கவிதை வனம்



நினைப்பு

பால் மடியுடன்
சாலையைக் கடக்க
எத்தனிக்கையில்
அடிபட்டு
வாய் திறந்த நிலையில்
உயிர்விட்ட நாய்
அந்தக் கடைசித்
தருணங்களில்
என்ன நினைத்திருக்கக்கூடும்?

- பாலு விஜயன்

வரவேற்பு

இப்பெருங் காட்டில்
ஆடுகள் மேய்த்துக்
கொண்டிருக்கிற
சிறுவன் நான்
வடக்கே நகரும் மழையை
மேற்கே திருப்பி
என்னை முழுமையாய்
நனைவிக்கிறாய்
சோவென்ற இம்மழையின்
பெருங்கூச்சல்
உன் சாபத்தின்
கடுங்கோபமாக்குகிறாய்
ஒவ்வொரு இலைகளின்
மீதும் தங்கி
சொட்டுகிற உன்
நினைவுகளின் துளிகளில்
நனைந்துகொண்டிருக்கிற நான்
காட்டின் உச்சி மீதேறி
மேலுயர்த்திய கைகளுடன்
உன் பெருமழையை
வரவேற்கிறேன்.
- கோவிந்த் பகவான்