விருச்சிக லக்னம் - செவ்வாய் - கேது



கிரகங்கள் தரும் யோகங்கள் - 80

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நிஜ கிரகமான செவ்வாயோடு நிழல் கிரகமான கேது சேரும்போது ஜாதகம் பெரும் பலம் பெறும். செவ்வாய் குருவெனில் கேதுவே அதன் சீடன். அதனால், ஒன்றின் சொல்லை ஒன்று செவிமடுத்து நடக்கும். எப்படிப்பட்ட பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெளியே வருவர். பொதுவாக ஒரு கிரகத்தோடு ராகுவோ அல்லது கேதுவோ சேருவது நல்லதில்லை. ஆனால், இந்தச் சேர்க்கை மட்டும் விதிவிலக்கு. நினைத்ததை சாதிக்க வைக்கும் அமைப்பு.

சமூக அநியாயம், அறச் சீற்றம் என்று தங்களின் கோபங்களை வெளிப்படுத்துவார்கள். எல்லையில் தீவிரவாதிகள் அட்டகாசமெனில் இவர்கள் இங்கு கொதிப்பார்கள். கொடிநாள், சுதந்திரதினத்தின் போதெல்லாம் எழுச்சியுணர்வோடு விழாக்களில் கலந்து கொள்வார்கள். இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கம் எனில் பட்டாசு வெடித்து கொண்டாடும் தேசபக்தர்களாக இருப்பார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். அதுவே செவ்வாயும், கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் நின்ற பலன்களை கீழே காண்போம் வாருங்கள். லக்னத்திலேயே செவ்வாயும் கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் நுணுக்கமான புத்தியோடும், தீட்சண்யம் பொருந்திய முகப் பொலிவோடும் இருப்பார்கள். எதையும் ஆராயும் திறனும், எதற்கும் அஞ்சாத தைரியத்தோடும் விளங்குவார்கள்.

இவர்களில் பலர் மந்திரமறிந்த மந்திரவாதிகளாக வளைய வருவார்கள். சித்த மருந்தும் தயாரிப்பார்கள். தேச பக்தி. புரட்சி இயக்கம், கட்சிக்கு தலைமை தாங்கும் மாண்பும், வழி நடத்திச் செல்லும் பண்பும் நிறைந்தவராக இருப்பார்கள். காடு, மலை என்று சஞ்சரிப்பவராக இருப்பர். முக்கியமாக பாம்பு பிடிக்கும் கலையில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு ஆறு விரல் அமைந்து அழகூட்டும்.

இரண்டாம் இடமான தனுசு ராசியில் செவ்வாயும் கேதுவும் இணைவு பெற்றிருந்தால், அன்னிய மொழிகளில் மிகுந்த பாண்டித்தியத்தோடு திகழ்வார்கள். மாறுகண் அமைப்பு காணப்படும். மறதி, ஹைப்பர் ஆக்டிவிட்டியோடு குழந்தைகள் இருப்பார்கள். வேகமாகப் பேசுவார்கள். தனுசு ராசியான குருவின் வீட்டில் இவ்விரு கிரகங்கள் இருப்பதால் புதைபொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு பழைய பொருட்களை சேர்த்தபடி இருப்பார்கள். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு முன்னுக்குப்பின் முரணான முடிவுகளையும் எடுப்பார்கள்.

மூன்றாம் இடமான மகரத்தில் இவ்விரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தால் தைரியமாக செயல்படுவார்கள். பெரிய பதவிகள், பொறுப்பு நிறைந்த நிர்வாகத் தன்மை, வீடு, மனை சொத்துசேர்க்கை என்று வாழ்க்கை நகரும். மேலும் கதை, கவிதை, போராளிகளின் சுயசரிதை போன்றவற்றை விரும்பிப் படிப்பார்கள். இளைய சகோதரங்களுக்காக எதையும் செய்வார்கள். மிதமிஞ்சிய பாசத்தோடு இருப்பார்கள்.

சவால்களை வரவேற்று கங்கணம் கட்டிக் கொண்டு எடுத்த முயற்சியில் வெற்றி பெறும் வரை போராடுவார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெரும் விவசாயிகளாகவும், பண்ணை வீடு கட்டிக் கொண்டு ஜமீன்தார்களை நினைவூட்டும் வாழ்க்கையை எப்போதும் வாழ்வார்கள். நான்காம் இடமான கும்ப ராசியில் செவ்வாயும் கேதுவும் சேர்க்கையோடிருந்தால் காடு, மலை, சோலைகளில் சஞ்சரிப்பதிலும் வாழ்வதிலும் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

செட்டிநாடு மற்றும் கேரளிய பாணி வீடுகளைக் கட்டுவார்கள். இவர்களின் தாயார் சாஸ்திர, சம்பிரதாயங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். எதையுமே முகத்திற்கு நேராகச் சொல்லி விடுவார்கள். ஒருவரை ஒதுக்கி தள்ளி வைத்துவிட்டால் விட்டதுதான். மீண்டும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஜீப், புல்லட் போன்ற  வாகனங்களையே விரும்பி ஓட்டுவார்கள். எதைப் பார்த்தாலும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். இது எப்படி உருவானது? அது எப்படி இயங்குகிறது? என்று சதா சிந்தித்தபடி இருப்பார்கள்.

ஐந்தாம் இடமான மீன ராசியில் இவ்விருவரும் சேர்ந்திருப்பின் அவசரக் குடுக்கையாக இருப்பார்கள். தாய்மாமனோடு பகைமை உணர்வு மிகுந்திருக்கும். கலகம் செய்பவர்களாக இருப்பார்கள். சிறியதாக பழி வாங்கும் குணமிருக்கும். கனவுத் தொல்லை, பிள்ளைகளோடு ஒத்துப்போக முடியாத நிலை, முக்கிய நிகழ்வுகளின்போது குடும்பத்தில் இல்லாமல் போகும் சூழ்நிலையெல்லாம் ஏற்படும். வழக்கிட்டு பூர்வீக சொத்தை மீட்டெடுப்பார்கள்.

குறி சொல்லக்கூடிய உள்ளுணர்வு இருக்கும். அவ்வப்போது ஏற்படும் வயிற்றுவலியால் அவஸ்தைப்படுவார்கள். ஆறாம் இடமான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெறுகிறார். இங்கு கேது இவரோடு இணைகிறார். தன்னைத்தானே மிகைப்படுத்திக் கொள்பவர்களாக இருப்பார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை தெரியாமல் பேசி சிக்கிக் கொள்வார்கள். சகோதரங்களோடும் ஊராரோடும் ஒத்துப்போக முடியாத நிலைமையில் உழல்வார்கள். சின்னஞ்சிறு நெருப்புக் காயங்கள் பட்டபடி இருக்கும்.

மிகச் சிறந்த விமர்சகர்களாக விளங்குவார்கள். பெரும்பாலும் எதிர்மறை கருத்துகளையே முன் வைப்பார்கள். எடுத்த வழக்கில் வெற்றி பெறுவார்கள். சொத்துக்கடன் இருந்து தொல்லை கொடுத்துக் கொண்டேயிருக்கும். ஏழாமிடமான ரிஷபத்தில் செவ்வாயும் கேதுவும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பின் நவீனத்துவம் நிறைந்த சிந்தனைகள் வெளிப்படும். அஸ்ட்ரானமி, ஜோதிடம், வழக்கறிஞர் துறைகளில் ஈடுபட்டுச் சாதிப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவார்கள்.

தோஷம் பார்த்துச் சேர்த்தால் சந்தோஷம் நிலைக்கும். சிலருக்கு காதல் திருமணமே அமையும். எட்டாமிடமான மிதுன ராசியில் செவ்வாயும் கேதுவும் இணைந்திருப்பின் எந்தவொரு காரியமும் முதல் முயற்சியில் முடிக்க முடியாமல் போகும். பெரும் பிரயாணப் பிரியர்களாக இருப்பார்கள். இவர்களின் திருமணத்தின்போது ஜாதகம் பார்க்கும்போது வாழ்க்கைத் துணையின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்துச் சேர்ப்பது நல்லது.

இல்லையெனில் நோயுற்ற வாழ்க்கைத்துணையே அமையும். தொழிலிலும், வியாபாரத்திலும் கூட ஏதேனுமொரு தடைகள் இருந்தபடியிருக்கும். இவர்கள் சொந்த பெயரில் வீடு, வாகனங்களை வைத்துக் கொள்ளாமலிருப்பது நல்லது. பொதுவாகவே, இவர்கள் பொருட்களைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொள்வது நல்லது. களவுபோக வாய்ப்பிருக்கிறது. மத்திம வயதில் சகோதர, சகோதரி இழப்பு அல்லது பகை வந்து நீங்கும்.

ஒன்பதாம் இடமான கடக ராசியில் செவ்வாய் நீசமாகிறார். கூடவே கேதுவும் இணைகிறார். எனவே, எல்லா முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராக மாறிப்போகும். எப்போதும் அலுப்பும் சலிப்புணர்வுமே இவர்களிடத்தில் மேலோங்கியிருக்கும். ஏதேனுமொரு ஆரோக்கிய குறைபாடு இருந்தபடி இருக்கும். சேமிக்க முடியாத அளவுக்கு செலவுகள் துரத்தும்.

நிறைய பெரிய மனிதர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால், எதையும் காசாக்கத் தெரியாமல் தவிப்பார்கள். பத்தாம் இடமான சிம்ம ராசிக்குள் செவ்வாயும் கேதுவும் இணைந்திருந்தால் அறுவை சிகிச்சை நிபுணராகவும், குறிப்பாக எலும்பு, மூட்டுப் பிரிவு மருத்துவத்தில் தலைசிறந்தவர்களாக சாதிப்பார்கள். விவசாயம், எலெக்ட்ரிக்கல் ஷாப், பெயின்டர், மருந்துக் கடை போன்ற தொழிலிலும் ஈடுபடுவர். ராணுவம், தேசிய பாதுகாப்புப் படையிலும் பணிபுரிவார்கள்.

பதினோராம் இடமான கன்னி ராசியில் செவ்வாயும் கேதுவும் அமர்ந்திருந்தால் எதையும் சாதிக்கும் திறனோடு இருப்பார்கள். சமூகத்தில் தங்களுக்கென்று தனித்த அங்கீகாரமும் கௌரவமும் பெற்றிருப்பார்கள். மூத்த சகோதர, சகோதரிகளோடு ஒற்றுமை பாராட்டி வாழ்வார்கள். பொதுவாகவே எல்லோருடைய அன்பும், ஆதரவும் இவருக்குண்டு. பன்னிரெண்டாம் இடமான துலாம் ராசியில் இவ்விரு கிரகங்கள் இணைந்திருப்பின் அதிகம் செலவு செய்பவர்களாக இருப்பார்கள்.

சரியான தூக்கம் வராது அவஸ்தைப்படுவார்கள். எப்போதும் ஆழ்ந்து எதையோ சிந்தித்தபடி வெறித்துக் கிடப்பார்கள். பார்ப்பவர்கள் இவர்கள் எதையோ இழந்து விட்டதைப்போல் நினைப்பார்கள். சகோதரங்களுக்குள் அவ்வப்போது ஏதேனும் மோதல்போக்கு இருந்தபடி இருக்கும். தியானத்தில் ஆழ்ந்து போவார்கள். மெல்லிய துறவற சிந்தனை இருந்தபடி இருக்கும்.

செவ்வாய்-கேது சேர்க்கை பொதுவாகவே பெரும் பிரச்னைகளை உண்டாக்காது. ஆனாலும், கிரகங்கள் நீசம், பகை பெறும்போது எதிர்மறை பலன்களை அளிக்கும். எனவே, நேர்மறை பலன்களை பெறுவதற்கு திருப்போரூர் தலத்தில் வாழ்ந்த மகானான சிதம்பர சுவாமிகள் பிரதிஷ்டை செய்த யந்திரத்தையும், அவரின் திருவுருவச் சிலையையும் வணங்கி வாருங்கள்.

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில் 42வது கிலோமீட்டரில் உள்ளது, திருப்போரூர். பனங்காடாய்க் கிடந்த இப்பகுதியில், பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தவஞானியாய் விளங்கிய சிதம்பர சுவாமிகளால் இங்கே ஒரு முருகன் ஆலயமும், திருக்குளமும் அமைக்கப்பட்டது. திருப்போரூர் சந்நிதி முறை எனும் 726 பாடல்களை இங்கு அருளும் கந்தசாமிப் பெருமானின் மீது அவர் பாடியுள்ளார்.

ஆலயத்திற்குச் செல்லும் முன் வள்ளலார் ஓடை என்றும், சரவணப் பொய்கை என்றும் அழைக்கப்படும் திருக்குளம் மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறது. இத்திருக்குளம் முருகனின் அருளைப் போல என்றுமே வற்றுவதில்லையாம். இதைத்தவிர பிரணவாம்ருதம் எனும் தீர்த்தம் இத்தல பிரணவ மலையிலும், வேலாயுத தீர்த்தம் எனும் தீர்த்தம் கண்ணுவர் பேட்டையில் உள்ள சிதம்பர சுவாமிகளின் திருமடத்தின் வடக்கிலும் உள்ளது.

கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் கந்தசுவாமி, பனை மரத்தாலான சுயம்பு மூர்த்தமாக காட்சி தருகிறார். கருவறை பிராகாரத்தை வலம் வரும் போது கோஷ்ட தெய்வங்களையும், உற்சவ விக்ரகங்களையும் தரிசிக்கிறோம். பிராகார வலம் முடியும் இடத்தில் சிதம்பர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட யந்திரம் உள்ள சந்நதி உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இதில் சகல தேவதைகளும் வாசம் புரிவதாக ஐதீகம். இந்த யந்திரம் ஆமை வடிவ பீடத்தில் எட்டு யானைகள், எட்டு நாகங்கள், கணங்கள் போன்றோரால் தாங்கப்படும் பெருமை உடையது. மூல மூர்த்திக்குச் சமமாக இந்த யந்திரத்திற்கும் தினசரி பூஜைகள் உண்டு. கந்தசஷ்டி ஆறு நாட்களும் விசேஷமாக வழிபடப்படும் இந்த சந்நதியை தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். அதன் அருகில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி அருள்கிறார். இத்தலத்தை தரிசிக்க கிரகங்களின் சக்தி பெருகும் என்பது நிச்சயம்.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்