈர்ப்புச் சரிவினால்  ஒரு பக்கம் மட்டுமே மற்றதை நோக்கி இருக்குமாறு அமைவதாகும். இதனால்தான் எப்போதும் நிலவின் ஒரே பக்கம் புவியை நோக்கி உள்ளது. 

நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் கடலில் ஓதங்களும், நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்று போலக் காட்சியளிக்கின்றன.

பூமியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால், ஒரு பொருளின் விடுபடு வேகம் அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது.

சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை, வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்றுவிடும்.

பா.ஸ்ரீகுமார்