யார் இந்த ஐஎஸ்ஐஎஸ்..?
‘‘மக்களைக் கொன்று குவிக்கச் சொல்லி அந்த கடவுள் உங்களுக்கு ஆணையிட்டாரா அல்லது அவருக்கு அர்ப்பணிக்கிறீர்களா?
சத்தியமாகச் சொல்லுறேன்... நீங்கள் யாரும் கடவுள் வழியில் செல்லவில்லை. நீங்கள் அனைவரும் சாத்தான்களடா! சொல்லுங்கடா கழுதைகளா! கொலை பண்ணி என்ன சாதிக்கப் போகிறீர்கள்?
உங்களுக்கு என்னடா வேண்டும்? அமைதியான வழியில் போராடத் தெரியாதா? கொலை செய்வது சட்டத்தில் மட்டுமில்லை... மனித குலத்திலும் தடை செய்யப்பட்டதடா! ஆனால், நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள்... யாரையும் கொலை செய்யாதீங்க! உங்களையும் யாரும் கொல்லமாட்டார்கள்..!’’ இப்படி ஒரு பாட்டி ஆவேசமாக திட்டித்தீர்த்த வீடியோ 4 ஆண்டுகளுக்கு முன்னால் இணையத்தில் வைரலானது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடத்தில் ஜோர்டான் நாட்டு விமானப் படை குண்டு வீசிக் கலைத்தபோது காரில் தப்பிய ஒரு ஐஎஸ்ஐஎஸ் குழுவை மடக்கிய இந்த ஈராக்கைச் சேர்ந்த 87 வயதுப் பாட்டி, அவர்களிடம் ‘தில்’ காட்டி நேருக்குநேர் திட்டியதுதான் அந்த ‘ஹிட் டாக்’. இதன்பிறகு அந்தப் பாட்டி என்ன ஆனார் என்பது மர்மம். ஆனால், அவர் பேசியது இன்றும் இணையத்தில் இருக்கிறது. கூடவே அந்தப் பாட்டி நலமுடன் இருக்க வேண்டுமென்று உலக மக்கள் செய்த பிரார்த்தனையும்!
யார் இந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்? ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள்? அவர்களுக்கு என்னதான் வேண்டும்?
‘இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அண்ட் சிரியா’ என்ற பெயரின் சுருக்கமே ஐஎஸ்ஐஎஸ். ஒவ்வொரு நாளும் இவர்கள் யாரைக் கொல்லப்போகிறார்கள், எப்படிக் கொல்வார்கள் என பயத்துடனேயே உலகம் விடிகிறது.
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த அபு முஸப் அல் ஜர்காவி என்பவர் தலைமையில் 1990ல் ‘ஜமாஅத் அல் தவ்ஹீத் வால் ஜிகாத்’ என்ற அமைப்பைத் ெதாடங்கி ஆங்காங்கே சில தாக்குதல்களை நடத்தினர். பின்னர் ‘ஈராக்கிய அல் கொய்தா’ என்று தங்களது பேனரை மாற்றிக்கொண்டு உலகளவில் பேசக்கூடிய தாக்குதல்களை அரங்கேற்றினர். இதன் தலைவர் அல் ஸர்காவி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதும், அபுபக்கர் அல் பஹ்தாதி தலைமைக்கு வந்தார். இதன் பின்னர்தான் நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்து ஈராக்கில் மனித வெடிகுண்டுகளையும் கார் குண்டுகளையும் வெடிக்க வைத்தனர்.
அல்கொய்தாவின் கிளையாகச் செயல்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ‘அகண்ட இஸ்லாமிய தேசம்’ என்று தன் சித்தாந்தத்தை மாற்றிக்கொண்டு 2013ல் தனது முதல் தாக்குதலை ஈராக்கில் நிகழ்த்தியது. ஆரம்பத்தில் உள்நாட்டுப் போர் என்றே உலகம் நினைத்தது. ஆனால், 2014 மே 24ம் தேதி பெல்ஜியம் நாட்டின் ப்ரஸ்ஸெல்ஸ் நகரிலுள்ள Jewish Museum of Belgiumஇல் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகு இந்த அமைப்பின் அபாயத்தை உலகம் உணர்ந்து கொண்டது.
தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, லிபியா, டென்மார்க் உள்ளிட்ட 34 நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஐஎஸ், இன்று 35வது நாடாக இலங்கை வரை கால்பதித்துள்ளது.
2014 - 15ல் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐஎஸ், கண்ணுக்கு தென்பட்ட நாடுகளின் மீதெல்லாம் தாக்குதல்களை நடத்தி கள்ள மார்க்கெட்டில் உள்ள அத்தனை தொழில்களையும் செய்து தனது கஜானாவை நிரப்பிக் கொண்டது; நவீன ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி பல நாடுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது.
மத அடிப்படைவாத கோட்பாடுகளைச் கூறி இளைஞர்களின் மூளையை சலவை செய்யும் ஐஎஸ், அவர்களுக்கு தீவிரவாதப் பயிற்சிகளை அளித்து பயங்கரவாதிகளாக உருவாக்குகின்றது. இந்த அமைப்பில் ஜிகாதிகளாகச் சேர விரும்புவோருக்கு தேச எல்லைகள் ஒரு நிபந்தனை அல்ல. இதனால் உலகம் முழுவதும் இருந்து சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்திருப்பதாக அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகிறார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வழக்கமாகக் கையில் எடுக்கும் ‘வஹாபியிசம்’தான் ஐஎஸ் அமைப்பினர் பின்பற்றும் கொள்கை. இவர்களுக்கு சன்னி பிரிவினர் மட்டுமே இஸ்லாமியர்கள். ஷியா, குர்து என மற்ற பிரிவு மக்களை இவர்கள் இஸ்லாமியர்களாகவே கருதுவதில்லை. அவர்களை ‘சாத்தானை வழிபடுவோர்’ என்கிறார்கள்.
இவர்களின் அட்டூழியத்தை ஒடுக்க அமெரிக்காவின் தலைமையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஜோர்டான், மொராக்கோ, நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளின் கூட்டு ராணுவப்படை உருவாக்கப்பட்டது.
அவர்கள் 2014ல் ஈராக்கிய ராணுவத்துடன் இணைந்து அமரியா, அல்-பல்லுஜா நகர் முகாம்களை அழித்து ஐஎஸ் அமைப்பை முடக்கினர். ஆனாலும் பலநாடுகளிலும் அவர்களுக்கு ஆதரவான குழுக்கள் செயல்படுவதால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்களது கோர முகத்தைக் காட்ட ஐஎஸ்ஐஎஸ் தவறுவதில்லை. இந்த அமைப்பின் கொலைகள் வேறுபட்டவை. ஒருவரைக் கொல்ல வேண்டுமானால் பட்டென்று துப்பாக்கியால் சுடமாட்டார்கள். மாறாக, ஆரஞ்சு சிவப்பில் உடை அணியச் செய்து, பாலைவனத்தில் மண்டியிட வைத்து கழுத்தைக் கத்தியால் அறுத்து கொலை செய்வார்கள். இதை புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து உலக மக்களின் பார்வைக்கு வைப்பார்கள்.
இதேபோல் எரித்துக் கொல்வது, கூட்டமாகப் படுக்கவைத்துச் சுட்டுக் கொல்வது, பாலியல் அடிமைகளாகப் பிடித்துவந்த பெண்களை கழுத்தறுப்பது என ஈவு இரக்கம் இல்லாத ஓர் உளவியல் போரைத் தொடுத்து அதில் அவர்களின் அடிப்படைவாத சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதே ஐஎஸ் அமைப்பின் பாணி.
இவர்கள் நடத்தும் இப்படிப்பட்ட கொடூர கொலைகளால் இஸ்லாமிய வெறுப்பு உலகெங்கும் பரவி வருகிறது. சாதாரண இஸ்லாமியர்களின் வாழ்க்கையை பொதுவெளியில் பாதிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி, சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருந்த கடைசி நகரமான பேகவுஸை அந்நாட்டு குர்து படையினர் மீட்டனர்.
இதையடுத்து, ஐஎஸ் சாம்ராஜ்யம் முழுமையாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க உதவியுடன் சிரியா கிளர்ச்சியாளர்களும் குர்து படையினரும், ரஷிய உதவியுடன் அதிபர் அல்-அஸாத் தலைமையிலான அரசுப் படைகளும் ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகளை ஒவ்வொன்றாக மீட்டெடுத்துள்ளன.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வரவேற்றுள்ளன.இப்போது குர்து முகாம்களில் சிரியா, ஈராக் அல்லாத 54 நாடுகளைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை, அவர்களது சொந்த நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குர்து படையினர் கூறுகின்றனர்.
அதேபோல், ஐஎஸ் சித்தாந்தத்தில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் சிரியாவின் எதிர்காலத்துக்கு ஆபத்து நிலவ வாய்ப்புள்ளதாக குர்து படையினர் தெரிவிக்கின்றனர். சிரியா, ஈராக் நாட்டுப் பிரச்னைகள் ஓய்ந்ததாகக் கூறப்பட்டாலும் ஐஎஸ் அமைப்பின் சித்தாந்தப் பார்வை முற்றிலுமாகக் களையப்படவில்லை என்பதே முகத்தில் அறையும் நிஜம். இலங்கையில் நடந்த தாக்குதல் இந்த உண்மையைத்தான் பறைசாற்றுகிறது. செ.அமிர்தலிங்கம்
|