40 வருடங்களாக ஓவியம் வரையும் 80 வயது ஜோதையா!



சாதிப்பதற்கு வயது மட்டுமல்ல, பொருளாதாரம், குடும்ப பின்புலம், கல்வி எதுவுமே தடையில்லை. நாம் சாதிக்க நினைக்கும் விஷயத்தின் மீது தீராத ஆர்வம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம். உலகளவில் புகழ் பெறலாம்.

இதற்கு வாழும் உதாரணமாக நம் முன் நிற்கிறார் பழங்குடிப் பெண்மணியான ஜோதையா பாய் பைகா.மத்தியப்பிரதேசத்தின் உமாரியா மாவட்டத்தில் உள்ள லோர்கா என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ஜோதையா. அவருக்கு நாற்பது வயதாக இருந்தபோது கணவர் இறந்து விட்டார். துக்கம் தாளாத ஜோதையாவுக்கு ஆறுதலாக இருந்தது ஓவியம் மட்டுமே.

எந்நேரமும் ஓவியம் வரைந்துகொண்டே இருப்பார். அப்படி ஓவியம் வரைவதில் தனது கவலைகளை மறந்தார்.ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல... கடந்த நாற்பது வருடங்களாக விடாப்பிடியாக ஓவியம் வரைந்து வருகிறார் ஜோதையா. ஆம்; அவருக்கு இப்போது வயது 80.

‘‘அனைத்து வகையான விலங்குகளையும், நான் காண்கின்ற எல்லாவற்றையும் ஓவியமாக்குவேன். ஓவியம் வரைவதற்காகவே இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்திருக்கிறேன். வரைவதைத் தவிர்த்து வேறு எதையும் நான் செய்வதில்லை. பிழைப்புக்காகவும் என் குடும்பத்தைக் காப்பதற்காகவும் வரைகிறேன்...’’ என்கிற ஜோதையாவின் ஓவியங்கள் நம் கண்களை வசீகரிக்கின்றன.

ஜோதையாவின் ஓவியங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடந்த ஓவியக் கண்காட்சியில் ஜோதையாவின் ஓவியங்களும் இடம்பிடித்தன. பல்வேறு தரப்பிலிருந்து அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

‘‘ஜோதையாவின் சாதனை சரியான கல்வி அறிவில்லாத பழங்குடி இனத்துக்கே பெருமை சேர்த்திருக்கிறது. இதைப் பார்த்து மற்றவர்களும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற இலக்குக்கு உந்தப்படுவார்கள். இதுபோல இன்னும் அவர் நிறைய சாதிப்பார்...’’ என்கிறார் ஜோதையாவின் ஆசிரியரான ஆசிஷ் சுவாமி.இப்போது ஜோதையாவின் ஓவியங்கள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகின்றன.                  
                                   

த.சக்திவேல்