தாகூர் வழியே உலகைப் பார்க்கும் கிராமத்துப் பெண்!



-பேராச்சி கண்ணன்

சூர்யகலாவைப் பார்க்கவே அவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் ‘கீதாஞ்சலி’ கவிதைகளின் தமிழ் வடிவத்தை வரி விடாமல் சொல்கிறார். அதில் ஏதேனும் ஒரு வரிக்கு அர்த்தம் கேட்டாலும் நிதானமாக விளக்குகிறார். மொத்தமுள்ள 103 கவிதைகளில் எந்த எண்ணை குறிப்பிட்டாலும் அந்த எண்ணுக்குரிய கவிதையை சட்டென்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார்.

இதெல்லாம் ஒரு விஷயமா? கண்டிப்பாக. ஏனெனில் சூர்யகலா பார்வையற்றவர்! ‘‘ஆங்கிலத்துல பிஏ முடிச்சுட்டு பிஎட் பண்ணிருக்கேன். சொந்த ஊர் குடியாத்தம் பக்கம் செம்பேடு கிராமம். பத்து வயசுல அம்மை நோய் என்னை தாக்குச்சு. அப்ப டைபாய்டும் வந்தது. இதனால பார்வை பாதிக்கப்பட்டது. ரொம்ப கஷ்டப்பட்டேன். சட்டுனு உலகமே இருட்டானதால ஒண்ணும் புரியாம தவிச்சேன்...’’ வலிகளைத் தாங்கித் தாங்கி அதிலிருந்து கடந்து வந்திருப்பதற்கான அடையாளமாக சலனமின்றி ஒரு தகவலாக இதை பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறார் சூர்யகலா.

‘‘எங்கம்மா குப்பம்மாதான் கான்வென்ட்ல சேர்த்து என்னை படிக்க வைச்சாங்க. அதுக்காக அவங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்ல. என்னால படிக்க முடியாது. யாராவது படிச்சுக் காட்டணும். அதை என் மனசுல பதிய வைச்சுப்பேன். தேர்வு எழுதறப்ப என் சார்பா வேற யாராவது எழுதுவாங்க. அவங்க பக்கத்துல உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்வேன்.

அதைக் கேட்டுக் கேட்டு அவங்க எழுதுவாங்க. இப்படித்தான் நான் படிச்சு பாஸானேன்...’’ என்று சொல்லும் சூர்யகலாவுக்கு தமிழ், ஆங்கிலம், கன்னடம் உட்பட நான்கு மொழிகள் தெரியுமாம். ஆரம்பத்தில் உறவினர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளாகியிருக்கிறார். அதையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டே முன்னேறியிருக்கிறார். ‘‘படிப்போட கம்ப்யூட்டர் கோர்ஸும் முடிச்சதால நிறைய இடங்கள்ல வேலை செஞ்சேன். அப்படி சென்னைல வேலை பார்க்கிறப்ப மீரா மேடத்தை சந்திச்சேன்.

இவங்க எழுத்தாளர் நா.பார்த்தசாரதியோட மகள். எனக்கு ‘கீதாஞ்சலி’ கவிதைகளை சொல்லித் தந்தது இவங்கதான். என்ன சொல்ல... ‘கீதாஞ்சலி’ கவிதைகள் எல்லாமே அற்புதம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. 40 மணி நேரத்துல முழுமையா மனப்பாடம் செஞ்சுட்டேன். ஒவ்வொரு கவிதையும் ஒன்றரை பக்கம் இருக்கும்னு நினைக்கறேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை ஆறு அல்லது எட்டு கவிதைகளுக்காக ஒதுக்கினேன்.

சாதனையா இதை நிகழ்த்தணும்னு எல்லாம் முதல்ல நினைக்கலை. ஆர்வத்துல படிச்சதுதான். ஆனா, ரெண்டே மாசத்துல எப்படிக் கேட்டாலும் சொல்ற அளவுக்கு தயாராகிட்டேன். இதை ஒரு சாதனை நிகழ்வா கொண்டு போனது ‘பார்வையற்றோருக்கான ஒளி இந்தியா அறக்கட்டளை’தான். அவங்களுக்கு என் நன்றி...’’ என நெகிழும் சூர்யகலாவுக்கு ஐஏஎஸ் ஆவது லட்சியமாம். ‘‘கஷ்டப்படற குடும்பப் பின்னணியைச்  சேர்ந்தவதான் நான். அதனாலயே ஐஏஎஸ் ஆகி ஏழை மக்களுக்காக உழைக்கணும்னு விரும்பறேன். இப்ப அதுக்காக தயாராகிட்டு இருக்கேன்..!’’    

படங்கள்: ஆர்.சி.எஸ்.