ஹெல்த்தியா சாப்பிடறீங்களா..?



இந்தக் கேள்வியைக் கேட்டால் கிட்டத்தட்ட அனைவருமே ஆமாம் என்ற பதிலைத்தான் சொல்வார்கள். படிப்பு அல்லது வேலையின் நிமித்தம் ஹாஸ்டலில்
தங்கியிருப்பவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் சாப்பிடும் உணவின் ஆரோக்கியம் குறித்து மனக்குறை இருக்கலாம்; அது நியாயமும்கூட. மற்றபடி, பெரும்பாலானவர்கள் தங்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளதாகவே கருதுகிறார்கள்.

தமிழகத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, இங்கு ஐந்தில் ஒருவர் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுபவர் என்கிறது. மேலும் அதே ஆய்வில் ஐந்தில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்கிறது. இந்த புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்த இரண்டு எதார்த்தங்களுக்கு நடுவில்தான் நமது ஹெல்த்தி வாழ்க்கை
முறையின் உண்மைத்தன்மை இருக்கிறது.தமிழர்கள் என்று பொதுவாகச் சொன்னாலும் தமிழர்களுக்கு என்று பொதுவான உணவுப் பழக்கங்கள் சில இருந்தாலும் இங்கு ஒவ்வொரு குடும்பத்துக்குமே தனித்துவமான உணவுப் பாரம்பரியம் இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் அந்தக் குடும்பத்தின் பாரம்பரியமான தொழில், சமூக சூழல், அந்தஸ்து, பொருளாதார நிலை ஆகியவற்றால் உருவாகிவந்தது.

இந்த அடிப்படை சூழல்கள் மாற மாற உணவுப் பழக்கம் சிறிது மாறினாலும் பெரும்பாலான குடும்பங்களில் அது அப்படியேதான் தொடர்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம்முடைய ஆரோக்கியத்தின் நிலையும் அமையும்.
எது எப்படி இருந்தாலும் இன்று நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமச்சீரான உணவுப் பழக்கம் கிடையாது என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. ஃபுட் டைவர்சிட்டி என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது. உணவுப் பன்முகத்தன்மை என்று இதைச் சொல்லலாம்.

நாம் உண்ணும் உணவை அடிப்படையான ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் உணவுகள்; பால், மீன், முட்டை, மாமிசங்கள் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்தவை; பருப்பு வகைகள் போன்ற புரதச்சத்து கொண்டவை; காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து, வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் கொண்டவை; கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் மாவுச்சத்தும் நிறைந்த நட்ஸ், சிறுதானியங்கள் போன்றவை. எல்லா காய்கறிகள், பழங்களிலும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் ஏ,சி, இ மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஆகியவை இருந்தாலும் அவற்றிலும் சில முக்கியமான பிரிவுகள் உள்ளன.

முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவையும் முருங்கைக் கீரை உள்ளிட்ட பிற கீரைகளும் ஒருவகை. இவற்றில் பச்சையம் நிறைந்த இலையின் சத்துக்கள் இருக்கும். அவரை, கொத்தவரங்காய், பீன்ஸ் போன்ற லெக்யூம்ஸ் ஒருவகை. இவற்றில் விதையின் சத்துக்கள் இருக்கும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, கருணைக் கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி போன்ற கிழங்குகள் இன்னொருவகை. இவற்றில் வேரின் வாயுத்தன்மை நிறைந்த மாவுச்சத்து இருக்கும்.

இப்படி, ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் உள்ளன. நம் மனித உடலுக்கு இந்த அத்தனை சத்துக்களுமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். நம்முடைய ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தில் மேற்சொன்ன அத்தனை உணவுப் பிரிவுகளிலும் சுமார் எண்பது சதவீதமாவது இருக்க வேண்டும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நாம் அப்படித்தான் பரவலாக அனைத்து சத்துக்களையும் எடுத்துக்கொள்கிறோமா என...

ஃபுட் டைவர்சிட்டி பரவலாக இல்லாதபோது அது ஒரு குறைபாடாக மாறுகிறது. உடலால் உணர முடியாத அந்த உணவின் மீதான பசிதான் ஏதேனும் நோயாக மாறுகிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு என்பது அப்படியான அரூப பசியின் வெளிப்பாடுதான்.

நமது உடலில் குறிப்பிட்ட சத்துப் போதாமை ஏற்படும்போது அதனால் உடலின் வேதியல் சமநிலை குலைகிறது. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், ஐயோடின், தயாமின் ஆகியவை நம் உடல் சிறப்பாக இயங்க மிகவும் முக்கியமான சத்துக்கள்.

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் உலகம் முழுதும் சுமார் இருபது கோடிப் பேருக்கு மேல் இப்படியான சத்துப்போதாமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சத்துப் போதாமை என்றதும் ஏதோ வறுமையால்தான் உருவாகிறது என்று நினைக்க வேண்டாம். நன்கு வசதியான சூழலில் வசிக்கும் ஒருவருக்குக்கூட சத்துப்போதாமை இருக்கிறது. அதற்குக் காரணம் அவரின் உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள போதாமை.

குறிப்பாக, இன்று தமிழகத்தில் நகரத்தில் வாழும் இளைய சமூகத்துக்கு சத்துப் போதாமை மிக முக்கியப் பிரச்னையாக இருக்கிறது என்கிறார்கள். ஸ்டைல், ஃபேஷன், ட்ரெண்ட் என்ற பெயரில் எந்தவிதமான சத்துக்களும் இல்லாத ப்ராசஸ்டு உணவுகள், சாட் உணவு கள், நொறுக்குத் தீனிகள், பீஸா, பர்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஜங்க் ஃபுட்ஸ் மட்டுமே உண்டுவிட்டு கோலா பானங்கள், டீ, காபி போன்றவற்றை மட்டுமே பருகுவதால் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் சேராமலே போய்விடுகின்றன.

இந்திய அளவில் இரும்புச்சத்துக் குறைபாடு கொண்ட வசதியான இளம்பெண்களில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதே இதற்கு சாட்சி. இரும்புச்சத்துக் குறைபாடு நமது பாடுபடும் திறனைக் குறைப்பதோடு பெண்களுக்கு கர்ப்ப கால சிக்கல்களையும் உருவாக்குகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

பொதுவாகவே இந்தியர்கள் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்வதில் கொஞ்சம் மோசம்தான் என்கிறார்கள். நகர்ப்புற இந்தியர்கள் பெரும்பாலானோர் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்தில் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி2 தேவையான அளவில் பாதிதான் உடலில் சேர்கிறது. கால்சியம் தேவையில் அறுபத்து ஏழு சதவீதமும் இரும்புச்சத்து தேவையில் எழுபத்து ஏழு சதவீதமும்தான் எடுத்துக்கொள்கிறோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நாம் அரிசியை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுதான் மிகப் பெரிய பிரச்னை. அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதிலும் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையைச் சேர்ப்பதிலும் கார்போஹைட்ரேட் நிகர் இல்லாதது. ஆனால், உடலில் சேரும் கார்போஹைட்ரேட் மூலம் உருவாகும் ஆற்றல் சரியான விகிதத்தில் உடலைவிட்டு வெளியேறாவிடில் அது உடலிலேயே கொழுப்பாகத் தங்கிவிடுகிறது. அதன்விளைவுதான் உடல் பருமன், தொப்பை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை.

அன்றாடமும் மூன்று வேளையும் அரிசி என்பதற்கு பதிலாக ஏதேனும் ஒருவேளை சிறுதானியங்களைச் சேர்க்கலாம். சிறுதானி யங்களில் கார்போஹைட்ரேட் மட்டும் இல்லை. அதில் புரதச்சத்தும், நார்ச்சத்தும், நுண்ணூட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. சிலவற்றில் கொழுப்புச்சத்துகூட கணிசமாக உள்ளது.

சென்ற நூற்றாண்டு வரை நம் முன்னோர் சிறுதானியங்களைத்தான் அதிகமாகச் சாப்பிட்டுவந்தார்கள் என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளைச் சாப்பிடாமல் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு வகையான உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைக் கைவிடுவது என்று இருந்தாலே நோய் நொடி நெருங்காமல் வாழ்வாங்கு வாழலாம்.

இளங்கோ கிருஷ்ணன்