பெண்களின் ஆடையை ஆண்களும் அணியலாம்!



‘பாஜிராவ் மஸ்தானி’ படவிழாவில் இந்தி நடிகர் ரன்வீர்சிங் அணிந்த பெண்களின் ஸ்கர்ட் போன்ற உடை அவரை பிறரைக் காட்டிலும் பிரபலமாக்கியது.

பாலின பேதமற்று உடைகளை இரு பிரிவினரும் அணியலாம் என்ற ஃபேஷன் பாய்ச்சலை இளசுகளின் நரம்பில் குளுக்கோஸாக ஏற்றும் உலகறிந்த ரோல்மாடல்களில் நடிகர் ரன்வீர் சிங்கும் இணைந்திருக்கிறார். ஃபேஷன் உலகில் நிகழும் மாற்றங்களுக்கு அடிப்படை நாம் வாழும் சமூகம்தான். உச்சநீதிமன்றம் 377வது சட்டப்பிரிவுப்படி எல்ஜிபிடிக்யூ இனக்குழுவை குற்றவாளிகள் அல்ல என்று கூறி உத்தரவிட்டது முக்கியக்காரணம்.

இதன்பின்னர் இந்தியாவில் தம் பாலின அடையாளத்தை தைரியமாக வெளிப்படுத்தியவர்களில் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை அடக்கம். இங்கிலாந்தில் கிரடிட் சூசி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான பிலிப் பன்ஸ், ஆண் - பெண் என இரண்டு பெயர்களை பயன்படுத்தி வாழ்ந்து வந்ததோடு பெண்களுக்கான விருது விழாவில் பங்கேற்று அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளார்.

“ஆண் - பெண் தன்மையற்ற கதாபாத்திரங்கள் மகாபாரதத்திலேயே உண்டு. இந்து கலாசாரத்தில் பன்மைத்துவத்திற்கு எப்போதும் இடமுண்டு என்பதற்கு இதுவே சாட்சி...” என்கிறார் கோத்ரேஜ் கலாசார ஆய்வகத்தைச் சேர்ந்த பர்மேஷ் சஹானி. வீட்டுவேலைகள் பெண்களுக்கானவை என்ற கோணம் மாறும்போது உடைகளும் மாறினால் என்ன? ஒருவகையில் இது எல்ஜிபிடிக்யூ குழுவினரை பாதுகாக்கிறது என்று கூட கூறலாம்.

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆண்கள் விக் அணிவதும் மேக்அப் செய்துகொள்வதும் இயல்பான பழக்கமாகவே கருதப்பட்டது. “சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆண்களும், பெண்களும் சேலை வடிவில் உடை அணிந்து முகத்தில் வளையங்கள், கை, தோள்பட்டை, இடுப்பில் ஆபரணங்களை அணிந்திருந்தனர். முகலாயர்கள் காலத்தில் ஆங்ரஹா எனும் உடையை வேறுபாடின்றி ஆண்கள் உடுத்தினர்...” என்கிறார் நடனக்கலைஞரான இஷான் ஹிலால்.                                 

ச.அன்பரசு