தனுசு லக்னம் - குரு தனித்து நின்ற யோகம்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 82

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

வாழ்க்கையே போர்க்களம்தான் என்று எப்போதும் போராடுவதற்குத் தயாராக இருப்பார்கள். இளகிய உள்ளம், அன்பான பேச்சு, எல்லாம் இருந்தாலும் அருகிலுள்ளோரின் சிறு அத்துமீறல்களைக் கண்டிக்கத் தயங்க மாட்டார்கள். எந்தப் பிரச்னைகளைப் பார்த்தும் பயப்பட மாட்டார்கள். முதலாளித்துவம் பிடிக்காது. அதேபோல போலியான பக்தியை வெறுப்பீர்கள். நெருக்கடி நேரங்களிலும் நீதி தவற மாட்டீர்கள். உங்களின் இலக்கு எப்போதுமே தவறாது.

உங்களின் லக்னாதிபதியான குரு கேந்திரத்தில், அதாவது ராசிக் கட்டங்களின் மூலைகளில் நின்றால் கடும் சோதனைகளைக் கடந்து வரவேண்டியிருக்கும். அதேபோல திரிகோணங்களான 5. 9 போன்ற இடங்களில் அமர்ந்தால் நல்லதே நடக்கும். ஆனால், 1, 4, 7, 10 போன்ற இடங்களிலோ நின்றாலோ உங்களை முடக்க வைக்கும். புதன் உங்களின் பாதகாதிபதியாக வருவதால் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காது திணற வைக்கும்.

எப்போதுமே உயர்ந்த விஷயத்தை நோக்கித்தான் நகருவீர்களே தவிர சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் செவி சாய்க்க மாட்டீர்கள். சொந்த ஜாதகத்தில் தனுசுக்குள் ஏதேனும் ஒரு நல்ல கிரகம் இருப்பது நல்லது. உங்களின் லக்னாதிபதியான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் அம்மாதான் எல்லாமும் என்றிருப்பீர்கள். உங்களுக்கு சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார்.

சூரியன் கிட்டத்தட்ட உங்களுக்கு கிடைக்க வேண்டிய சகல பாக்கியங்களையும் கிடைக்கச் செய்வார். சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக உதவப் போகிறார். ஐந்தாமிடமான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. உங்களின் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தாற்போல பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பீர்கள்.

ஒவ்வொரு ராசியில் தனித்து நின்ற குருவின் பலனைப் பார்ப்போமா! தனுசு லக்னத்தில் ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான குரு அமர்ந்திருந்தால் எல்லோருக்கும் ஒரு ரோல்மாடலாகவும் விளங்குவார்கள். அறச் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஈடுபடுவார்கள். எதில் ஆர்வத்தோடு ஈடுபட்டாலும் முன்னுக்கு வருவார்கள். பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார்கள்.

மதம், இயக்கம் என்று எதைச் சார்ந்திருந்தாலும் அதில் மிகத் தீவிரமாக ஈடுபடுவார்கள். அதில் இறங்கி பணியாற்றவும் செய்வார்கள். பழைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். இனம் காக்க, தன்மானம் காக்க, சுதந்திரம் காக்க, மொழியைப் பேண என்று பல்வேறு முகங்கள் கொண்டிருப்பார்கள். இரண்டாம் இடமான மகரத்தில் இருந்தால் கொஞ்சம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.

எல்லாவற்றையும் விரைவாகக் கற்றுக் கொண்டு விடுவார்கள்.  இவர்களில் மொழி பெயர்ப்பாளர்களும் உண்டு. அதேசமயம் மதம் சார்ந்த கல்வியையும் கற்பார்கள். அவ்வளவு எளிதாக செலவு செய்ய மாட்டார்கள். தகுதியுடையவர்களாக இருந்தால்தான் செலவு செய்வார்கள். பேச்சே மிடுக்காக இருக்கும். சாதாரணமாகப் பேசினாலே அதட்டுவதுபோல இருக்கும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நிறைய விஷயங்களைச் செய்வார்கள்.  எதையுமே இவர்கள்  பிரமாண்டமாகச் செய்தே பழக்கப்பட்டிருப்பார்கள். கும்ப ராசியான மூன்றாம் இடத்தில் குரு தனித்து இருந்தால் எல்லாவற்றிற்கும் தயங்கியபடி இருப்பார்கள். எல்லாவற்றிற்கும் பயந்தபடி இருப்பார்கள். சகோதர வகையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும். எந்த ஒரு விஷயமும் நீடித்த முயற்சிக்குப் பிறகுதான் இவர்களுக்கு கிட்டும்.

சமூகத்தைக் குறித்து அதிகமாக கவலைப்படுவார்கள். அடிப்படையிலேயே சொத்து சுகங்களுக்கு எவ்வித குறைவும் இருக்காது. மீன ராசியான நான்காம் இடத்தில் குரு அமந்திருந்தால் தாய் வழிச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு அதிகம். எந்த வேலையை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுதான் அடுத்த வேலைக்கு நகருவார்கள். தாய் வழிச் சொந்தங்கள் மிகவும் அனுகூலமாக இருபார்கள்.

விலை உயர்ந்த வாகனங்களை வாங்குவதும் விற்பதுமாக இருப்பார்கள். தானே ஈடுபட்டு ஏதேனும் வித்தையைக் கற்றுக் கொள்வார்கள். ஐந்தாம் இடமான மேஷத்தில் குரு அமர்ந்தால் எதிலுமே ஒரு தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கும். புத்திரகாரகன் ஐந்தாம் இடத்தில் இருந்தால் காரகாபாவ நாஸ்தி ஏற்படுமே, குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுமே என்றால் ஆகாது.

ஏனெனில், லக்னாதிபதியும், சுகாதிபதியும் ஐந்தாம் இடத்தில் அமர்வதால் சத்புத்திரனே பிறப்பான். ஆனால், கொஞ்சம் காலதாமதம் ஆகும். அவ்வளவே.  குழந்தைகள் தைரியத்தோடும் வீரத்தோடும் விவேகத்தோடும் இருப்பார்கள். மரபான விஷயங்களில் ஈடுபாடு காட்டி கற்றுத் தெளிவார்கள். மூதாதையர்களை மிகவும் மதித்து அவர்களின் நினைவாக ஏதேனும் ஸ்தாபனத்தை தொடங்குவார்கள்.

மறந்துபோயும் தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள். ஆறாம் இடமான ரிஷபத்தில் குரு நின்றிருந்தால் உடம்பைப் பாதுகாப்பதில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் இருந்தால்தான் இவர்கள் சுவாரசியமாக வேலை பார்ப்பார்கள். அவ்வப்போது ஏதேனும் வீண்பழியில் சிக்கிக் கொள்வார்கள். ஏழாம்  வீடான மிதுனத்தில் குரு தனித்திருந்தால் திருமணம் செய்வது பற்றிய முடிவைத் தாமதமாக எடுப்பார்கள்.

வாழ்க்கைத் துணை அடிக்கடி சமநிலையை இழப்பார்கள். கூட்டுத் தொழில் செய்யும்போது எச்சரிக்கை தேவை. மிகச் சரியான தூதுவராக இவர்கள் செயல்படுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் சமாதானப்படுத்திப் பேசுவதில் இவர்கள் வல்லவர்களாக விளங்குவார்கள். எட்டாம் இடமான கடகத்தில் குரு அமர்வதால் சிலர் வெளிநாடு வாழ் உரிமை பெற்று அங்கே இருப்பார்கள்.

பெரும்பாலோர் நல்ல மொழியறிவோடு பெரும் பாண்டித்தியம் பெற்று விளங்குவார்கள்.  மறந்துபோயும் தவறான வழிக்கு செல்ல மாட்டார்கள். தானாக நல்லது நடக்கும் என்றுதான் எப்போதும் பேசுவார்கள். அழகும் அறிவும் இணைந்த தோற்றம் இருக்கும். தாய்மாமன் வழியில் மிகவும் அந்தஸ்தோடு இருப்பார்கள். இளைய சகோதர, சகோதரிகள் பெரியளவில் பக்க பலமாக இருப்பார்கள்.

ஒன்பதாம் இடமான சிம்மத்தில் குரு தனித்து நின்றால் தந்தையை விஞ்சுவார். தந்தையாரை எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகமிருக்கும். தந்தையார் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக இருப்பார். இவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபட்டு யாரிடமேனும் மந்திர உபதேசம் பெறுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் உடனடியாக யோசிக்காமல் முடிவெடுப்பார்கள்.

நிறைய பயணங்களை செய்தபடி இருப்பார்கள். எதில் ஈடுபட்டாலும் அதில் நன்றாக முன்னேற்றம் இருந்து கொண்டேயிருக்கும். இவர்கள் வேண்டாமென்றாலும் உயர் பதவிகள் இவர்களைத் தேடிவரும். பத்தாம் இடமான  கன்னி ராசியில் குரு தனித்து நின்றால் கல்லூரிப் பேராசிரியர்பணியாற்றுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்று வருவார்கள். ஏடாகூடமாக ஏதாவது பேசிவிட்டு எல்லோரிடமும் மாட்டிக் கொள்வார்.

ஆர்க்கிடெக்ட், கன்சல்டன்சி,  வெப் டிசைனிங், நகை டிசைனிங் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டுவார்கள். இன்னும் சிலர் பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தையே அமைப்பார்கள். பதினொன்றாம் இடமான துலா ராசியில் குரு அமர்ந்திருந்தால் ஏதேனும் உடல்நிலை பாதிப்புகள் இருந்துகொண்டேயிருக்கும். இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் புகுந்து விளையாடலாம். ஆனால், பேராசை கூடாது.

மூத்த சகோதரர்களால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். எப்போதுமே நண்பர்கள் விஷயத்தில் கவனத்தோடு இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் இடமான விருச்சிகத்தில் குரு அமர்ந்திருந்தால் தூக்கம் சரியாக இருக்காது. பயங்கர செலவாளியாக இருப்பார்கள். பலர் சூட்சும சக்தியோடு தொடர்பு வைத்திருப்பார்கள். பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

பழைய கோயில்களைத் தேடித்தேடி ஓடுவார்கள். அதேபோல பழைய நூல்களையும் பதிப்பிப்பார்கள். குரு எங்கிருந்தாலும் நன்மையே செய்தாலும், சில இடங்களில் பகை, நீசம் பெறும்போது எதிர்மறை பலன்களை தருவார். அம்மாதிரி சமயங்களில் போரில் ஈடுபட்ட பெருமாள் தலத்தை தரிசிப்பது நல்லது. அப்படிப்பட்ட தலமே திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயிலாகும்.

ஈசன் நிகழ்த்திய திரிபுர சம்ஹார காலத்தில் ருத்ரனுக்கு (சிவன்) சரம் (அம்பு) கொடுத்ததால் சரம் தந்த பெருமாள் என்றும், அதுவே சரநாராயண பெருமாள் என்றும் மருவியது. வக்ராசுரனை அழிக்க எப்படி சக்ராயுதம் தேவைப்பட்டதோ, அதுபோல திரிபுரத்தையும் பிய்த்தெறிய மிகக் கூர்மையான சக்தியான சரம் எனும் அம்பாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

இத்தல பெருமாள் உப்பிலியப்பன் ஸ்ரீநிவாசனைப்போல் மார்க்கண்டேய மகரிஷியின் புத்திரியை திருமணம் செய்து கொண்டு நின்ற கோலத்தில் திவ்ய தம்பதிகளாக எழுந்தருளி சேவை சாதிக்கிறார். அருகில் மார்க்கண்டேய மகரிஷியும் வீற்றிருக்கிறார். தேவி தாயார் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலின் மற்றொரு பிரதான சிறப்பம்சம் இங்கு எழுந்தருளியுள்ள சயன நரசிம்மர்தான். தெற்கு நோக்கி சயனித்துள்ளார் இவர். தாயாரும் உடன் எழுந்தருளியுள்ளதால் இந்த நிலையை போக சயனம் என்கின்றனர், இத்தலம், பண்ருட்டியிலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், கடலூரிலிருந்து 27 கி.மீ. தொலைவிலும், உள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)