ஒரு கார்... ஒரு பேய்... ஒரு நயன்தாரா!



-நா.கதிர்வேலன்

‘‘லை ஃப் லைன் ரொம்ப சிறுசுங்க... சிம்பிள்! ‘கடவுளை நம்பு. ஆனா உன் காரையும் பூட்டு’னு ெசால்வாங்க. அதுமாதிரி என்னதான் நம்ம திறமையில் நம்பிக்கை வைச்சாலும், திரைக்கதையில் அவ்வளவு கவனம் ைவக்கணும். ‘டோரா’னு தலைப்பு எனக்கு கிடைச்சதே ரொம்பவும் ஆச்சர்யம். இத்தனை நாள் விட்டு வைச்சிருக்காங்களேனு மனசு குதூகலமாகிவிட்டது.

அதுவும் நயன்தாரா படத்திற்கு கிடைச்சதும் இன்னும் ‘டோரா’வின் இடம் பெரும் அளவுக்கு போயிடுச்சு. த்ரில்லர் படமான இதுக்கு ‘டோரா’னு பெயர் வைச்சதுக்கான காரணத்தைக் கேட்டால், கதையோட சின்ன முடிச்சு அவிழ்ந்துடும். அதனால் ஸாரி! தியேட்டருக்கு வந்தா, இந்தப் பெயர் வைச்சதுக்கான நியாயங்கள் நிச்சயமா புரியும்...’’ அருமையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி. டைரக்டர் சற்குணத்தின் முதல்நிலை சீடர்.

பயப்பட வைக்கிறது சாதாரண வேலையில்லையே..?
இதில் அவசியம் எதிர்பார்க்கிற பயங்கர காட்சிகள் எதுவும் இருக்காது. இப்ப பேய் வரப்போகுதுன்னு நினைக்கிறபோது பேய் வராது. எப்பவும் இதுமாதிரி படங்களில் தவிர்க்க முடியாமல், சில காட்சிகள் வரும். திடீர்னு புறாக்கள் றெக்கைகளை அடிச்சிப் பறக்கும். திடீர்னு ஒரு பெண் எழுந்து வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பார். கழுத்தில் ஒரு கை விழும். பதறியடித்து வியர்த்துப் போய் நாம் பார்த்தால் அவள் கணவர் ‘ஏன் தூக்கம் வரலையா?’ எனக் கேட்டுட்டு அரவணைப்பார்.

அப்படியெல்லாம் உங்களை பயமுறுத்தமாட்டோம். ஒரு கதைக்காக சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினிமாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும். வெறும் த்ரில்லர் படமாக இல்லாமல் இதில் பலதரப்பட்ட உணர்வுகளையும் கொண்டு வந்து காட்ட முடிந்தது. கஷ்டப்படுகிற கேரக்டரின் எமோஷனும் இந்தக் கதையின் முக்கிய அம்சம்.

இதில் நயன்தாரா வந்தது எப்படி?
இதில் ஹீரோவையும், காரையும் சேர்த்து அதில் த்ரில் ஏத்தி கதை ரெடி பண்ணியிருந்தேன். என் குரு சற்குணம் சார்கிட்டே சொன்னதும் ரொம்ப சநதோஷப்பட்டு, ‘நாமளே பண்ணுவோம் ராமசாமி’னு சொல்லிட்டார். இரண்டு நாள் போயிருக்கும். நயன்தாரா மேடத்திற்கு அந்தக் கதையை சரி பண்ணிட முடியுமானு கேட்டார். எழுதிப் பார்த்தால் அம்சமா வந்தது. நயன்தாராவுக்கு சொன்னதும் ‘நிச்சயம் பண்ணலாம் தாஸ்’னு பச்சைக்கொடி காட்டினாங்க.

அதற்குப் பிறகு வேகம் பிடிச்சது பாருங்க, அதுதான் ரொம்ப அழகு. அவரது புகழை மட்டுமே பயன்படுத்தக் கூடாதுனு நினைச்சேன். நம்ம சைடுல உழைப்பு அபரிமிதமாக இருக்கணும்னு தீர்மானித்து உழைச்சேன். அதற்கு மேடத்திலிருந்து எங்க புரடியூசர் வரைக்கும் ஒத்துழைப்பு தந்ததுதான் எனக்கான பெரு மகிழ்ச்சி. நிஜத்தைவிட புனைவு கவனமாகச் செய்யப்பட வேண்டும். பார்வையாளர்களோடு இந்தப் படம் நெருங்கிவிடும் என்று நம்புகிறேன். கதையோடு வாழ்க்கையையும், நிகழ்ச்சிகளையும் சரியானபடி சேர்த்தால் அங்கே நம்மை எப்படிப் பிடிக்காமல் போகும்! கதைதான் உயிரோட்டம். நம்பகத்தன்மைதான் அதில் முக்கியம்.

நயன்தாரா வந்தபிறகு இந்தப் படத்தைப் பற்றிப் பலரும் பேசுகிறார்கள்...
உண்மைதான். படத்தின் பட்ஜெட் சிறியதாகத்தான் அமைந்திருந்தது. கதையும், நயன்தாராவும் தந்த துணிவு தயாரிப்பாளர்களை சந்தோஷமடைய வைத்துவிட்டது. இதில் அவர் நடிப்பதால் இந்தப் படம் பெரிய அளவிற்கு போகிறது. அவரின் ஈடுபாடு சொல்லி மாளாது. கேரவனுக்குக்கூட போகமாட்டார். இன்னிக்கு அவர் லேடி சூப்பர்ஸ்டார். அதை அவர் உணரவேயில்லை. மாலை 5 மணியிலிருந்து விடியற்காலை 5 மணிவரை கூட ஷூட்டிங் நீண்டிருக்கிறது.

நாம முழிச்சிருக்கலாம். கண்ணுக்குக் கீழே கருவளையம் வந்தால்கூட ஒரு கவலையும் இல்லை. ஆனால் அவங்க அப்படியா? ஆனாலும் கவலையேபடாமல் கேரவனுக்குத் திரும்பி ஓய்வு எடுக்காமல், செட்டில மத்தவங்க நடிக்கிறதை பார்த்துக்கிட்டு இருப்பாங்க. இரண்டாவது டேக் எடுக்கிறதுக்குக்கூட சான்ஸ் வைக்க மாட்டாங்க. ரோட்டில படுத்து உருள்கிற மாதிரி ஒரு காட்சி... சொன்னதும் உடனே ரெடியாகிட்டாங்க.

ஆயிரம் பேர் நடந்த இடம். எப்படியிருக்கும்! அதை சரிபண்ணுங்கனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. இந்த எட்டு வருஷத்துல நான் வேற மாதிரிதான் பார்த்திருக்கேன். இவ்வளவு உயரத்திற்கு நயன்தாரா போனதுக்கு இப்பத்தான் காரணம் தெரியுது. நாம் அசராமல் படத்திற்கு உழைக்கும்போது அவங்களோட உழைப்பும் உத்வேகமும் பெரிய டானிக். ஒரு நொடியில் 24 பொய்களைச் சொல்ற சினிமாவில் யதார்த்தத்தைக் காண்பிக்கிறபோது அது உண்மையாகிறது. இந்தக் கதைக்குள் நீங்கள் வந்தால், இதுவரை இல்லாத புது உணர்வை
பெறலாம்.

ஹீரோ...
என்னுடைய கதையில் கார்தான் ஹீரோ. நிறைய சம்பவங்களின் பின்னணியில் ஆரம்ப முடிச்சு நயன்தாராவிடமிருந்து ஆரம்பிக்கிறது. நயன்தாரா ட்ரைலரில் வேக வேகமாக நடந்து வருகிற துரித நடை ட்ரெண்டிங்கில் பின்னுது. காருக்கும் அவங்களுக்கும் சில விஷயங்கள் இருக்கு. தம்பி ராமையாதான் நயனின் அப்பா. இன்னிக்கு ஸ்பெஷலும் அவர்தானே. பின்னியிருக்கார். ஹரிஷ் உத்தமனுக்கும் நல்ல ரோல்.
 
படத்திற்கு கேமராமேன், தினேஷ் கிருஷ்ணன். மியூசிக், விவேக் மெர்வின். இரண்டு பேரையும் எனக்கு சிபாரிசு செய்தது நயன்தாராதான். ‘நல்லாயிருக்கும், உங்களை மீறமாட்டாங்க’னு சொன்னார். படப்பிடிப்புக்கு வரும்போது இந்தக் காட்சி இவ்விதம்தான் படமாகும்னு என் மனசுல கணக்குப் போட்டிருப்பேன். அதற்கு தினேஷ் கூடுதல் சுவாரஸ்யம், அழகு, முக்கியத்துவம் வரும்படி ஏதோ ஒரு மேஜிக் செய்திருப்பார். திகில் படத்திற்கு பின்னணி அமைப்பது கடினமான பணி. விவேக் மெர்வின் இதில் பிரமாதப்படுத்தியிருக்கார். ஒரு அமானுஷ்யப் படத்திற்கு தேவையான அத்தனை விஷயங்களும் உங்களுக்கு ‘டோரா’ தரும்!