பழவேற்காடு - அறிந்த இடம் அறியாத விஷயம்



- பேராச்சி கண்ணன்

சென்னையின் வரலாறு 378 ஆண்டுகள். ஆனால், பழவேற்காடு இதைவிட பழமையானது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே ‘எரிதேரியன் கடல்பயணக் குறிப்புகள்’ நூலில் இந்த ஊரைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சோழர்கள், விஜயநகரப் பேரரசு, போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என எல்லோருமே இந்நகரத்தை தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர்.

ஆந்திர எல்லையில், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அருகில் சுற்றிலும் உப்புநீர் ஏரி சூழ ரம்மியமாய் காட்சியளிக்கிறது பழவேற்காடு. ஒரு பரபரப்பான காலை வேளை. பழவேற்காடு நண்பர் ஊரைச் சுற்றிப் பார்க்க அழைத்துப் போவதாகத் திட்டம். அவருக்குப் போன் செய்ததும் அடுத்த சில நிமிடங்களில் ஆஜரானார். ‘‘சார்... மணி எட்டரையாச்சு. முதல்ல, டிபனை முடிச்சிடுங்க...’’ என்ற அந்த நண்பர் அருகிலிருந்த குடிசை கடைக்குள் அழைத்துச் சென்றார். ஒரே கூட்டம். அடுத்த கடை நோக்கி நகர்ந்தோம்.

பழவேற்காட்டின் காலை உணவு வித்தியாசமானது. புரோட்டாவும், இட்லியும், தோசையும் சுடச்சுடத் தருகிறார்கள். தொட்டுக் கொள்ள சிக்கன், மட்டன் சேர்வா. இதனை சாப்ஸ் என்கிறார்கள். இதைத் தனியாக ஒரு சிறிய தட்டில் கொடுத்து விடுகிறார்கள். இந்த டிஷ்களுடன் சிக்கன் ஃப்ரையும் இருக்கிறது. ஆனால், ஆம்லேட் கிடையாது. அது இரவுதானாம்.

ஒரு புரோட்டாவை சாப்ஸ் உடன் தொட்டு ருசி பார்த்தோம். நாக்கில் தாண்டவமாடியது சுவை. எழுபது ரூபாயில் மூன்று பேர் திருப்தியாக சாப்பிட்டு வெளியே வந்தோம். பிறகு, பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியலிட்டார் நண்பர். ‘‘இங்க டச்சுக் கல்லறை, போர்த்துகீசிய கல்லறை, நிழல் கடிகாரம், லைட்ஹவுஸ், படகு சவாரி... முக்கியமானது. அப்புறம், சோழர் கால சிவன் கோயிலும், விஜயநகரப் பேரரசு காலத்துல கட்டின ஆதிநாராயண பெருமாள் கோயிலும் சிறப்பானது.

ஆனா, பர்சனலா என்னை கேட்டா இங்க கிடைக்கிற இறாலும், நண்டும்தான் ஃபேமஸ்னு சொல்வேன்...’’ என்றவர், டச்சுக் கல்லறை பக்கமாக அழைத்துப் போனார். வெளித்தோற்றமே பயமுறுத்துகிறது. வாயிலில் இருக்கும் ஆர்ச் வளைவின் நடுவில் சின்னதாய் ஒரு எலும்புக் கூடு தலை. இடதுபுறத்தில் ஆண் எலும்புக் கூட்டின் முழு வடிவமும், வலதுபுறத்தில் பெண் எலும்புக் கூட்டின் முழு வடிவமும் அதன் கையில் குழந்தை தலை எலும்புக் கூட்டையும் கல்லில் செதுக்கி இருக்கிறார்கள்.

முதல் கல்லறையே 1655 என்றிருந்தது. அதைத்தாண்டியதும் கிணறு ஒன்று. தூண் வடிவ கல்லறையில் 1753 - 1791 என்ற வருடக் குறிப்பைப் பார்க்க முடிகிறது. கோபுரம் போல வடிவமைக்கப்பட்ட பெரிய கல்லறையின் முகப்பில் இரண்டு ஏஞ்சல்கள். அடுத்து கல்லறை போன்ற ஓர் இடம். அதைக் கல்லறை என்றே கடந்தபோது, ‘‘இது அருகிலிருக்கும் பாழடைந்த கோட்டைக்குப் போகும் சுரங்க வழி...’’ என்றார் நண்பர். இப்போது மூடப்பட்டுவிட்டதாம்.

அடிப்பகுதி மூடப்படாமல் இருந்த கல்லறை ஒன்றையும் பார்த்தோம். ‘‘யாருக்காகவோ வெட்டப்பட்டு பின்னர் புதைக்கலாம் என்று விட்டிருக்கலாம்...’’ என்கிறார் நண்பர் மீண்டும். அங்கிருந்து போர்த்துகீசிய கல்லறை நோக்கி நகர்ந்தோம். முட்செடிகளால் முழுவதும் மூடப்பட்ட நிலையில் கிடக்கிறது அந்த இடம்.

தொடர்ந்து சூரிய ஒளி நிழல் கடிகாரம் பார்க்க கிளம்பினோம். சின்ன பள்ளிவாசலின் உள்ளே இருக்கிறது இந்தக் கடிகாரம். ஒரு தூணின் மேலே இரும்புத் தகடு. அதன் நடுவில் ஒரு நீட்டமான கம்பி. அதில் வரிசையாக எண்கள். சூரிய ஒளியின் நிழல் படிவதை வைத்து சரியான நேரத்தைக் கணிக்கிறார்கள். அங்கு குரான் படிக்கும் சிறுவர்களை அழைத்து மணி கேட்டோம்.

‘‘சரியா 9.35 மணி...’’ என்றார்கள். நாம் நமது வாட்சை பார்த்தோம். துல்லியமாக இருந்தது. எப்படி? அவர்களே விளக்கினார்கள். ‘‘நடுவுல நில்லுங்க. சூரியன் உங்களுக்கு வலது பக்கமாக இருந்தா இடது பக்கமா மணி பார்க்கணும். இடது பக்கமா இருந்தா வலது பக்கமா பார்க்கணும்...’’ இடது புறத்தில் இருந்து வரிசையாக எண்கள் போடப்பட்டிருக்கிறது. எந்த எண்ணில் நிழல் நிற்கிறதோ அதுதான் டைம். அங்கிருந்து விடைபெற்று, கடற்கரையை ஒட்டி இருக்கும் லைட் ஹவுஸ் பக்கம் சென்றோம்.

இதனைச் சுற்றியிருக்கும் பகுதிக்கு லைட்ஹவுஸ் குப்பம் என்று பெயர். இது தனி பஞ்சாயத்தாக இருக்கிறது. லைட்ஹவுஸின் கதவுகள் பூட்டியிருந்தன. பார்வையாளர் நேரம் மாலை 3 டூ 5 என எழுதியிருந்ததைப் பார்த்துவிட்டு படகுசவாரிக்குக் கிளம்பினோம். மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவரும், ஆசிரியருமான செந்தில்குமார் நம்மோடு இணைந்தார்.

‘‘இந்த ஏரியைச் சுத்தி பழவேற்காடு, கோட்டை குப்பம், லைட்ஹவுஸ், தாங்கல் பெரும்புலம்னு மொத்தம் 4 பஞ்சாயத்துகள் இருக்கு. இதுக்குள்ள 36 கிராமங்கள் வருது. எல்லாமே தீவுகள். டச்சுக்காரர்கள் ‘பழயகட்டா’னும் ‘புலிகாட்’னும் அழைச்சிருக்காங்க. இங்க முகலாயர்கள் வந்தப்பதான் முஸ்லிம் குடியிருப்புகள் வந்திருக்கு. இப்பவும் அவங்க பயன்படுத்திய மண்பாண்டங்கள், ஜாடி எல்லாம் இருக்கு...’’ என்றவர், தோனிரேவு என்ற கிராமம் பக்கமாக அழைத்துப் போனார்.

அங்கே நமக்காக மீனவ நண்பர் செவித் குமார் படகுசவாரிக்குத் தயார் நிலையில் இருந்தார். ஒரு ரைடு போனோம். சிலர் தண்ணீரில் மூழ்கி எழுந்த வண்ணம் இருந்தனர். ‘‘இங்க மீனவர்கள் தவிர இருளர் சமூக மக்களும் இருக்காங்க. அவங்க, இந்த ஏரியில மூழ்கி இறால் பிடிச்சு சம்பாதிப்பாங்க.

சிலர் வலை போட்டு மீன் பிடிப்பாங்க...’’ என்ற செந்தில், ‘‘அங்க பாருங்க தண்ணீர்ல பெலிக்கன், நாரை எல்லாம் கிடக்குது. பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயமாவும் விளங்குறதுக்கு இது ஒரு சின்ன உதாரணம். இங்க நீங்க எப்பவும் பறவைகளைப் பார்க்கலாம்...’’ என்றார். இங்கு படகுசவாரி மீனவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களின் தொழில் நேரம் போக மீதமுள்ள நேரங்களில் படகு சவாரி செய்கிறார்கள்.

முகத்துவாரத்திற்கும், கடற்கரையோரம் உள்ள சவுக்குக்காட்டிற்கும் சுற்றுலா வருபவர்களை அழைத்துச் செல்கிறார்கள். உள்ளிருக்கும் நேரத்தைப் பொறுத்து ரூ.750 முதல் ரூ.1500 வரை கட்டணம் பெறுகிறார்கள். பழவேற்காடு என்றாலே இறாலும், நண்டும்தான் ஃபேமஸ். அதைப் பற்றி செந்திலிடம் கேட்டோம். ‘‘இங்க மூணு வித இறால் இருக்கு. கட்ரானு சொல்லப்படற கட் இறால். கருப்பு கலர்ல கோடுகள் வரி வரியா இருக்கறதால இந்தப் பெயர். ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்.

அடுத்து, வெள்ரா. அதாவது வெள்ளை இறால். அப்புறம், சின்ன இறால். சைஸ வச்சு இந்தப் பேரு. ஏரி முகத்துவாரப் பகுதிலதான் இறால் உற்பத்தியாகும். அதனால, இந்த இறால்களுக்கு நல்ல டிமாண்ட். அப்புறம், நண்டுல பச்சைக் கல் நண்டு ஃபேமஸ். இதுக்கு சைஸ் வாரியா ரேட் இருக்கு. ஒன்றரை கிலோ நண்டு ஒண்ணு ஆறாயிரம் ரூபாய்க்கு போச்சு.

சென்னைல காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டைனு எல்லா இடங்களுக்கும் இங்கிருந்துதான் இறாலும், நண்டும் போகுது. அப்புறம் கேரளா வியாபாரிகள் வாங்கிட்டுப் போவாங்க. அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகுது...’’ என்கிறவரைத் தொடர்ந்தார் நம்முடன் இணைந்த இன்னொரு மீனவர். ‘‘இங்க 36 கிராமங்கள் இருந்தாலும் இந்த ஏரியில இறால், நண்டு பிடிக்கிற உரிமை சில கிராமங்களுக்கு மட்டும்தான் உண்டு. மத்தவங்க கடலுக்குப் போயிடுவாங்க.

உரிமை உள்ள கிராமத்து மக்களும் தினமும் பிடிக்க முடியாது. உதாரணத்துக்கு ஒரு ஊர்ல பத்து டீம் இருக்குனு வச்சுக்கோங்க. இதுல ஒரு நாளைக்கு ஒரு டீம்தான் இறால், நண்டு பிடிக்கலாம். மறுபடியும் அந்த டீம் இறால் பிடிக்க பத்து நாட்கள் காத்திருக்கணும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க இப்படியொரு ஏற்பாடு. சீசன் டைமா இருந்தா ஒரு நாள்ல ஆயிரம் கிலோ இறால் கூட ஒரு டீம் பிடிக்கும். சீசன் இல்லாத நாட்கள்ல ஒரு கிராமமே சேர்ந்தாலும் ஆயிரம் கிலோ தேறாது.

கிலோ இருநூறு ரூபாய்னா ரூ.2 லட்சம் வரை ஒரு டீம் சம்பாதிப்பாங்க. ஒரு டீம்ல பத்து முதல் 50 பேர் வரை இருப்பாங்க. செலவு எல்லாம் போக ஓரளவு வருமானம் வரும். போன வாரம் நான் போயிட்டு வந்தேன். மொத்தமே ரூ.20 ஆயிரம்தான் கிடைச்சது. பத்து பேர் போனதுல எனக்கு 2 ஆயிரம் ரூபா கொடுத்தாங்க...’’ என்கிறார் சிரித்தபடி.

மாலை 4 மணி. ஏரியின் இன்னொரு பகுதி. அங்கே இறால் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர் சில மீனவர்கள். மாலையில் தொடங்கி காலையில் அடங்குமாம் இறால் பிடித்தொழில். முதலில் வரிசையாக கட்டைகளை நீரில் அமிழ்த்திக் ெகாள்கிறார்கள். பிறகு, அந்த வரிசையின் முடிவில் வட்டமாக கட்டைகள் அமைக்கிறார்கள். இதேபோல் இன்னொரு வரிசை. இன்னொரு வட்டம். இதைச் சுற்றிலும்
வலைகள்.

வரிசையாக அமைக்கப்பட்ட, வட்டமாக விரிக்கப்பட்ட வலையில் இறால்கள் சிக்கிக் கொள்கின்றன. அதை எடுத்து படகில் வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை. இப்படி விடிய விடிய ஐந்தாறு முறைகள் வலை விரிக்கிறார்கள். பாலத்திலிருந்து இறால் பிடிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு லைட்ஹவுஸை அடைந்தோம். பதினொரு மாடிகள் கொண்ட வட்டப் பாதையில் கால்கடுக்க மேலேறினோம். ஜில்லென காற்று வீசுகிறது. அதில், கொள்ளை அழகாய் காட்சியளிக்கிறது பழவேற்காடு.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

வரலாறு

* சங்க காலத்திலிருந்தே தொடங்குகிறது. சோழ, பல்லவ கோயில்கள் மூலம் இவை அறியப்படுகின்றன.
* 13ம் நூற்றாண்டில் மெக்காவில் புதிதாக பதவியேற்ற காலிப்பிற்கு அடிபணிய மறுத்த அரேபியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டார்கள். பிறகு அவர்கள் நான்கு படகுகளில் வந்து இங்கே குடியமர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
* கி.பி.1502ல் முதன்முதலில் போர்த்துக்கீசியர்கள் இங்கே ஒரு வணிக புறமையத்தை அமைத்துள்ளனர்.
* டச்சு வணிகர்களும், அவர்களது கப்பல்களும் பழவேற்காடு ஏரியின் முகப்பிற்கு எதிரே உள்ள கரிமணல் கிராமத்தில் தரைதட்டியது. அதனால் அவர்கள் இப்பகுதியில் தங்கிவிட்டனர்.
* கிபி 1606ம் ஆண்டு முதல் 1825 வரை டச்சு கிழக்கிந்திய கம்பெனி இங்கே வணிகம் செய்துள்ளது.
* பிறகு, பிரிட்டிஷ் வசமானது பழவேற்காடு.

ஏரி

* ஒரிசாவிலுள்ள சில்கா ஏரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரி பழவேற்காடு ஏரிதான்.
* இந்த ஏரியை வடக்கே ஸ்வர்ணமுகி ஆறும், வடமேற்கே காலாங்கி ஆறும், தெற்கே ஆரணி, கொசஸ்தலை ஆறுகளும், கூடுதலாக சில ஓடைகளும் உருவாக்குகின்றன.
* ஏரியின் மேற்கே பக்கிங்காம் கால்வாய் நீரும் கலக்கிறது. வெள்ளம் ஏற்படும் காலங்களில் இது நீரினை சேமித்து வைக்கும் பகுதியாகவும், மழைக்காலங்களில் உபரி நீரினை கடலுக்கு அனுப்பும் பாதையாகவும் செயல்படுகிறது.

மீனவர்கள் கோரிக்கை
* இது இயற்கையில் அமைந்த துறைமுகம். இறால் இனப்பெருக்கத்திற்கு இந்த ஏரிதான் காரணம்.
* கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டதாக இருந்த இந்த ஏரி இப்போது 13 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கிவிட்டது. காரணம், தொழிற்சாலை கழிவுகள். எட்டு, பத்தடி ஆழங்கள் கொண்டது ஐந்தடியாக மாறியிருக்கிறது. அதனால், இறால் இனப்
பெருக்கமும் குறைந்துவிட்டது.
* முகத்துவாரத்தை தூர்வாரி, ஏரியின் ஆழத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும். - என்கிறார் திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கப் பொதுச் செயலாளர் துரை.மகேந்திரன்.