அமெரிக்கரின் வாழ்க்கையை மாற்றிய இந்தியக் குழந்தைகள்!



டிவி ஸ்டேஷன் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் அமெரிக்காவைச் சேர்ந்த கரோலின் பௌட்ரியாக்ஸ்.விடுமுறை கிடைக்கவே, தோழி கிறிஸ் மான்ஹெய்ம் உடன் ஜாலி டூராக இந்தியாவுக்கு வந்தார். அதற்கு காரணம் மானுஸ் என்ற சிறுவனுக்கு கிறிஸ் உதவிவந்தார். அவனைப் பார்ப்பதற்காகவே இந்த டிரிப்.

தனது சேமிப்பை எல்லாம் கிறிஸ் வெட்டியாக செலவழிக்கிறார் என நினைத்திருந்த கரோலினுக்கு இந்தியாவில் அதிர்ச்சி காத்திருந்தது.ஆம். கிறிஸை வரவேற்ற கிராமத்தையும் ஆதரவற்றோர் இல்லத்தையும் பார்த்து திகைத்துவிட்டார் கரோலின் “எனது நாயைக்கூட அங்கு வசிக்கவிட மாட்டேன்! அப்படியொரு மோசமான சூழலில் ஆதரவற்றோர் காப்பகம் நடக்கிறது.

குழந்தைகளின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு குழி விழுந்த வெறுமையான கண்களால் எங்களைப் பார்த்தனர். அந்த நினைவு என்னை தீவிரமாக தாக்க சில மாதங்களிலேயே எனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மிராக்கிள் பவுண்டேஷனை தொடங்கினேன்!” என நினைவுகூர்கிறார் கரோலின்.

2000ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த பவுண்டேஷன், பதினைந்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் காப்பகங்களுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது. பிரான்சைஸ் முறையில் மிராக்கிள் பவுண்டேஷன் பெயரில் உள்ளூர் காப்பகங்களை தொடங்கும் திட்டத்தையும் கரோலின் தொடங்கி குழந்தைகளை அரவணைக்கத் தொடங்கியிருக்கிறார்.

“நீ பெரியவளாகி என்னவாகப்போகிறாய்? என்றால் குழந்தைகள் போலீஸ் அல்லது ஆசிரியர் என்ற பதிலையே திரும்பத் திரும்ப சொன்னார்கள். ஆனால், இன்று இந்தியாவின் பிரதமர் என்று மகிழ்ச்சியான பதில்கள் கிடைப்பது நம்பிக்கையின் நல்வரவுதானே?!”

என உற்சாகமாக பேசுகிறார் கரோலின். நல்ல வீடு, பளபள சொகுசு கார் என நம் அனைவருக்குள்ளும் இருந்த ஆசை கரோலினுக்கும் இருந்தது. ஆனால், வீடு, உணவு ஏன் உடலை மறைக்க உடைகூட இல்லாமல் பொசுங்கிக் கிடந்த குழந்தைகளின் நிலை அவரது மனதை மாற்றிவிட்டது.

“ஆதரவற்றோர் காப்பகத்தில் சந்தித்த ஷிபானி என்ற சிறுமியின் நிலை, என்னை யோசிக்க வைத்தது. உணவும், கல்வியும் வறுமையில் வாழ்பவர்களின் வாழ்வில் வெளிச்சம் தரும். எனவேதான் இதற்கான முயற்சிகளை செய்யத் தொடங்கினேன். உலகம் முழுக்க 80 லட்சம் பேர் ஆதரவற்ற காப்பகங்களில் வாழ்கின்றனர்.

நாம் அனைவரும் அக்குழந்தைகளுக்கு தோள் கொடுத்தால் அவர்கள் சிறகடிக்கவும் வானம் கிடைக்கும்!” என்னும் கரோலின் பெண் குழந்தைகளுக்கான கல்வி, ஆரோக்கியத்தை காக்க பல்வேறு செயல்பாடுகளை அரசுடனும் உள்ளூர் தன்னார்வ அமைப்புகளுடனும்  இணைந்து மேற்கொண்டு வருகிறார்.

ச.அன்பரசு