காஜலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்!



ஊரே #metoo சர்ச்சையில் கொதித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்தான் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதுவும் பப்ளிக்காக மேடையில்!

விரைவில் வெளியாகவிருக்கும் தெலுங்குப் படம், ‘கவச்சம்’. பெல்லம்கொண்டா சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வாலும் மெஹ்ரின் பிர்சாந்தாவும் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். சீனிவாஸ் மாமிலா இப்படத்தை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். தன் கேரியரில் முதல் முறையாக பெல்லம்கொண்டா சீனிவாஸ் இப்படத்தில் போலீசாக நடித்திருக்கிறார்.மேட்டர் இதுவல்ல.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. ஒவ்வொருவராக அழைக்கப்பட... அனைவரும் மானே தேனே பொன்மானே போட்டு படத்தின் சிறப்பை விளக்கினார்கள்.இந்நிலையில் பேசுவதற்காக பிரபல ஒளிப்பதிவாளரான சோட்டா கே.நாயுடு அழைக்கப்பட்டார்.

உரையாற்ற வந்தவர் காஜல் அகர்வாலின் கையிலிருந்த மைக்கை வாங்கி பேச ஆரம்பிப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், மனிதர் மைக்கை வாங்கவில்லை. மாறாக காஜல் அகர்வாலை நெருங்கி அவரை இடுப்புடன் அணைத்து சட்டென்று முத்தமிட்டார்!
பார்வையாளர்கள் மட்டுமல்ல... மேடையில் இருந்த விருந்தினர்களும் சோட்டா கே.

நாயுடுவின் செயலைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள். காஜல் அகர்வால் குறித்து சொல்ல வேண்டியதில்லை. என்ன ரியாக்ட் செய்வது என்றே தெரியாமல் சிலையாக நின்றுவிட்டார்.இதன் பிறகு மைக்கை வாங்கி சோட்டா கே.நாயுடு பேசியதுதான் உச்சகட்ட காமெடி.

‘‘இசையமைப்பாளர் தமன்னுக்கும் எனக்கும் ஒரு போட்டி. காஜல் அகர்வாலை யார் தைரியமாக முத்தமிடுவது..? இதுதான் போட்டி. இதில் நான் வெற்றி பெற்றுவிட்டேன்!’’

வேறுவழியில்லாமல் நாகரீகம் கருதி வந்திருந்தவர்கள் அனைவரும் இதற்கு கையைத் தட்டினார்கள். வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் காஜல் அகர்வால் இந்த இக்கட்டை சமாளித்தார்.ஒருவழியாக ஃபங்ஷன் முடிந்தது. ஆனால், இணையத்தில் சர்ச்சை தொடர்கிறது.

நாடறிந்த ஒரு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பொது மேடையில் இப்படி அனுமதியின்றி ஒரு பிரபல நடிகையை முத்தமிடலாமா..? இது ஆணாதிக்கத் திமிர்தானே... நடிகை என்றால் இளக்காரமா... பிரபலமான நடிகைக்கே இந்நிலை என்றால் புதுமுக நடிகை / துணை நடிகைகளின் நிலை எந்தளவுக்கு மோசமாக இருக்கும்...என்றெல்லாம் சோட்டா கே.நாயுடுவை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

காம்ஸ் பாப்பா