லாக்டவுன் பார்!



இங்கிலாந்தில் லாக்டவுன் அறிவித்த பிறகும் கூட சில பார்கள் இயங்கின. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மார்ச் 23ம் தேதியிலிருந்து பார்களையும் பப்களையும் மூடியது இங்கிலாந்து அரசு.

இரண்டு மாதங்களாக மதுவிற்காக திண்டாடிக் கொண்டிருக்கின்றனர் லண்டன்வாசிகள். இந்நிலையில் லண்டனில் மதுபானக் கடையை நடத்தி வந்த பீட்டர் பிரவுனின் செயல் வைரலாகிவிட்டது. ஆம்; ஒரு வேனையே பாராக மாற்றித் தெருத் தெருவாக பீர் விற்றிருக்கிறார் பீட்டர்!

பீர் வேண்டுமென்றால் அவருடைய எண்ணுக்கு அழைத்து புக் செய்ய வேண்டும். ஒருவருக்கு குறிப்பிட்ட அளவு பீர் மட்டுமே கிடைக்கும். இப்போதே மே மாதம் முழுமைக்கும் பீர் புக் ஆகிவிட்டது.

‘‘ஆறு மாதங்களுக்குப் பிறகு குளிர்ச்சியான பீரைக் கையில் பிடிக்கும்போது வாடிக்கையாளர்களின் முகத்தில் உண்மையான மகிழ்ச்சியைப் பார்க்க முடிகிறது...’’ என்கிற பீட்டர், பீர் சப்ளை செய்ய இன்னொரு வேனை தயார் செய்யப் போகிறார். லாக்டவுன் காரணமாக இங்கிலாந்தில் பீர் விற்பனை 82 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
    
த.சக்திவேல்