WHAT'S WRONG WITH OUR POLICE..?



ஒற்றை வரியில் சொல்வதென்றால் இந்திய போலீஸ் காலனியாதிக்க போலீஸ். ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் கீழ் நாடு இருந்தபோதுதான் இன்றும் நடைமுறையில் இருக்கும் இந்திய போலீஸ் சட்டம் கொண்டுவரப்பட்டது,கிட்டத்தட்ட 160 வருடங்களுக்கு முன்.
ஆங்கிலேய அரசின் தேவைகளுக்கும், வசதிக்கும் ஏற்ப எழுதப்பட்ட ஒரு சட்டத்தைத்தான் சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் பயன்படுத்திவருகிறோம். இந்த போலீஸ் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு முக்கிய காரணமே 1857 சிப்பாய்க் கலகம்தான். இதுபோன்ற கலகங்களையும் போராட்டங்களையும் ஒடுக்கவே, ஆங்கிலேய அரசின் கைப்பாவையாக போலீஸ் செயல்பட, இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இன்று நாம் அரசின் கைப்பாவையாக போலீஸ் செயல்படுவதாக குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருளும் இல்லை, ஏனென்றால் அது உருவாக்கப்பட்டதே அதற்காகத்தான்.
இதே போலீஸ் சட்டம்தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது, தமிழகம் உட்பட. கேரளா, மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் தத்தமது மாநில அளவில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. ஆனால், அவையும் இந்த 1861 சட்டத்தை அடியொற்றி வந்தவையே.இதை சீர்திருத்தும் பொருட்டு Model Police Act என்ற வரைவை தேசிய போலீஸ் ஆணையகம் பரிந்துரை செய்தது. ஆனால், இதுகூட முழுமையான வடிவில் சட்டமாக எங்குமே உருவெடுக்கவில்லை.

இந்த பரிந்துரையில் போலீஸ் துறையின் வலிமையைக் கூட்ட என்ன யோசனைகள் இருக்கோ அதை உள்வாங்கிக்கொண்டு, போலீஸின் கடமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். அடிப்படையில் போலீஸ் என்பது மக்களை அடக்கி ஆளவும், வழிக்குக் கொண்டுவரவும் என்ற காலனியாதிக்க மனோபாவம் சுதந்திரம் கிடைத்தபின்னும் மாறவே இல்லை. சுதந்திர இந்தியாவின் புதிய ஆட்சியாளர்களுக்கும் இதுவே மிகவும் வசதியாக இருந்தது. பெரும்பாலான முதலமைச்சர்களும் போலீஸ் துறையை தங்கள் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையே விரும்பினர்.

சரி, போலீஸ் துறை எப்படி இருக்கவேண்டும் ?
காமல்வெல்த் மற்றும் நீடித்த ஜனநாயக மரபுடைய நாடுகள் என்னும் நோக்கில் இதை மூன்று நாட்டு போலீஸ் துறைகளை கம்பேர் செய்வோம். அவர்களின் முக்கிய குறிக்கோள் (mission) என்ன என்று பார்ப்போம்.

ஆஸ்திரேலிய போலீஸ்:
To work with the community to reduce violence, crime and fear.
கனேடிய போலீஸ்:
To serve our province by protecting its citizens, upholding the law and preserving public safety.
தமிழ்நாடு போலீஸ் :
To work towards a safe, just, humane and progressive society.

இதில் கவனித்துப் பார்த்தால் தமிழ்நாடு போலீஸ் சிட்டிசன் சார்ட்டரில் எங்குமே protect, serve போன்ற வார்த்தைகளே இருக்காது. அதிலும் கூட ஒரு குடிமகனின் கடமை
களும் பொறுப்பும் என்னவென்றுதான் குறிப்பிடப்பட்டிருக்குமே தவிர ஒரு போலீஸ் அதிகாரியின் கடமையும், பொறுப்பும் என்ன என்பது குறிப்பிடப்பட்டிருக்காது .
இதுபோக ரிபேரியோ கமிட்டி (1998), பத்மநாபய்யா கமிட்டி (2000) என்று போலீஸ் துறை சீராக்கம் குறித்து நிறைய ஆராயப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நடைமுறையில்தான் ஒன்றும் நிகழவில்லை. இது போன்ற விஷயங்களில் எல்லா கட்சிகளும் இந்த சீர்திருத்தத்தை முடிந்த அளவு முடக்கவே முயன்று வந்துள்ளன.
இந்த பரிந்துரைகளை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடுக்கப்பட்டது. பொதுநல வழக்காக இதைத் தொடுத்தவரே ஒரு போலீஸ்காரர்தான்- முன்னாள் டிஜிபி பிரகாஷ் சிங்.

சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் (2006), எல்லா மாநிலங்களும் இந்த பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டுமென்று ஆணையிட்டது. பல இழுபறிகளுக்குப் பின் 2013ல்தான் Tamilnadu Police (Reform) Act 2013 கொண்டு வரப்பட்டது. அப்படியும் அந்த பரிந்துரைகளில் முக்கிய ஷரத்தான State Security Commission என்ற அமைப்பு தமிழகத்தில் 2017ல்தான் நிறுவப்பட்டது.
இதன் நோக்கம் போலீஸ் துறையின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கண்காணிப்பது, போலீஸ்துறை மீதான குற்றச்சாட்டுகளை கையாள்வது, மாற்றங்களுக்கான பரிந்துரைகளை வழங்குவது. முக்கியமாக அரசுக்கும் போலீஸுக்கும் இடையே ஒரு gatekeeper அல்லது buffer போல செயல்படுவது.  

குறிப்பாக இந்த கமிஷனின் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்; இதன் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டும் என்கிறது சுப்ரீம் கோர்ட். ஆனால், தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட்ட இந்த சீர்திருத்திய சட்டத்தில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை. அதாவது இந்த கமிஷனின் பரிந்துரைகள் ஆலோசனை அளவிலேயே எடுத்துக்கொள்ளப்படும் ( non-binding ).

SSC இல் உறுப்பினர்களாக எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் 5 சுதந்திரமான நபர்கள் இருக்க வேண்டும் என்கிறது உச்சநீதி மன்றம். ஆனால், இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள் சிலவற்றையும் கேரளாவையும் தவிர எங்குமே இது முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. போலீஸ்துறையை அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து விலக்கி அவர்களை accountable ஆக ஆக்க முயலும் ஒவ்வொரு முன்னெடுப்பும் முடக்கப்படுகிறது. அப்படியே அமைக்கப்பட்டாலும் அதை எவ்வளவு வலுவில்லாமல் வைக்க முடியுமோ அப்படி வைத்திருக்கிறார்கள்.

போலீஸ்துறையின் விசுவாசம் நாட்டின் சட்ட திட்டங்களுக்குத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகளுக்கு அல்ல என்னும் நிலை வரவேண்டும். அரசாங்கத்தின் கையாளாக போலீஸ் இருக்கும்வரை (அப்படி வைக்கப்பட்டிருக்கும் வரை) police will behave with natural impunity and we can’t hold them accountable in any way.

கொரோனா லாக்டவுன் ஆரம்பித்த காலத்தில் இருந்தே நாம் போலீஸ் high handednessஐ பார்த்துக்கொண்டுதான் வருகிறோம். குறிப்பாக சரியான காரணங்களோ, எச்சரிக்கையோ இல்லாமல் லத்தியை பயன்படுத்துதல். எந்த சூழலில், எந்த விதமான சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு என்னவித force பயன்படுத்தலாம் என்பது தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும். நீளமான லத்திகளை முழுதுமாகவே தடை செய்ய வேண்டும் (use short batons ).

Unjustified detention & Custodial Violence - குறித்த தண்டனைகள் மிகக் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற தவறுகளில் நேரடியாக ஈடுபட்ட நபர்களைத் தவிர அவரின் மேலதிகாரிகள் வரை பொறுப்பாக்க வேண்டும். எல்லாவித custodial violence வழக்குகளும் SSC ஆல் விசாரிக்கப்படும் நிலை வேண்டும். முக்கியமாக SSCயின் பரிந்துரையை மறுக்கவியலா பரிந்துரையாக (binding) ஆக மாற்ற வேண்டும்.

ஒரு ஜனநாயக சமூகமாக பல விஷயங்களில் நாம் முன் நகர்ந்திருக்கிறோம். ஆனால், போலீஸ் செயல்பாட்டில் மக்களை இன்னும் அடிமைகளாக நடத்தும் மனப்போக்கையே கொண்டிருக்கிறோம். ஸ்டேஷன் வாசற்படியை மிதிப்பது ஓர் அவமானமான அல்லது பயத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கக்கூடாது.ஒரு குடிமகன் சட்டத்திற்கும் அதன் தண்டனைகளுக்கும்தான் பயப்பட வேண்டுமே ஒழிய போலீசுக்கு அல்ல.

கார்த்திக் வேலு