ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் முதல் திருநங்கை!



எதிர்ப்பு, சலசலப்புக்கு மத்தியில் பெண்களுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.

ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்போகும் முதல் திருநங்கை என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறக் காத்திருக்கிறார், நியூசிலாந்து அணிக்காக பளுதூக்குதலில் களம் இறங்கும் லாரல் ஹப்பார்ட்.

ஆக்லாந்து சிட்டியின் முன்னாள் மேயர்தான் 43 வயதான ஹப்பார்டின் தந்தை. இளம் வயதிலேயே பளுதூக்குதலில் கவனம் செலுத்திய ஹப்பார்ட், 2012ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
அதன் பிறகு உடலில் மாற்றங்களை உணர்ந்த அவர் 3-ம் பாலினத்தவரான திருநங்கையாக மாறினார்.எதிர்ப்பு, சலசலப்புக்கு மத்தியில் பெண்களுக்கான சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார். 2017ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற அவர், 2019ல் பசிபிக் விளையாட்டிலும், 2020ல் ரோமில் நடந்த ரோமா உலகக் கோப்பையிலும் மகுடம் சூடினார்.

திருநங்கைகள் பெண்களோடு மோதுவதை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவர்களுக்கு என்று பிரத்யேக விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஓர் ஆண்டுக்கு முன்பாக அவர்களின் டெஸ்டோஸ்டிேரானின் (ஆண்களுக்கான ஹார்மோன்) அளவு, ஒரு லிட்டருக்கு 10க்கும் குறைவான நானோமோல்ஸ் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.இதன் அடிப்படையில் கடந்த மாதம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான நியூசிலாந்து அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் அவர் விஷயத்தில் வீராங்கனைகள் தரப்பில் தொடர்ந்து அதிருப்தி நிலவுகிறது. திருநங்கைகளை பெண்களுக்கான போட்டியில் விளையாட வைப்பது நியாயமற்றது என்று பெல்ஜியம் பளுதூக்குதல் வீராங்கனை அன்னா வான் பெலிங்கன் பகிரங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது இத்தகைய நபர்கள் பெண்களை விட கூடுதல் வலுவுடன் இருப்பார்கள் என்பது அவர்களது எண்ணம்.

எதிர்ப்புக் குரல் ஒலிப்பதை அறிந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேச், இப்போதைக்கு அவர் விதிமுறைக்கு உட்பட்டுதான் தேர்வாகியுள்ளார். போட்டி நடக்கும் போது விதிமுறைகளில் மாற்றம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசித்து வருங்காலத்தில் இது தொடர்பாக புதிய விதிமுறை உருவாக்குவது குறித்து முடிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான சூப்பர் ஹெவிவெயிட் 87 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் ஹப்பார்ட் களம் காணுகிறார்.

என்.ஆனந்தி