பணம் சம்பாதிக்க சாமியாராகலாமா?
-ரீடர்ஸ் வாய்ஸ்
கார்ப்பரேட் சாமியார்களின் வரலாற்றை விவரித்து பலருக்கும் சாமியாராகி சம்பாதிக்கலாம் என ஆவலை ஏற்படுத்திவிட்டீர்களே! கார்ப்பரேட் சாமியார்கள் ஏமாற்றுவதை கட்டுரையில் துல்லியமாக விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளீர்கள். அரசியல்வாதிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்குவது போல சாமியார்கள் யோகா, தியானம் கொடுத்து காசு அள்ளுகிறார்கள். வேளாளர்களின் எழுச்சி, சைவ, வைணவபக்தி இயக்கங்கள், மதம் - கடவுள் என விளக்கங்களைத் தந்து உயர்ந்த மலையைச் சுருக்கி உள்ளங்கையில் வைத்து விட்டீர்கள். - ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். பி.மாணிக்கவாசகம், கும்பகோணம். ஆர்.கே. லிங்கேசன், சென்னை - 4. ஆ. லோகநாதன், சென்னை - 16. கல்யாணசுந்தரம், மதுரை. மனோகர், கோவை. த.சத்தியநாராயணன், சென்னை - 72.
 தமிழகத்தின் தலைநகருக்கு பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையைப் பற்றிய அபூர்வ தகவல்கள் ஆச்சரியப்படுத்தின. ஜெயலலிதா சமாதி, ஜல்லிக்கட்டு போராட்டம் இவை இரண்டாலும் கவனத்தை ஈர்த்த மெரினா பீச்சைப் பற்றி அரிதான தகவல்களைக் கொடுத்து அசத்திவிட்டீர்கள். - இரா.கல்யாணசுந்தரம், அனுப்பானடி. ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம். த.சத்தியநாராயணன், சென்னை. ஆ.லோகநாதன், சென்னை - 16.
உதவாவிட்டாலும், உபத்திரவம் தரும் புராஸ்டேட் சுரப்பி பற்றிய விளக்கம், முதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. - மனோகர், கோவை - 14.
முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், யூட்யூப் போன்றவற்றில் மனதை பறிகொடுப்பவர்களின் மூளை சரிவர வேலை செய்யாது என்பதை பொட்டில் அறைந்து விளக்கியிருக்கிறீர்கள். கீர்த்தனா கொடுத்துள்ள அனைத்து கருத்துகளும் பெற்றோர்களுக்கு பயன்தரும். - இராம. கண்ணன், திருநெல்வேலி. ஏ.எஸ். நடராஜன், சிதம்பரம்.
இந்தியாவின் முதல் பார் டெண்டர் அமி ஸ்ரஃபின் கண்கள் கனவில் விரிகின்றன என்றால் எங்கள் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன. - ஆர்.சண்முகராஜ், சென்னை - 19.
நீதியை நிலைநாட்டவும், அநீதியை எதிர்க்கவும் தைரியமாக போராடி வெற்றிகண்ட அந்தக் கால பிரபல வழக்குகளையும் வழக்கறிஞர்களையும் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள தமிழ்நாட்டு நீதிமான்கள் வழிகாட்டுகிறது. - எஸ்.பூதலிங்கம், நாகர்கோவில்.
‘ஏங்க’ சிறுகதை காலையில் அமானுஷ்யமாகத் தொடங்கி பயணம், ஆபீஸ் என திரும்ப இரவில் மந்திரச்சொல்லாகவே மாறி அசர வைத்துவிட்டது. யுவகிருஷ்ணாவின் கதைக்கு ஜெ.வின் ஓவியம் பிளஸ் பாயிண்ட். - மயிலை கோபி, சென்னை - 4.
சர்ஃபிங் போர்ட் விளையாட்டை விவேகமாக பயன்படுத்தலாம் என்ற செய்தி புல்லரிக்க வைத்தது. - சந்தானகோபால கிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.
தானாகச் சுழலும் கட்டிடம், கட்டிடக்கலையின் உச்சம். வீடின்றி தவிப்போருக்கு சில வீடுகள் கட்டிக்கொடுத்தால் கிடைக்கும் புண்ணியம் வானத்தின் எல்லையைத் தாண்டும். - மனோகர், கோவை.
|