ரங்கநாதன் தெரு



-பேராச்சி கண்ணன்

அறிந்த இடம் அறியாத விஷயம்

வெறும் நானூறு மீட்டர் நீளம்தான். ஆனால், பெரியதும் சின்னதுமாக சுமார் நானூறு கடைகள்! அதனால்தான் இந்தியாவின் ‘Most Crowded Street’ என்ற பெயரை ஒரு வரம் போல் தக்க வைத்திருக்கிறது சென்னை, தி.நகர் ரங்கநாதன் தெரு! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு கூட்டம் இங்கு இருந்திருக்குமா? தெரியாது.

ஆனால், 1996ல் இருந்து இந்தத் தெருவை கவனித்து வரும் நண்பர் ஒருவர், ‘‘கூட்டம் இல்லாமல் நான் பார்த்ததேயில்லை. சாதாரண நாட்களில் கூட ஷாப்பிங் செய்தபடியே இருப்பார்கள். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம். நாம் நடக்க அவசியமில்லை. மக்களாகவே நம்மைத் தள்ளித் தள்ளி நகர்த்திவிடுவார்கள்!’’ என்கிறார் ஆச்சரியம் காட்டாமல்.

உஸ்மான் ரோட்டில் மூன்று கேமிராக்கள் கொண்ட அந்தக் கண்காணிப்பு கோபுரத்தின் வளையத்திலிருந்து தொடங்குகிறது ரங்கநாதன் தெரு. கூட்டத்தில் திரியும் பிக்பாக்கெட் திருடர்கள், வழிப்பறி கொள்ளையர்களை கண்காணிக்கும் கேமிராக்கள். முகப்பில் நிற்கும் ஆட்டோக்காரர்கள், வெளியே வரும் மக்களிடம் ‘ஆட்டோ வேணுமா? ஆட்டோவா...’ என ஓயாமல் கேட்டுக் ெகாண்டே சுற்றுகிறார்கள். அவர்கள் அருகே நின்றபடியே விற்பனையை நடத்துகிறார்கள் சிறு வியாபாரிகள். 

‘‘ஹெட்போன் 50 ரூபாய்... 50 ரூபாய்...’’ என கழுத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடுக்கியிருக்கும் ஒரு ட்ரேயை மாட்டியபடி கத்திக் கொண்டேயிருக்கிறார் வியாபாரி ஒருவர். இன்னொருவர், தன் ஒரு கையில் பென்சிலை உயர்த்திப் பிடித்து சிலை போல நிற்கிறார்.  இவர்கள் அருகே டிப் டாப் ஆசாமி ஒருவர் புதுத் துணியோடு வரும் பெண்களை சரியாக அடையாளம் கண்டு, ‘சுடிதார் தைக்கணுமா?

சுடிதார் தைக்கணுமா..?’ என கேட்டுக் கேட்டு பின்தொடர்கிறார். ரங்கநாதன் தெருவின் நடுவில் வரிசையாக மரப்பெட்டியில் சாக்ஸ், கம்மல், பாசி, உள்ளாடை வகையறாக்களை அடுக்கி வைத்து விற்கிறார்கள். இருபக்கமும் முண்டியடிக்கும் கடைகளுக்கு நடுவே கோயிலின் கோபுரம் தெரிகிறது. ‘ரெட்டியபட்டி சுவாமிகள் ஆலயம்!’ அட என அந்தப் பக்கம் சென்று உள்ளே நுழைந்தால் இடதுபக்கம் சின்னதாக விநாயகர் சிலை.

அதையடுத்து, வரிசையாக பெண்கள் ஆடையகங்கள். நைட்டி நூறு ரூபாய், 150 ரூபாய் என ஒவ்வொன்றிலும் ஒட்டி வைத்திருக்கிறார்கள். படியேறி மேலே சென்றால் கருங்கற்களால் அழகாக கட்டப்பட்டிருக்கிறது அந்த ஆலயம். அங்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சிலை முன் தியானத்தில் இருவர் உட்கார்ந்திருக்கிறார்கள். இரண்டாவது தளத்தில் சுவாமிகளின் சிலைகளுக்கு தீபாராதனை நடக்கிறது.

விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் - புதூர் பக்கமுள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் விநாயகரின் அருளால் ஜீவசமாதி அடைந்தவராம் இந்த சுவாமிகள். இவருடைய சீடரான, ‘அருள்சக்தி அன்னை’ என்பவரை வணங்கி நல்வழி அடைந்திருக்கிறார் ரங்கநாதன் தெருவில் வசித்த சாம்பசிவம். பின்னாளில் இந்த சாம்பசிவமும் சித்தராக மாறி ‘மாம்பலம் சுவாமிகள்’ என்று வலம் வந்திருக்கிறார்.

இவர் வாழ்ந்த இந்த வீட்டில்தான் ரெட்டியபட்டி சுவாமிகளின் பக்தர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். ‘‘இது சுவாமிகளின் உத்தரவு. இதற்காக இங்கு கடைகள் விரித்திருந்த பலரும் விட்டுக் கொடுத்தனர். இங்கு வருபவர்களுக்கு எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்...’’ என்கிறார் சுவாமியின் பக்தரும், கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவருமான எஸ்.பி.மூர்த்தி. ஆலயத்தைச் சுற்றிவிட்டு வெளியேறினோம். 

பரப்பி வைத்திருக்கும் வாட்ச் கடை முன் இரண்டு விடலைப் பையன்கள். அதில் ஒருவன் தன் ‘ஆளுக்கு’ பிடித்த வாட்ச்சை அலசி எடுத்துக் கொண்டிருந்தான். எல்லா வாட்ச்சுகளும் தலா நூறு ரூபாய்தான். டிசைன்கள் கண்ணைப் பறிக்கின்றன! இதைக் கடந்தால் டெய்லர் கடைகள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல நீள்கின்றன. ஒரு சந்தில் மட்டும் 35 கடைகள்! ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைத்துத் தரப்படுமாம். ஒரு செட் தைக்க ரூ.320 பெறுகிறார்கள்.

இவர்களுக்காகவே வெளியில் பல பெண்கள் மார்க்கெட்டிங் செய்கிறார்கள். ஒரு வாடிக்கையாளரைப் பிடித்தால் ரூ.50 கமிஷன். ‘சரவணா செல்வரத்னம்’, ‘சரவணா ஸ்டோர்ஸ்’, ‘ரத்னா ஸ்டோர்ஸ்’, ‘ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்’ என இத்தெருவிலிருக்கும் அனைத்து பெரிய கடைகளின் முன்னாலும் மினி உணவகங்கள் இயங்குகின்றன.

சமோசா, பொரித்த காலிஃப்ளவர், வடை ஐட்டங்கள், ஸ்வீட் கார்ன், பிளாஸ்டிக் கப்பில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பருகுவதற்கு ஜூஸ் என அத்தனையும் கிடைக்கின்றன. இத்தெருவின் முக்கிய விசேஷம், கவரிங் நகைக்கடைகள். பிறகு காலணிகள். ‘நூறு ரூபாய்... நூறு ரூபாய்’ என  பாய் ஒருவர் வாசலில் நின்றபடி உரக்க அறிவிக்கிறார். தொடர்ந்து சின்னச் சின்ன துணிக் கடைகள்.

உள்ளாடைகள், குழந்தை டிரஸ்கள், நைட்டிகள், சல்வார், சுடிதார்கள் என வெரைட்டி காட்டுகிறார்கள். ‘லெக்கிங்ஸ் 1 + 1 Rs 150’ என போர்டுகள் ஆச்சரியம் கூட்டுகின்றன. இடையிடையே சில நகைக் கடைகளும் பளிச்சிடுகின்றன. அடுத்து, வளையல்கள் அடங்கிய பெரிய கடை. உள்ளே பெண்களின் கூட்டம். அந்தக் கடைக்கு எதிரே, ‘மூணு மொழம் 20 ரூபா... குண்டுமல்லி...’ என முழம் போட்டுக் காட்டுகிறார் பெண்மணி ஒருவர்.

கொஞ்சம் தள்ளி சவுரி முடிகளை கையில் சீவியபடி ஒரு பெண் விற்பனையில் இருக்கிறார். நிறைவாக, ஜெயச்சந்திரனும், சரவண ஸ்டோர்ஸும் எழுந்து நிற்கின்றன. இங்கிருந்து இடப்பக்கம் திரும்பினால் தி.நகர் காய்கறி மார்க்கெட். நேரே, ரயில்வே ஸ்டேஷன். இதுதான் ரங்கநாதன் தெரு. மின்சார ரயில் நிறுத்தமும் பஸ் ஸ்டாண்டும் நடை தூரத்தில் இருக்கின்றன என்பது இந்தத் தெருவின் மிகப்பெரிய ப்ளஸ். தவிர தி.நகரில் அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அனைத்தும் இந்த ஒரே தெருவில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இதனாலேயே இது இந்தியாவின் ‘Most Crowded Street!’      

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

பெயர்க் காரணம்?

ஆங்கிலேயர் காலத்தில், ‘துபில்’ ரங்கசாமி ஐயங்கார் முதல் முதலாக இத் தெருவில் குடியேறி இருக்கிறார். இவர், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் சப்-கலெக்டர். பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தூப்புல் கிராமம். அதனால், ஊர் பெயரை அடைமொழியாக சேர்க்க, அது பிரிட்டிஷார் உச்சரிப்பில் ‘துபில்’ என்றானது. அன்றைய நகராட்சி அதிகாரிகள் இத்தெருவுக்கு இவர் பெயரை வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அதைத் தடுத்த ரங்கசாமி ஐயங்கார், ‘ரங்கம் ரங்கநாதரின் பெயரைச் சூட்டுங்கள்’ என்று கட்டளையிட்டிருக்கிறார். அந்த நொடியில் பிறந்தது, ‘ரங்கநாதன் தெரு!’

ரங்கா டேட்டா

* நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் இங்கு வந்து செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் இது லட்சத்தைத் தாண்டும்.
* காலை 10 மணியிலிருந்து சூடுபிடிக்கும் விற்பனை இரவு பத்து மணி வரை தணியாமல் கொதிக்கிறது. 
* இங்குள்ள ‘சரவணா ஸ்டோர்ஸ்’ மட்டும் வருடத்துக்கு சுமார் ரூ.200 கோடி டர்ன் ஓவர் செய்வதாக 2008ல் வெளியான ‘India’s store wars’ குறிப்பிடுகிறது. இப்போது இன்னும் கூடியிருக்கும். ஆக, அனைத்துக் கடைகளையும் சேர்த்தால் எப்படியும் வருடத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் தெருவில் மட்டுமே டர்ன் ஓவர் ஆகும் என்கிறார்கள். 
* 1970ம் வருடம் இங்கே 240 சிறுகடைகளும், 75 கடைகளும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அப்போது ரங்கநாதன் தெருவில் கடை விரித்திருந்த ஏழுமலை.
* பார்க்கிங் வசதியும் பொதுக்கழிப்பிடமும் இங்கில்லாதது பெரும் பிரச்னையாக இருக்கிறது.

இங்க கடைகளே இருக்கக் கூடாது!

* ‘‘ரங்கநாதன் தெருவில் 99% கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டவை’’ என்கிறார் தி.நகர் குடியிருப்பு நலச் சங்கத்தின் செயலாளரான கண்ணன். இந்தக் கட்டிடங்களில் தீயணைப்புக்கான பாதுகாப்பு வசதிகள் இல்லை என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் இவரே. கண்ணனிடம் பேசினோம்.

* 1973 முதல் இங்க குடியிருக்கேன். அப்ப உஸ்மான் ரோட்ல நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடியிருக்கேன். சுத்திலும் மரமா இருக்கும். நிறைய நடிகர், நடிகைகளும் இங்க இருந்தாங்க. அவங்கள பார்க்க வெளியூர்லேந்து ரசிகர்கள் வருவாங்க. ஒருமுறை ஆந்திராவுல இருந்து வந்த ஒருத்தர் ‘தேவி இல்லு எக்கட உந்தி’னு கேட்டது இப்பவும் நினைவுல இருக்கு. 

* மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கிறதால அப்பவும் இங்க கடைகள் இருந்தது. எல்லாம் சிறு வியாபாரிங்கதான். பழங்கள், காய்கறிகள், துணிகள்னு விப்பாங்க. எனக்குத் ெதரிஞ்சு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் பெரிய பெரிய கட்டிடங்கள் இங்க முளைச்சது.

* அரசு விதிப்படி 9 முதல் 12 மீட்டர் அகலம் உள்ள தெருக்கள் குடியிருப்புகளா மட்டும்தான் இருக்கணும். 12 முதல் 15 மீட்டர் அகலமுள்ள தெருக்கள்ல குடியிருப்பும், கடைகளும் கலந்திருக்கலாம். 18 மீட்டருக்கு மேல உள்ள தெருக்கள்லதான் கடைகள் அமைக்கணும். ரங்கநாதன் தெருவோட அகலம் 10 மீட்டர்தான். இங்க கடைகள் அமைக்கவே கூடாது. ஆனா, இன்னைக்கு வணிக வளாகத் தெருவா மாறிடுச்சு. இந்தக் கட்டிடங்கள்ல தீயணைப்பு பாதுகாப்புனு எதுவும் இல்லை. அப்புறம், போர் போட்டும், கார்ப்பரேஷன் நீரையும் நிறைய உறிஞ்சிடறாங்க. இதனால இங்க வசிக்கிற மக்களுக்கு இப்ப தண்ணீர் இல்ல.