COFFEE TABLE



குல்ஃபி பல்டி

செம குஷியில் மிதக்கிறார் எமி. ‘2.0’வில் தனது அதிரடி ஆக்‌ஷன் ஒர்க் அவுட்களை படப்பிடிப்பின் போதே மொபைலில் சேகரித்து வைத்திருந்தார்.
அந்த சாகசங்களை ரசிகர்களுடன் பகிர இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விடுவாரா..? தான், அந்தரத்தில் பல்டி அடிக்கும் காட்சி ஒன்றை இன்ஸ்டாவில் தட்டிவிட, அடுத்த சில மணி நேரங்களில் 13 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்திருக்கிறது அந்த குல்ஃபியின் பல்டி.

கேலக்ஸி வாட்ச்

‘சாம்சங்’ நிறுவனம் தடாலடியாக கேலக்ஸி வாட்ச்சை சந்தையில் இறக்கியுள்ளது. தினமும் நீங்கள் நடக்கும் தூரம், இதயத்துடிப்பின் அளவு உட்பட ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ள அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கிறது. அத்துடன் வாட்ச்சை ப்ளூடூத் வழியாக மொபைலுடன் இணைத்துவிட்டால் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துகொண்டே மனதுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்கலாம்; காதலியுடன் உரையாடலாம்; மெசேஜ் அனுப்பலாம்.
கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாட்ச்சின் விலை ரூ.29,990.

மோசடித் திட்டம்

‘‘விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மோடியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பெருமளவு மோசடி நடந்துள்ளது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது ஓர் ஆய்வு.‘‘கடந்த மாதம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய காப்பீட்டுத் தொகையில் ரூ.2,829 கோடி நிலுவையில் உள்ளது...’’ என்கிறது அந்த ஆய்வு.

‘‘இந்த நிலுவையின் மூலம்தான் பல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும், வங்கிகளும் கொள்ளை லாபம் அடித்துள்ளன...’’ என்கிறார் பிரபல விவசாய நிபுணர் சாய்நாத்.‘‘உண்மையில் இந்தத் திட்டம் விவசாயிகளுக்குச் சாதகமானது. அவர்களைத் தற்கொலையில் இருந்து மீட்கும் திட்டம் கூட. ஆனால், சிலரின் சுயநலத்தால் இதன் நோக்கமே சிதைந்துபோனது...’’ என்று வருந்துகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஏழைத்தாயின் மகன்

‘‘தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. நான் ரொம்ப ரொம்ப ஏழை. எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதனாலதான் உங்க லேப்டாப்பை எடுத்துக்கிட்டேன். உங்களோட மொபைல், பர்ஸை அப்படியே விட்டிருக்கேன்.

நீங்க ஒரு ஸ்டூடண்ட்னு இப்பதான் தெரிஞ்சுது. லேப்டாப்ல உங்க ஃபைல் ஏதாவது இருந்தா சொல்லுங்க, நான் மெயில் பண்ணுறேன்...’’ என்று நெகிழ்வாகச் செல்கிற இந்த இமெயில்தான் இணையத்தில் செம வைரல். லேப்டாப்பை திருடியவர், அதன் சொந்தக்காரருக்கு அனுப்பிய மெயில் இது. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார் அந்தத் திருடர்!

கடல் கன்னி

சில படங்களே கைவசம் வைத்திருந்தாலும், ‘Dont Worry, Be Happy’ பொண்ணு காஜல். சமீபத்தில் விளம்பரப் படம் ஒன்றின் போட்டோ ஷூட்டிற்காக துபாய் சென்றவர், அங்கே உள்ள கடலில் ஜாலியாக படகுப் பயணம் செய்திருக்கிறார். அப்போது வீசிய கடல் காற்றின் புத்துணர்ச்சியில் லயித்துப்போன காஜல், தான் அனுபவித்த இனிய தருணங்களை இன்ஸ்டாவில் ‘Vitamin Sea’ என்ற தலைப்பில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.