விஜயனின் வில்
கே.என்.சிவராமன் - 18
‘‘ஆதி... ஆர் யூ சீரியஸ்?’’ மாஸ்டரின் குரலில் அன்பு எதிரொலிக்கவில்லை. மாறாக பதற்றம் அலைக்கற்றையில் வழிந்தது.
இதை முன்பே ஆதி ஊகித்திருக்க வேண்டும். எனவே அதே அழுத்தத்ததுடன் செல்போனை காதருகில் வைத்தபடி பதில் சொன்னான். ‘‘ஆமாம் மாஸ்டர்...’’ ‘‘உயரம் என்ன சொன்ன?’’ ‘‘மூன்றடி மாஸ்டர்...’’ ‘‘பார்க்க எப்படி இருந்தாங்க?’’ ‘‘மனிதர்கள் மாதிரி...’’ ‘‘எங்க பார்த்த?’’ ‘‘மீனாட்சியம்மன் கருவறை விமானத்து மேல...’’ ‘‘வேற யாராவது கவனிச்சாங்களா?’’ ‘‘தெரியலை மாஸ்டர்.
அம்மனை தரிசனம் செஞ்சுட்டு பக்திப்பரவசத்தோட வெளில வர்றாங்க. கருவறை கோபுரத்தை பார்த்து கன்னத்துல போட்டுக்கறாங்க. அப்படியே வெளியே போறாங்க. மத்தபடி மூன்றடி உயரமுள்ள அந்த ஜந்துக்களை அவங்க பார்த்தா மாதிரி தெரியலை. ஒருவேளை அப்படி யாராவது கண்டிருந்தா இந்நேரம் அது இஷ்யூ ஆகியிருக்குமே...’’
‘‘அதாவது உன் கண்ணுல மட்டும்தான் அவங்க பட்டாங்க. இல்லையா?’’ மாஸ்டர் என்ன கேட்க வருகிறார் என்பது ஆதிக்கு புரிந்தது. கவனமாக பதிலளித்தான். ‘‘என் கண்ணுக்கு தெரிஞ்சாங்க மாஸ்டர்...’’ ‘‘உன் கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சிருக்காங்க...’’ அழுத்தத்துடன் சொன்ன மாஸ்டரின் குரலில் இப்போது பதற்றத்தைத் தாண்டி வேறொரு உணர்வு தொக்கி நின்றது. ‘‘அவங்க யாருனு தெரியுமா..?’’ ‘‘தெரியலை மாஸ்டர்.
இதுக்கு முன்னாடி அவங்களை நான் பார்த்ததில்லை...’’ ‘‘நம்ம முன்னோர்கள் சித்திரக் குள்ளர்கள்னு சொல்வாங்க. அறிவியல் அவங்களுக்கு ஹாபிட்ஸ்னு பெயர் சூட்டி இருக்கு. மனிதர்களுக்கு முன்னாடி அவங்க வாழ்ந்ததா சொல்வாங்க...’’ ‘‘அப்படிப்பட்டவங்க இப்பவும் இருக்காங்களா?’’ ‘‘இருக்கறதாலதானே உன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்காங்க...’’ நொடி நேரம் மவுனமாக இருந்த மாஸ்டர், ‘‘ஒருவேளை அவங்க வருகையை நீ தெரிஞ்சுக்கணும்னு உனக்கு காட்சியளிச்சிருக்காங்களா..?’’ என்றார்.
‘‘மாஸ்டர்...’’ ‘‘நாம தேடிட்டு இருந்த விடைகள் இப்ப கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. கார்க்கோடகர் ஏன் தாராகிட்ட ஸ்ரீரங்கம் ப்ளூ ப்ரிண்ட்டை கொடுத்தார்... வேற்றுகிரக வாசிகள் ஏன் இப்ப பூமிக்கு வந்திருக்காங்க... இதுவரை உலகத்து பார்வைல... ஏன் உலகத்துக்கே வராம இருந்த... சொல்லப்போனா அழிஞ்சுட்டாங்கனு எல்லோரும் நினைச்ச ஹாபிட்ஸ் திடீர்னு ஏன் இப்ப அதுவும் மதுரைல தோன்றியிருக்காங்க... குறிப்பா ‘நாங்க வந்துட்டோம்’ என்கிற செய்தியை ஏன் உன்கிட்ட மட்டும் சொல்லியிருக்காங்க... இத்தனை வினாவுக்கும் ஒரே விடைதான் ஆதி...’’ ‘‘அது என்ன மாஸ்டர்?’’
‘‘மகாபாரதம்!’’ ‘‘மாஸ்டர்..?’’ ‘‘அதிர்ச்சி அடைய இப்ப நேரமில்லை ஆதி. எல்லாமே நம்ம கை மீறி போயிட்டிருக்கு. சித்திரக் குள்ளர்கள் வாழ்ந்த காலமும் மகாபாரதம் நிகழ்ந்த கட்டமும் ஏறக்குறைய ஒண்ணுதான். கூடக் குறைய இருந்தாலும் பெரிய கால வித்தியாசமில்லை...’’ ‘‘மாஸ்டர்..!’’
‘‘இதை வைச்சு பார்க்கிறப்ப ஒரு விஷயம் தெளிவா புரியுது... மகாபாரதத்தைச் சேர்ந்த ஏதோ ஒண்ணை இப்ப எடுக்க யாரோ முயற்சி செய்யறாங்க... அது வேற்றுகிரகவாசிகளா இல்ல சித்திரக்குள்ளர்களானு தெரியலை...’’ ‘‘மாஸ்டர், சின்னதா ஒரு பொறி விழுந்திருக்கு...’’ ‘‘எதைப் பத்தி?’’ ‘‘மகாபாரதத்தைச் சேர்ந்த ஏதோ ஒண்ணுனு சொன்னீங்களே...’’ ‘‘ம்...’’ ‘‘அந்த ஒண்ணைப் பத்தி...’’ ‘‘உள்ளுணர்வுதான் நம்ம ID அமைப்பை வழிநடத்துவதே... அதனால தயங்காம உன் மனசுல விழுந்த பொறி என்னனு சொல்லு...’’
‘‘மதுரைக்கு நான் முன்னாடியே வந்திருக்கேன்...’’ ‘‘தெரியும். கார்க்கோடகரோடதானே...’’ ‘‘ஆமா மாஸ்டர்...’’ ‘‘அதுக்கும் பொறிக்கும்..?’’ ‘‘சம்பந்த மிருக்கு மாஸ்டர். மீனாட்சியம்மன் கோயில் கருவறை கோபுரத்தை அப்ப கார்க்கோடகர் வெறிச்சு வெறிச்சு பார்த்தார்...’’ ‘‘அதுதானே அவருக்கு அப்பவும் உனக்கு இப்பவும் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்..?’’ ‘‘மறுக்கலை மாஸ்டர்... ஆனா...’’ ‘‘ஆனா?’’ ‘‘இந்த மீனாட்சியம்மன் கருவறை கோபுரத்துக்கு இன்னொரு பெயர் இருக்கு...’’
‘‘ஆதி...’’ மாஸ்டரின் குரல் மறுமுனையில் உற்சாகத்துடன் துள்ளியது. ‘‘இந்திர விமானம் இல்லையா?’’ ‘‘அதேதான் மாஸ்டர். இந்திரன் யாரு? அர்ஜுனனோட அப்பா...’’ ‘‘ஆதி...’’ ‘‘அப்படீன்னா அர்ஜுனனோட சம்பந்தப்பட்ட பொருளை எடுக்க இப்ப முயற்சி பண்றாங்களா?’’ ‘‘பாயிண்ட்டை பிடிச்சுட்ட. விஜயனோட வில்!’’ சில நிமிடங்களுக்கு இருவருமே பேசவில்லை. கைபேசியை ஆதி இறக்கவுமில்லை. தனது விடுதி அறையின் படுக்கையில் அசையாமல் அமர்ந்திருந்தான்.
‘‘ஆதி...’’ ‘‘சொல்லுங்க மாஸ்டர். லைன்லதான் இருக்கேன்...’’ ‘‘உடனே ஸ்ரீரங்கம் கிளம்பு...’’ ‘‘மதுரைல நம்ம வேலை...’’ ‘‘இன்னும் முடியலைதான். ஆனா, இப்ப நாம இருக்க வேண்டிய இடம் ஸ்ரீரங்கம்தான். எப்ப மீனாட்சியம்மன் கருவறை விமானத்துல சித்திரக்குள்ளர்கள் உனக்கு காட்சி தந்தாங்களோ, அப்பவே அவங்க ஸ்ரீரங்கமும் வந்துட்டாங்கனு அர்த்தம்.
ஏன்னா, அர்ஜுனனோட வில்லுக்கும் ரங்கநாதருக்கும் தொடர்பிருக்கு. என் கணிப்பு சரினா, வேற்றுகிரக வாசிகளும் ஸ்ரீரங்கத்துலதான் இப்ப இருக்கணும்...’’ ‘‘அவங்க நோக்கம் நிறைவேற நாம விடக் கூடாது மாஸ்டர். விஜயனோட வில் நம்ம சொத்து...’’ ‘‘நிறைவா இருக்கு ஆதி. உன்னை மாதிரி ஒரு விசுவாசி கிடைக்க நம்ம அமைப்பு கொடுத்து வைச்சிருக்கணும்...’’ ‘‘ரங்கம் போயிட்டு உங்களை கூப்பிடறேன் மாஸ்டர்...’’ ‘‘அவசியமில்லை ஆதி... உன்னை அங்க வரவேற்க நானே தயாரா இருப்பேன்!’’
ஒளியும் ஒலியும் அணையும் வரை காத்திருந்த ஆதி, அதன்பின் இமைப்பொழுதும் தாமதிக்கவில்லை. விடுதி அறையை காலிசெய்துவிட்டு தன் பைக்கில் ஏறினான். திருச்சியை நோக்கி பறந்தான். மீனாட்சியம்மனின் கருவறை விமானத்தில் மறைந்தபடி அவன் செல்வதையே ஒரு சித்திரக்குள்ளன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் உதட்டில் புன்னகை பூத்தது! ‘‘கிருஷ்...’’ ஐஸ்வர்யாவின் அலறலைக் கேட்டு கிருஷ்ணன் பால்கனிக்கு வந்தான். ‘‘என்ன..?’’ ‘‘அங்க பாரு...’’ அவள் சுட்டிக் காட்டிய திசையை நோக்கியவனின் கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்றன. அங்கே - ஒன்றல்ல இரண்டல்ல நூறல்ல... ஆயிரக்கணக்கில்... ஏன் லட்சங்களையும் தொடலாம்... ஹாபிட்ஸ்கள் வரிசையாக ரங்கம் கோயிலைச் சுற்றி வளைத்தபடி நின்றிருந்தார்கள்.
‘‘என்ன இது..?’’ ‘‘நோ ஐடியா ஐஸ்... சம்திங் ஃபிஷ்ஷி... நல்லா கவனி. கோயிலுக்குள்ள போற பக்தர்கள் யார் கண்ணுக்குமே ஹாபிட்ஸ் தெரியலைனு நினைக்கறேன். பிகாஸ், வழக்கமான பக்திப் பரவசத்தோடதான் அவங்க உள்ள போயிட்டு இருக்காங்க... வெளில வந்துட்டு இருக்காங்க...’’ ‘‘அப்ப நம்ம கண்ணுக்கு மட்டும் ஏன் தெரியணும்?’’ ‘‘அதைவிட கோயிலை எதுக்காக சுத்தி வளைச்சிருக்காங்கனு முதல்ல கண்டுபிடிக்கணும்... வா...’’ சொன்ன கிருஷ்ஷை பின் தொடர்ந்தாள்.
இருவரும் ஓட்டமும் நடையுமாக தெற்கு வாசலை அடைந்தபோது - வடக்கு வாசலில் பத்மனும் அனந்தனும் குளிகனும் நின்றிருந்தார்கள். மேற்கு வாசலில் ஆதியும் மாஸ்டரும் காரில் அமர்ந்திருந்தார்கள். இவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரிந்த ஹாபிட்ஸ் - வரிசையாக ஆக்ரோஷத்துடன் கோயில் மதில் சுவரில் ஏற ஆரம்பித்தார்கள். இதையெல்லாம் கிழக்கு வாசலில் நின்றபடி ஓர் உருவம் மேற்பார்வை செய்து கொண்டிருந்தது. அது தாரா! அவள் கையில் முட்டை இருந்தது. அதில், ‘KVQJUFS’ என எழுதப்பட்டிருந்தது.
(தொடரும்)
ஓவியம்: ஸ்யாம்
குப்பை வண்டி திருடன்!
மீட்டர் சூடானாலும் மைலேஜ் கிடைக்காத குப்பை வண்டியைத் திருடி 65 கி.மீ வேகத்தில் ஓட்டிய டைலர் ஹாஜ்வுட்டை 10 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்துள்ளனர் அமெரிக்காவின் ஓரிகான் மாநில போலீசார். ம்... பொழுது விடிஞ்சா பொல்லாப்பு வருதே!
பேன்ட்டில் போதை!
நியூயார்க் கென்னடி ஏர்போர்ட்டில் ஜுவான் கார்லோஸ் என்பவரின் நடையில் டவுட் வர, போலீசார் சோதித்திருக்கின்றனர். கால் பேன்ட் டிசைனில் 5 கிலோ கோகெய்ன் கிடைத்திருக்கிறது. இதன் மதிப்பு ரூ.1 கோடியே 8 லட்சத்து 61 ஆயிரம்!
இந்தியன் போலீஸ்!
கான்பூரில் நோ பார்க்கிங்கில் நின்ற பைக்குக்கு போலீஸ் சொன்ன ஃபைனை கட்ட மறுத்து டோ செய்த பைக்கோடு தானும் வேனில் ஏறி நேஷனல் வைரலாகியுள்ளார் முகமது நூமான். கடைசியில் வேறு வழியின்றி ஃபைனை கட்டிவிட்டாராம். இந்தியன் போலீஸ்னா சும்மாவா!
பாம்புச் சிறுவன்!
பாம்போ, முதலையோ தோளில் தூக்கிப்போட்டு ரப்பர் பொம்மையாய் வளைத்து விளையாடி மலைப்பூட்டுகிறான் 2 வயது ஆஸ்திரேலிய சிறுவன் ஜென்சன் ஹாரிசன். ஸ்நேக் கேட்ச்சிங் தொழில் அதிபர்களான இவனது பெற்றோர் 300 பாம்புகளை வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கிறார்களாம்.
|