கன்னி வழிபாடு-தைத்திங்களில் நினைவுகூரல்



‘நூறு தெய்வங்களை வழிபடுவதும் சரி, ஒரு கன்னியை வழிபடுவதும் சரி’ என்கிற வார்த்தை கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.
அந்தளவுக்கு கன்னி வழிபாடு தென் மாவட்ட கிராம மக்களிடம் ஆழமாக வேரூன்றி உள்ளது. கன்னி என்பது இங்கே பெண்ணை மட்டும் குறிக்கும் வார்த்தை அல்ல. மணமுடிக்காதவர்கள் அனைவருமே கன்னிதான். ஆண், பெண் என்ற பாகுபாடு இங்கில்லை.

இடி, மின்னல், பெருவெள்ளம், மண் சரிவு, குளத்தில் மூழ்கிப் போவது, மரம் விழுந்து மாண்டுபோதல் முதலான இயற்கை இடர்ப்பாடுகளால் உயிர் நீத்துப் போவது, காலரா, அம்மை, காசநோய், புற்றுநோய் முதலான நோய்களினால் இறந்து போவது, பாம்பு, தேள் முதலான விஷ ஜந்துக்களால் ஏற்படும் இறப்பு, மோட்டார் வாகனங்களாலும், மின்சாரம் தாக்குதல் போன்றவற்றாலும் விபத்து ஏற்பட்டு இறந்து போகும் நபர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையாமல் இங்கே உலா வருவதாகவும், அந்த ஆத்மாக்களைசாந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இறந்தபின்னும் அவன் / அவள் நினைவுகளால் மனம் லயித்துப்போன உறவுகள் தங்கள் பாசத்தின் வெளிப்பாடாக இறந்துபோன நபரின் ஆத்மாவை மகிழ்விக்கும் விதமாகவும் செய்யப்படும் வழிபாடே கன்னி வழிபாடு.

இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். இதனாலேயே தெய்வ நிலைக்கு அவர்கள் உயர்ந்துவிடுகிறார்கள் என்று இன்றும் நம்பப்படுகிறது. இதையறிந்து எங்கு கன்னிவழிபாடு  நடக்கிறது என்ற தேடலில் ஈடுபட்டு, நெல்லை மாவட்டத்தை அடைந்தோம். சீவலப்பேரி அருகேயுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றோம்.

அந்த அழகான கிராமத்திற்கு நடுவக்குறிச்சி என்று பெயர். மாலை ஐந்து மணி. பெரியவர் ஒருவர் எதிரே வந்தோரையெல்லாம் விரட்டியபடி நடந்தார்.
‘‘கருக்கலாகப் போகுது விருசில போங்க, துள்ள துடிக்க போனா கன்னிங்க எதிரில பட்டா, எந்த கோயில் குளத்துக்கு போனாலும் உங்க உடம்புல இருந்து இறக்கமுடியாது. பட்டணத்து ஆஸ்பத்திரிக்கு போனாலும் பண்டுவம் பார்க்க முடியாது...’’ என்றார் அந்தப் பெரியவர்.

ஊர் எல்லையில் நின்ற மகனிடம் மற்றொருவர், ‘‘ஏலே, சாமித்துரை, இன்னைக்கு நல்லநாளு பொறப்பு, தை மாச பிறப்பு, அந்தி சாயுமுன்னே வீடு வந்து சேரு. உன் சேக்காளிகளுக்கும் சொல்லி வை. எல்லா வீட்டுலயும் கன்னிகளுக்கு வச்சு கும்பிடுவாங்கடா. நாலு முக்கு சந்திகள்ல நிக்காதிங்கல!’’
‘‘ஏம்பா, அது என்ன கன்னிக்கு வச்சு கும்பிடுறது. சொல்லுப்பா?’’‘‘ஏல, சொன்னா கேளாம். எல்லாம் விளக்கமா சொன்னாதான் வருவேளோ...’’
‘‘எப்போய், நான் இப்போ என்ன கேட்டுப்புட்டேன். அத தெரிஞ்சிக்கிறதுக்குதான கேட்டேன்...’’ என்ற மகனிடம் கன்னிக்கு வச்சு கும்பிடுவதை விளக்கமாகக் கூறினார், அவனது தந்தை.

நாமும் அவரோடு சேர்ந்து கேட்கத் தொடங்கினோம். பனைமரத்து நாரால் கட்டிய கட்டிலில் அமர வைத்தார். பேசத் தொடங்கினார்.
‘‘ஆயுசு முடியுமுன்னே எமன் அவன் ஜீவனை எடுத்திட்டான். உடம்ப நாம எரிச்சிட்டோம். அவன் ஆத்மா எங்க போகும். இங்கதான் சுத்தும்!’’
‘‘இங்கதான்னா எங்க தாத்தா?’’ ‘‘குளத்தாங்கரை, ஆத்தாங்கரை, கிணத்தாங்கரை, மயானக்கரை, நாலு முக்கு சந்தி, நம்ம வீடு. இதுல பதினஞ்சு வயசுலேர்ந்து முப்பது வயசு வரைக்கும் உள்ளவங்க செத்துப்போனா அவங்க துடியான கன்னின்னு சொல்லுவோம்.

இதுல அவங்களுக்கு கல்யாணம் ஆகாம இருக்கணும்...’’ என்றவர் தொடர்ந்தார்:‘‘கன்னியாக வழிபடக் கூடியவங்க செத்துப்போயி ஒரு வருஷம் முடிஞ்சிருக்கணும். பிறகு தைப்பொங்கலுக்கு சில நாளுக்கு முன்பு வீட்டு சுவற்றிற்கு சுண்ணாம்பு அல்லது வண்ணம் தீட்டி சுத்தப்படுத்தணும். பொங்கலன்னைக்கு காலையில பொங்கலிட்டு கதிரவனுக்கு நன்றி செலுத்திவிட்டு, மத்தியான நேரம் பாயாச அப்பளத்துடன் சாப்பிடுவோம்.
அன்னைக்கு அந்திக் கருக்கலில் வீட்டு பூச அறையில கன்னி மூலையில - பூச அறை இல்லாத வீட்டில தென்மேற்கு மூலையில-அதுதான் கன்னிமூலை - குத்துவிளக்கேத்தி, விளக்குக்குக் கீழ கன்னியா வச்சு கும்பிடக்கூடிய இறந்துபோனவங்க உருவப்படத்தை வைக்கணும்.

அந்தப் படத்திற்கு சந்தனம் குங்குமம் கொண்டு பொட்டு வைச்சு, படத்திற்கு பிச்சிப்பூ (ஜாதிமல்லி) ஆரம் கட்டி போடணும் (மாலை சூட்ட வேண்டும்). சிலர் ரொம்ப செலவழிச்சு ரோசாப்பூ ஆரம் வாங்கிப் போடுவாங்க. அது கூடாது...’’ என்றபடி மூச்சு விடாமல் சொல்லத் தொடங்கினார். அவற்றை இங்கு தொகுத்துத் தருகிறோம்.

இறந்தவர் படத்திற்கு முன்பு கன்னி வழிபாட்டுக்கு பிச்சிப்பூவும், மட்டிப்பழம் (ஏலக்கி), செவ்வாழை, நாட்டுப்பழம் இவைதான் வைக்க வேண்டும். கருப்பு நிறத்தில் துணியோ, வேறு பொருட்களோ வைக்கக் கூடாது. இவைகளை இலை போட்டு அதில் வைக்க வேண்டும். தலை வாழை இலை ஐந்து போட வேண்டும்.

முதல் இலையில உடைத்த தேங்காய் மற்றும் 5, 7, 9 எண்ணிக்கையில் வாழைப் பழங்கள் வைக்க வேண்டும். அத்துடன் வெற்றிலை, பாக்கு. உடைக்காத ஒரு தேங்காயில் மூன்று கண்ணில் ஒரு கண் பகுதியில துவாரமிட்டு, அதிலுள்ள தண்ணீரில் கொஞ்சம் பச்சரிசி, கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை, சிறிது மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு வைக்க வேண்டும்.

அடுத்த இலையில் அரிசி சாதம், குழம்பு, கூட்டு வகைகளோடு பரிமாறி வைக்க வேண்டும். அதில், இறந்த நபருக்கு பிடித்தமானவைகள் அதிகம் இருப்பது நல்லது. பாவக்காய் கறி வைக்கக் கூடாது. 3வது இலையில எல்லா பழ வகைகளிலும் ஒவ்வொன்று வாங்கி வைக்க வேண்டும். அதாவது ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா... இப்படி.அவரவர் வசதிக்கு ஏற்ப 4வது இலையில் பலகாரங்கள் வைக்க வேண்டும். பெரும்பாலும் இனிப்புதான். பூஜைக்குரியவர் காரம் விரும்பக்கூடியவராக இருந்தால், ஒரு வகை பலகாரம் மட்டும் காரமாக இருக்கலாம்.

5வது இலையில் துணிமணிகள் - உள்ளாடை உட்பட  - அவர்கள் அணியும் ஆடைகள். அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும். ‘‘அது எப்படின்னா. தலைக்கா நாளே (முந்தைய நாள்) எடுத்து வச்சு, பொங்கலன்னைக்கு காலையில தண்ணி
யில நனைச்சு புளிஞ்சு காயப் போட்டுரணும். புதுத்துணில்லா, சோப்பு போட்டு துவைக்கக்
கூடாது. சாயந்திரம் அந்தத் துணிய எடுத்து முறுக்கி மூலையில வைக்கணும்..’’.

ஆண் என்றால் அவன் எந்த மாதிரி ஆடை அணிவானோ அதுபோன்றும் அதற்குத் துணையான பொருட்கள், குறிப்பாக மணிபர்ஸ், வாசனைத் திரவியம், முகப்பவுடர் முதலான பொருட்களும்; பெண்கள் என்றால் சேலை முதலான துணிமணிகளும், வளையல், மை, நகப்பாலிஷ், நெத்திச்சுட்டி, ஒட்டியாணம் முதலான அந்தப் பெண் அணிந்து மகிழும் அனைத்துப் பொருட்களும் எடுத்துவைக்க வேண்டும்.

சிலர், இறந்த பெண் அதிகம் நேசிப்பாள் என்பதற்காக தாயக்கட்டை, பல்லாங்குழி முதலான விளையாட்டு உபகரணங்களையும் வைப்பதுண்டு.
இவை அனைத்தையும் வைத்தபிறகு பூஜை. கற்பூரம் காட்டக் கூடாது. வீடு முழுக்க சாம்பிராணி வாசமே இருக்க வேண்டும். மணி ஓசை எழுப்பக் கூடாது. அப்போது அமைதி தேவை.  

அந்த நேரம், இறந்துபோனவருக்கு மிகவும் பிடித்த உறவுக்காரர்களில் ஒருவர் மீது அவர் சக்தி வந்திறங்கும். அப்போது அந்த நபர் அருள்வாக்கு சொல்வார். சில இடங்களில் இது நடக்கும். பல இடங்களில் இந்த மாதிரி இல்லை. பெரும்பாலான வீடுகளில் அந்த நேரம் பல்லி ஓசை எழுப்பும். இப்படி நடந்தால்தான் அந்த பூஜையை இறந்தவர் ஏற்றார் என்று அர்த்தம்.

சிலருக்கு இரவு கனவில் இறந்தவர் வருவார். ‘நான் பூசைய ஏத்துக்கிட்டேன். நம்ம குடும்பத்தில உள்ளவங்கள நல்லாக்கி வைப்பேன்’ என்று சொல்லிவிட்டு மறைவார்கள்.இதுதவிர, ‘அண்ணன் புள்ளைய அவன் கூட சுத்த சொல்லாத, தம்பிய அந்த ஊருக்கு அனுப்பாத...’ இப்படி நேரில் வந்து பேசுவது போல் சொல்வார்கள்.

‘‘இதுதான் கன்னி. சும்மா இல்ல, கேட்டேளா...’’ என்று நம்மிடம் வினா தொடுத்தபடி மீண்டும் தொடர்ந்தார்:
‘‘புதிதாக கன்னிக்கு பூஜை செய்பவங்க, கன்னியை வீட்டுக்கு ஏத்தி வைக்க பூஜை செய்வாங்க. அந்த பூஜை இதே போலத்தான் என்றாலும் முன்னதாக ஒரு வெள்ளை நூலை, வாசலை இடை மறிச்சு கட்டிடுவாங்க. பூச உச்சமாக நடக்கும் பாருங்க... அந்த நேரத்துல நூலு தானே அறிந்து போகும். கத்திரிக்கோலை வச்சு வெட்டினா எப்படி இரண்டா முறியுமோ, அப்படி!

பூச நடந்ததும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரோ அல்லது பங்காளிகளில் எவரேனும் ஒருவரோ அருள் வந்து ஆடுவர். பூச முடிஞ்ச அடுத்த நாளு துணிமணிக, பவுடர் முதலான பொருட்கள் எல்லாத்தையும் கட்டுப்பெட்டியில (இளநார்பெட்டி - இதை தென் மாவட்டங்களில் கட்டுப்பெட்டி என்றும் கெட்டுப்பெட்டி என்றும் கூறுகின்றனர்) எடுத்து வைத்து கன்னி மூலையில் உயரமான இடத்தில் கட்டி வச்சுடணும்.

அடுத்த வருச பொங்கலன்னைக்கு வீட்டை சுத்தம் செஞ்சு காலையில் கன்னிப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் கடந்த ஆண்டு வைத்த மஞ்சள் முளை விட்டிருந்தால், கன்னி தெய்வம் துடியாக இருப்பதாக நம்பிக்கை. முதலாண்டு வைத்து படைத்த கன்னிப்பெட்டியை மறு ஆண்டுதான் எடுப்போம். அதற்குள் வைத்திருந்த துணியை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அணிஞ்சுக்குவாங்க. இதுதான் கன்னி வழிபாடு...’’ என்றார் அவர்.

சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி நகரம் வரை தொடர்ந்து வருகிறது. தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும்போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் தை மாதத்தில் வணங்கும் வழக்கம் தென் மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

குடும்ப ஒற்றுமைக்கு கன்னிதெய்வ வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் பலருக்கு மனஸ்தாபம் இருந்தாலும் கூட கன்னியை வணங்க அனைவரும் கூடிவிட வேண்டும். இது குடும்பத்தில் எழுதப்படாத சட்டமாகும். ஏன் என்றால், குடும்ப ஒற்றுமைதான் கன்னிக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் குடும்பத்தோடு நின்று வணங்கினால் கன்னி மனம் குளிர்ந்துவிடும்.

துணியை தனது வீட்டில் மணமாகாத பெண்ணுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவர்கள் திருமணம் முடித்து சென்றுவிட்டால் வேறு வீட்டுப் பெண். எனவே, அவர்களுக்கு கன்னி கும்பிட்ட துணி கிடைக்காது. வீட்டுக்கு வந்த மருமகளுக்கு கன்னிக்கு வணங்கிய துணியைக் கொடுக்கலாம். ஏன் என்றால் அவர் அந்தக் குடும்பத்தின் பெண்.

தனது பொருள் கூட தனது குடும்பத்தில் வசிக்கும் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்பது கன்னி வழிபாட்டில் முக்கிய அம்சம்.
ஆண் கன்னியை வழிபடும் அக்கா, தங்கையர்கள்; பெண் கன்னியை வழிபடும் அண்ணன், தம்பிகள் வளமுடனும், பலமுடனும் திகழ்கிறார்கள் என்கின்றனர் கன்னி வழிபாடு செய்வோர்.

பெரும்பாலுமே ஒரு கன்னி ஒரு வீட்டில் துடியாக இருக்கிறார் என்றால் அவ்வீட்டில் செய்வினைக் கோளாறு நீங்கி விடும். பேய் பிசாசு அண்டாது. நோய் நொடிகள் தீர்ந்து விடும். பிறந்த குழந்தை திடீர் திடீரென அழுதால் கூட கன்னிக்கு பூஜை வைக்கவில்லை என்று கன்னி பயங்காட்டுகிறது என கிராமத்தில் பெரியவர்கள் சொல்வதை இப்போதும் கேட்கலாம். கன்னி தன் தேவைகளை குழந்தை மூலமாக பூர்த்தி செய்து கொள்கிறது.

குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் கிடைக்கவும் கன்னியை வணங்கும் வழக்கம் உள்ளது. ஒருவர் தனது வீட்டில் கன்னியை வணங்கினால் அவர் வேறு எந்த தெய்வத்தினையும் தேடிப்போய் வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது பெரியோரின் கருத்து.கன்னி வழிபாடுகளின் நிகழ்வுகள் பலவாறாகப் பேசப்பட்டு வருகிறது. அதில் பல மனதை உருக்குவதாகவே உள்ளன. ஒரு குடும்பத்தில் தாய்க்கு தலைமகளாய் இருந்த ஒரு பெண் மாடு முட்டியதில் இறந்துவிட்டாள். வருடம்தோறும் இறந்த அந்தப் பெண்ணுக்கு பாவாடை சட்டை எடுத்து வைத்து கும்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

23 வருடங்கள் கழிந்தது. ஒரு நாள் அந்தப் பெண் தாயின் கனவில் தோன்றி, ‘தாயே.. எனக்கு 23 வயதாகி விட்டது.. இன்னும் எனக்கு பாவாடை சட்டைதானா... போதவில்லையே...’ என கண்ணீர் மல்கக் கேட்க, அந்த ஆண்டு முதல் அவளுக்கு சேலை, பிளவுஸ் வாங்கி வைத்து வணங்க ஆரம்பித்தனர். அந்த அளவுக்கு கன்னி குடும்பத்தில் ஒரு உறுப்பினராக இருப்பதாக நம்பப்படுகிறது.

ஒரு வீட்டில் கன்னி தெய்வத்தினை வணங்கவே மறந்துவிட்டனர். அவ்வீட்டில் பிறந்த குழந்தை தினமும் இரவு பயந்து அழுதுகொண்டே இருந்தது. ஒரு நாள் வைத்தியர் ஒருவர் ‘உங்கள் கன்னி தெய்வத்தை வணங்குங்கள்; எல்லாம் சரியாகி விடும்’ எனக் கூற, கன்னியை வணங்கி, கன்னிமூலையில் குழந்தையைக் கிடத்தி எடுத்த பிறகு அழுகை நின்று விட்டதாம்.

இறந்துபோனவர் செய்யும் மகிழ்ச்சியான சேட்டைகளையும், அவர் பேசிய வார்த்தைகளையும், நையாண்டிகளையும் சொல்லி, நினைவு கூர்தல் நடக்கும். அது மட்டுமன்றி, அந்த துயர சம்பவம் நடக்கும் சில நாட்கள் முன் அவர் செய்த செயல்கள், உச்சரித்த சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப உறவுகள் கூறி அவர்பால் தங்களது நினைவுகளை ஒருவருக்கு ஒருவர் பேசிப் பேசி அவரைப்பற்றி அந்த பூஜையின் போது நினைவுகூர்ந்து கொள்வர்.

பின்னே நடப்பதை முன்னே கனவில் வந்து கன்னி சொல்லிவிடும் என்கிறார்கள் வழிபடும் அன்பர்கள். இந்த நவீன யுகத்திலும் பிரதான தெய்வமாக விளங்கி பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்துகொண்டிருக்கிறது கன்னி. மொத்தத்தில் நம்பாதவர்களுக்கு பேயாக, நம்புகிறவர்களுக்கு தாயாக இருப்பாள் கன்னி!                        

சு.இளம் கலைமாறன்