சித்து விளையாட்டு-4



ஆண்மை விருத்தி லேகியங்களில் கலப்படம்!

ஆண்மை விருத்தி லேகியங்களில் அலோபதி மருந்துகளில் கலக்கப்படும் சில்டனமில் சிட்ரேட்டை சித்த மருந்துகளில் அதிகளவில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கில மருந்துகளான, வயாகரா - பெனிகிரா போன்ற தயாரிப்புகளில் இருக்கக்கூடிய அதே கெமிக்கல். இரத்தக் குழாயை விரிவுபடுத்தி எழுச்சிக்காகக் கொடுக்கப்படுவது. அதைத்தான் இங்கே வரைமுறை இல்லாமல் சித்த மருந்துகளில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி அந்த முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு சித்த மருந்தை சமீபத்தில் தடை செய்த விவகாரத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால், இங்கே யாருக்கும் தெரியாமல் கைப்பிடியளவு அள்ளிப் போட்டுக் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தப் பயணத்தில் ஓய்வுபெற்ற அலோபதி அறுவை சிகிச்சை நிபுணரான பெண்மணி ஒருத்தரைச் சந்தித்தேன். அவரும்கூட அறியாமையில் தாடிச் சித்தர் ஒருத்தர் பரிந்துரைத்த மாத்திரைகளை உடல் குறைபாட்டிற்காகக் கடையில் வாங்கிப் பயன்படுத்தி அதிலிருந்து தப்பித்து ஓடி வந்திருக்கிறார்.

அவருடைய இன்னொரு மருத்துவ நண்பர், அவற்றை வாங்கிப் பரிசோதித்துவிட்டு, அதில் கலந்திருக்கும் மெட்டல்களைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார். பங்க பஸ்மா, காரிய பஸ்மா, தாமிர பஸ்மா என்கிற பெயர்களில் தரப்பட்ட அந்த மருந்துகளில் கந்தகமும் தாமிரமும் பாதரஸமும் காரீயமும் அதிகளவில் கலக்கப்பட்டிருக்கின்றன!

இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் நரம்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் அதில் கலந்திருக்கும் காரீயத்தின் அளவைப் பற்றியெல்லாம் கேட்கவே வேண்டியதில்லை. “ஏற்கனவே நிலத்தடி நீர் குடிநீராக மாறியிருக்கும் இடங்களில் இந்த மாதிரியான மெட்டல் அளவுக்கு அதிகமாக இருக்கும்.

இந்த மெட்டல்கள் சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பை அதிகளவில் உருவாக்கி மெதுவாக ஆளைக் கொல்லும். எனவே சர்க்கரை, இரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிக்காரர்கள், ஏற்கனவே உடல் உறுப்புகள் பாதிப்பு அடைய ஆரம்பிக்கும் நிலையில் உள்ளவர்கள் இந்தமாதிரி அதிகளவு மெட்டல்கள் கலக்கப்பட்ட போலி மருந்துகளை உட்கொள்ளும்போது அந்த உறுப்புகள் சீக்கிரம் செயலிழக்க ஆரம்பிக்கின்றன...” என்கிறார் கல்லீரல் மற்றும் குடலியல் துறையில் டி.எம் பட்டமும் பொது மருத்துவவியலில் எம்.டி பட்டமும் பெற்ற மருத்துவரான எம்.ராதா.

பொதுவாகவே சூரணம், லேகியம், தைலம், மாத்திரை, சிரப், கஷாயம், பஸ்பம், செந்தூரம் என மருந்துகளின் வகைகள் இருக்கின்றன. இதில் சூரணம் / கஷாயம் இவற்றில் மூலிகைகள் கலப்பதால், கலப்படம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார் மருந்துத் தயாரிப்பாளர் ஒருத்தர்.

லேகியம், சிரப், பஸ்பம் போன்ற ரகங்களில் இது போலவான கலப்படங்கள் அதிகம் வருகின்றன என்கிறார்கள். மாத்திரைகளில் அளவுக்கதிகமாக வருகிறதாம்.
தாமிரம், காரீயம் உள்ளிட்ட உலோகங்கள், பாஷாணங்கள் கலந்த பஸ்பம், செந்தூரம் ஆகியவை சரியாக முறிக்கப்படாமல் இருந்தால், பக்க விளைவுகள் நிச்சயம்.

ஏன், அகத்தியரே கன்ம காண்டத்தில் தாமிரச் செந்தூரம் பற்றியெல்லாம் பேசவில்லையா எனக் கேள்விகள் எழலாம். ஆனால், முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டதா அது... என்கிற கேள்வி இதற்கு மேலும் வராவிட்டால் கொஞ்சம் சிக்கல்தான். இது ஏதோ அந்த அறுவை சிகிச்சை மருத்துவர் அனுபவித்து அறிந்த உண்மை என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். சாமானியர்கள் முதல் இந்தியாவின் முக்கிய அரசியல் பொறுப்பில் இருந்த நபர்கள் வரை இது நீளுகிறது.

நாட்டின் முன்னாள் முக்கிய குடிமகன் ஒருத்தர் இறந்த போது, அவருடைய ரத்தத்தில் காரீயம், பாதரஸம், ஆர்சனிக் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாம். அவர் அதிகமாக உட்கொண்ட முறையற்ற ஆயுர்வேத மருந்தால்தான் உயிரிழந்தார் என்று இந்தத் துறை சார்ந்த வல்லுனர் ஒருத்தர் ஆணித்தரமாகச் சொன்னார்.

இது பற்றி தகவல்கள் தேடிய போது, அப்படியான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.  சமீபத்தில் செய்தியொன்றைப் படித்தேன். கேரளாவில் மஞ்சள் காமாலை முற்றி ஒருத்தருடைய கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் குடிப்பழக்கம் கொண்டவரா என மருத்துவர்கள் விசாரித்திருக்கிறார்கள்.

அப்படி எதுவும் இல்லை. கடைசியில் அவர் இதுபோலத் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தொன்றினை தினமும் குடித்ததே கல்லீரல் கெட்டுப் போனதற்குக் காரணம் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.

அதேபோல் தென்காசியில் மூன்று பேர் இயற்கை மருந்தொன்றை காய்ச்சிக் குடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். எல்லா பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி வெளியானது. போலி வைத்தியர் ஒருத்தர் சொன்ன மருந்து அது. இதெல்லாம் இன்னமும் யார் கவனத்திலும் வரவில்லையா?

தைராய்ட் குறைபாட்டிற்கு ஒருத்தர் இப்போது மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இப்படியான மருத்துவர் ஒருத்தரிடம் போயிருக்கிறார். தைராய்டு என்பது உணவில் இருக்கிற சத்துக்களையும் காற்றில் இருக்கிற ஆக்ஸிஜனையும் உறிஞ்சத் துணை போவது என்று சொன்னார் மருத்துவர் ஒருத்தர்.

அந்த மருத்துவர் அவரை எந்தவித டெஸ்ட்டையும் எடுக்கக்கூடாது என கட்டளையிட்டிருக்கிறார். ஆறு மாதம் தொடர்ந்து அந்த போலி மருத்துவரின் மருந்தை எடுத்த அவரது உடல் துவண்டு விட்டது. கால்சியம் குறைபாட்டால் அவருடைய எலும்புகள் தேய்மானம் அடைந்து விட்டன. இப்போது விட்டதைப் பிடிக்க நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.

என் நெருங்கிய தோழி ஒருத்தருக்கு சார்கோமா (Sarcoma) கேன்சர் காலில் சிறு கட்டியாக வந்தது. இது நடந்தது மூன்று மாதங்களுக்கு முன்பு. காலில் சின்ன அறுவை சிகிச்சை செய்வதன் வழியாகவும் கீமோதெரபி தருவதன் வழியாகவும் அதைச் சரிசெய்ய வாய்ப்பிருப்பதாக அலோபதி மருத்துவத்தில் சொன்னார்கள்.

என் தோழி கீமோதெரபி எடுக்க பயந்துகொண்டு சித்த மருத்துவர் ஒருத்தரை நாடினார். இந்த வகை மட்டுமல்லாமல் எல்லா வகையான கேன்சர்களையும் தன்னால் குணப்படுத்த முடியும் என்று சொன்ன அந்த மருத்துவர் ஏராளமான பச்சிலைகளைக் கொடுத்து அதை அரைத்துக் காலில் போடும்படியும் அரைத்துக் குடிக்கும்படியும் சொன்னார்.

கிட்டத்தட்ட இருபது நாட்கள் அவ்வாறு செய்தார் தோழி. காலில் இருக்கும் கட்டி பெரிதாகியதைப் பார்த்து விட்டு உடனடியாக ஏற்கனவே பார்த்த அலோபதி மருத்துவரிடம் ஓடினார்கள். கட்டி பரவி கேன்சர் முற்றி ஒரு காலை அகற்றும் நிலை உருவாகி விட்டது.
இதைத் தாங்க முடியாத என் தோழி ஒரே மகனுக்கு நள்ளிரவில், ‘‘மன்னித்துக்கொள் மகனே...” எனக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? சித்த வைத்திய சாலையில் மருந்து இடிக்கும் தினக்கூலி வேலை செய்தவர், இப்போது தனியாக க்ளீனிக் போட்டு விட்டார். புகழ்பெற்ற க்ளீனிக்கில் ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை செய்தவர் அங்கே வரும் கூட்டத்தைப் பார்த்துவிட்டு தனியாக க்ளீனிக் போட்டு விட்டார்!

இவர்களெல்லாம் எப்படி மருத்துவர் ஆகிறார்கள்? Central Counsil for Indian Medicine என்கிற சிசிஐஎம் தெளிவாக போலி மருத்துவர்களுக்கு எதிராக வாளைச் சுழற்றுவதற்கு விதிமுறைகள் வைத்திருக்கிறதே? உச்சநீதிமன்றம்கூட போலி மருத்துவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரைத்திருக்கிறதே? இதையெல்லாம் மீறி இவர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள்?  

(போலிகளை  துகிலுரிப்போம்...)

- சரவணன் சந்திரன்