கொரோனா தமிழகம் என்ன செய்ய வேண்டும்..? டாக்டர் பவித்ரா



கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் பவித்ரா அவர்கள் மக்கள் மனதில் எழுந்திருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் மிகத் தெளிவாகப் பதில் அளிக்கிறார். டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன், கொரோனா வைரஸ் ஆய்வாளர் என்பது குறிப்பிடத்தக்கது! எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போட்டு விட்டு 2006 - 2012 வரை கொரோனா வைரஸில் முனைவர் பட்டம் பெற்றுள்ள சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே முழுவதையும்  அறிந்து கொள்வோம்.

முதலில் நல்ல செய்திகள்:

*COVID - 19 பாதிக்கப்பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பிருக்கிறது.
*1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது.
*இதற்கு முன்னும் இதே வைரஸ் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் மனிதர்களுக்கு வரும் மூன்றில் ஒரு பங்கு சளிக் *காய்ச்சலுக்கு கொரோனா வைரஸே காரணம்.
*எல்லா விலங்கிலும் கொரோனா வைரஸ் இருக்கிறது.
*சபீனா சோப்பில் கை கழுவினால் கூட போதுமானது.
*பொதுமக்களுக்கு முகமூடிகள் தேவையில்லை (மருத்துவ, சுகாதாரப் பணியில் ஈடுபடுகிறவர்களுக்குத்தான் வேண்டும்). பாதிக்கப்பட்டவர்கள் சரியான *முறையில் பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
*குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாதிப்பின் வீரியம் குறைவே.
*ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உயிர் பிழைக்கும் சதவிகிதம் மிக அதிகம் (99.1%).
*உலகில் மருந்து கண்டுபிடிக்க முடியாத பல வியாதிகள் இருக்கின்றன. குறிப்பாக டெங்கு. எனவே கொரோனாவுக்கு கூடுதல் அச்சம் தேவையில்லை.
*சிகிச்சை என்பது பாதிப்பைப் பொறுத்தது; நோயைப் பொறுத்தது அல்ல. எனவே நடைமுறையில் உள்ள சிகிச்சைகளே போதுமானது.
*நாய், பூனை, பறவைகள் வைத்திருப்பவர்கள் பொதுவான சுகாதாரத்தைப் பின்பற்றினாலே போதும். செல்லப் பிராணிகளுக்கு என்று குறிப்பாக பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை.
*பாதிக்கப்பட்டவர்களிலும் 15% பேருக்கு மட்டுமே ICU, Ventilator தேவைப்படும்.

பதற்றம் தேவையே இல்லை.

இப்போது புரளிகளைப் பற்றிப் பார்ப்போம்.

புரளி நம்பர் 1 - வெயிலில் வராது.

கண்டிப்பாக வரும். வெயில் காற்றில் ஈரத்தன்மை சற்று அதிகம் இருக்கும். எனவே, பரவும் வேகம் குறைவாக இருக்கலாம். குளிர் காலத்தில் காற்று சற்று காய்ந்து இருக்கும். பரவுதல் சற்று எளிது. அதுவே வித்தியாசம்.

புரளி நம்பர் 2 - மாமிசம் தின்றால் வரும்.

ரசத்திலிருந்து மட்டன் பிரியாணி வரை எதை வேண்டுமானாலும் உண்ணலாம். எதைத் தின்றாலும் சுத்தமான தண்ணீரில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமைத்த உணவில் வைரஸ் பிழைக்காது.

புரளி நம்பர் 3 - நிறைய தண்ணீர் குடித்தால் வராது.

தேவையான தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. எந்த நோயையும் எதிர்த்துப் போராடுவதற்கு உடலுக்கு கூடுதல் பலம் கிடைக்கிறது. மற்றபடி, கொரோனா தாக்குதலுக்கும், தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பு இல்லை.

புரளி நம்பர் 4 - இளவயதினருக்கு வராது.

வயது வித்தியாசமின்றி எல்லாரையும் தாக்கும். ஆனால், வயதானவர்கள், மற்ற உடல் உபாதைகளுக்கு ஆளானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஆகியோருக்கு பாதிப்பு அதிகம் (குறிப்பாக, Diabetes, HBP, Transplant candidates, Cancer patients etc.).

புரளி நம்பர் 5 - கிராமங்களில் வராது.

காற்று இருக்கும் எல்லா இடங்களிலும் பரவும். கொரோனாவுக்கு நகரம் கிராமம் என்ற வித்தியாசம் எல்லாம் தெரியாது.

புரளி நம்பர் 6 - மாற்று மருந்துகளில் குணமாகும்.

எந்தவொரு நோய்க்கும், எந்தவொரு மருந்தும் சந்தைக்கு வருவதற்கு முன், நோயைக் கட்டுப்படுத்தும் அதன் தன்மைக்காகவும், அது பாதுகாப்பானதா என்பதற்காகவும் சோதனை செய்யப்பட்ட பிறகே பரிந்துரைக்கப்படும். கொரோனாவைப் பொறுத்தவரையில், இன்று வரை எந்த மருத்துவத்திலும், பரிசோதிக்கப்பட்ட எந்த மருந்தும் கிடையாது. கொரோனாவுக்கு அப்படி ஒரு மருந்து வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். எனவே அறிகுறிகள் இருந்தால், எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரைப் பாருங்கள். உயிரிழப்பைத் தவிருங்கள்.

புரளி நம்பர் 7 - அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக் கட்ட சீனா உருவாக்கிய வைரஸ்.

இது அறிவியல் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல. GENOME SEQUENCE கொண்டு விலங்கிடமிருந்து எந்த நாளில் மனிதனுக்கு கடத்தப்பட்டது என்பது வரை மிகத் தெளிவாக ஆராய்ந்து கண்டு பிடித்து விட்டார்கள்.

புரளி நம்பர் 8 - கொரோனா வைரஸ் இருப்பவர்களைக் கடந்து சென்றாலே நமக்கும் வந்து விடும்.

வராது. நம் மேல் இருமினாலோ, தும்மினாலோ, அவர்களின் எச்சில் விரவி இருக்கும் காற்றை நாம் சுவாசித்தாலோதான் நம்மைத் தாக்கும். அவர்களின் எச்சில் பட்டு ஓர் இடம் காய்ந்து விட்டால், அந்த இடத்தை நாம் தொட்டாலும் வராது.

விழிப்புணர்வுத் தகவல்கள்:

அறியாமை நம்பர் 1 - முகமூடி அணிந்து விட்டால் கை கூட கழுவ வேண்டாம்.

முதலாவதாக, முகமூடி அணியத் தேவையில்லை. அணிந்தால் சரியாக அணிய வேண்டும். அணிந்தாலும் 4 - 6 மணி நேரங்களுக்கு ஒரு முறை புதிய முகமூடி அணிய வேண்டும். ஒரு வேளை அதற்கு முன் மாஸ்க்கை வெளிப்புறமாக வடிகட்டியில் தொட்டு விட்டால் தூக்கி எறிந்து விட்டு புதிய மாஸ்க் அணிய வேண்டும். மாஸ்க் அணிந்தாலும் கை கழுவ வேண்டும்.

அறியாமை நம்பர் 2 - பூண்டு, இஞ்சி, மிளகு சாப்பிட்டால் வராது.

இவற்றையெல்லாம் சாப்பிட்டாலும் கொரோனா வைரஸ் வரும். மேலும், பூண்டு அதிகமாக பச்சையாகச் சாப்பிட்டால் தொண்டையில் inflammation வரும். எச்சரிக்கை. Magic ஆன எந்த காய்கறிகளும், பழங்களும் இல்லை.கொரோனா வைரஸூக்கு பயப்பட வேண்டுமா?

* புது வைரஸ். பின்னால் வருத்தப்படுவதை விட இப்போதே பாதுகாப்பாக இருப்பது நல்லது.
* காற்றில் பரவும் வைரஸ். நேரடித் தொடர்பைக் குறைப்பதன்மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.
* பாதிக்கப்பட்ட ஒருவர் 2 மீட்டர் தூரத்துக்கு ஒன்றிலிருந்து மூன்று பேர் வரை ஒரே சமயத்தில் பரப்ப முடியும்.
* பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் பரவலின் வீரியத்தைக் குறைக்க முடியும்.
* தனக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை தனிநபரால் தெரிந்து கொள்ள முடியாது.
* பரிசோதிப்பதற்கு Proper Test Kit வேண்டும். Inaccurate test kit = Inaccurate results.

ஏன் இவ்வளவு பதற்றம்?

புது வைரஸ். பரவும் வேகம் அதிகம். மேலும் கடந்த காலங்களை விட நாம் பயணிப்பதும், பொதுவில் ஒன்று கூடுவதும் அதிகமாகி விட்டது. சமூக வலைத்தளங்கள் அளவுக்கு மீறி பயத்தை விதைக்கின்றன; 99.5% புரளியை பரப்புகின்றன.  

என்ன செய்ய வேண்டும்?

1. தனிப்பட்ட சுகாதாரம்.

முடிந்த வரை அடிக்கடி கை கழுவுங்கள். குறைந்த பட்சமாக சாப்பாட்டுக்கு முன், பின். கழிவறைக்குச் செல்லும் முன், பின். வெளியில் இருந்து வந்தால், அழுக்கான இடங்களைத் தொட்டால். இது அனைத்தும் பொதுவாகவே நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட விஷயங்கள்தான். கொரோனா special இல்லை.

2. கூட்டத்தை தவிருங்கள்.

 முக்கியமாக எதை செய்யக் கூடாது..?
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.