விருச்சிகம்: செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 77

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

அனல் கிரகமான செவ்வாயும் காவிய கிரகமான சுக்கிரனும் சேர்ந்திருந்தால் பிருகு மங்கள யோகம் என்று நூல்கள் சொல்கின்றன. மேலும், 4, 7, 10ம் இடங்களில் இருந்தால் எல்லா வளங்களும் பூரணமாக கிடைக்கும். உணர்ச்சி வயப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களை அடக்குவதே பெரிய சவாலாக இருக்கும். திருமணம் செய்யும்போது எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துத்தான் செய்ய வேண்டும். அழகும் வேகமும் கலந்த கலவை என்பதால் ரியல் எஸ்டேட் துறையில் சிறு சிறு நகர்களை நியமிப்பார்கள்.

தன் சொந்த பந்தங்களுக்கு எல்லாம் உதவுவார்கள். இவர்கள் எப்போதுமே கூடா நட்புகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், செவ்வாயின் உணர்ச்சிவசப்படலை சுக்கிரன் சிற்றின்ப நாட்டமாக மாற்ற முயற்சிப்பார். இவர்கள் தப்பித்தவறிக் கூட தவறான பாதைகளில் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது. முக்கியமாக வாழ்க்கைத் துணை சரியாக அமையவில்லையெனில் வாழ்க்கையே போராட்டமாகி விடும். மனம் வக்கிர எண்ணங்களால் ஆட்கொள்ள நேரிடும்.

மேலே சொன்னவை யாவும் விருச்சிக லக்னத்தின் பொதுவான பலன்களாகும். இப்போது லக்னாதிபதியான செவ்வாயும் சுக்கிரனும் ஒவ்வொரு ராசியிலும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா. விருச்சிக லக்னமான ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான செவ்வாயோடு சுக்கிரன் சேர்ந்திருப்பதால் இயல்பாகவே வசீகரத் தோற்றத்தோடு இருப்பார்கள். இவர்களைப்போலவே இவர்கள் வாரிசுகளும் விளங்குவார்கள். பூர்வீகச் சொத்தை விட்டுக்கொடுக்கும் அளவுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

சிறுவயதிலேயே வாழ்க்கைப் பாடத்தை படிக்கத் தொடங்கி விடுவார்கள். பலமொழிகளை அறிந்த பண்டிதர்களாகவும் விளங்குவார்கள். தலைமை தாங்கும் பண்பு மிகுந்திருக்கும். ஒரு குழுவையே வழிநடத்தும் திறமையோடு இருப்பார்கள். நில அளவையாளர், வி.ஏ.ஓ. போன்ற அரசுத்துறையில் வேலை அமையும். தனுசு ராசியான இரண்டாம் இடத்தில் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் சில வித்தியாசமான பலன்களை ஏற்படுத்தும்.

கணவனா, மனைவியா என்கிற போட்டியை ஏற்படுத்தும். தான் சொல்வதையே சரி என்று வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். ஏதேனும் ஒரு நிழல் யுத்தம் இருந்தபடி இருக்கும். ஆனால், பாட்டனை மிகவும் பிடிக்கும். இவர்களுக்கு தோல் கருவிகள் வாசிப்பதில் மிகவும் ஈடுபாடுண்டு. தாவரவியல், வனவியல் கல்வியில் சேர்ந்து வித்தியாசமாக வருவதற்கு முயற்சிப்பார்கள். பத்தாம் வகுப்பு வரையிலும் சுமாராகப் படித்த இவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரும்போது வெளுத்து வாங்குவார்கள்.

இனிப்பும், புளிப்பும் கலந்த உணவுச் சேர்க்கை மிகவும் பிடிக்கும். ரசமோ, சாம்பாரோ அடிமண்டியை கலக்கி பிசைந்து சாப்பிடவே விரும்புவார்கள். மகர ராசியான மூன்றாம் இடத்தில் செவ்வாயோடு சுக்கிரன் உட்காரும்போது படிப்பு கொஞ்சம் சுமாராக இருக்கும். காதில் ஏதேனும் இரைச்சல் இருந்தபடியே இருக்கும். வீர்யத்தைவிட காரியம்தான் பெரியது என்று நினைத்து காரியமாற்றும் திறமையும் உண்டு.

பழைய ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் பத்திரப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் திக்கிப் பேசிய பின்பு சரளமாக பேசுவார்கள். எதையுமே மிகைப்படுத்தியே பேசுவார்கள். எதற்குமே நேரடியான பதில்கள் வராது. குடும்பத்தை விட்டு அன்னிய தேசத்தில் வசிப்பவர்களாகவும் இருப்பார்கள். கும்ப ராசியான நான்காம் இடத்தில் செவ்வாயோடு சுக்கிரன் அமரும்போது முற்றிலும் தாயாரின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.

தாயாரைத் தாண்டி யோசிக்கத் தொடங்க வேண்டும். இது தவிர சரியான ஜாதகத்தை பார்த்துச் சேர்க்கவில்லையெனில் தாரதோஷத்தை உண்டாக்கி விடும். வெளியில் வந்து காசு, பணம் என்று சம்பாதித்தபோதும் சொந்த ஊரில் மண்வாங்கி வீடு கட்டாமல் பக்கத்து ஊரில் கட்டுவார்கள். சொந்த ஊரிலிருந்து வட கிழக்கு பக்கமாக இடமோ, மனையோ வாங்கக் கூடாது. யாரையாவது பெரிய மனிதர்களை எதிர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

தான் சார்ந்த இனம், மதம், மொழி என்று இதற்கு எதிராகச் செயல்படுவதால் புகழ் பெறுவார்கள். மீனம் ராசியான ஐந்தாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்து அமர்வதால் குழந்தைகள் அழகும் அறிவும் மிக்கவர்களாக விளங்குவார்கள். ஒரு பக்கம் புகழ் வந்தாலும் இவர்களைப்பற்றி தவறாகப் பேசுவதற்கென்றே ஒரு கூட்டமும் இருக்கும். பூர்வீகச் சொத்தில் ஏதேனும் பிரச்னை வந்தபடியே இருக்கும். கலைத்துறையில் மிகுந்த ஈடுபாடோடு இருப்பார்கள்.

இலக்கியம், எழுத்து, ஓவியம், இசைத் துறைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். முகத்தில் சோர்வுக் களையே இருக்காது. எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். சிறிய அவமானத்திற்குப் பிறகுதான் நன்கு முன்னேறத் தொடங்குவார்கள். செய்தொழிலிலும், குலத் தொழிலிலும் மிக ஈடுபாட்டோடு இருப்பார்கள். புத்தகக் கல்வியைவிட நடைமுறை வாழ்க்கைக் கல்வியையே மிகவும் விரும்புவார்கள்.

மேஷ  ராசியான ஆறாம் இடத்தில் செவ்வாய் பலம் பெறுகிறார். ஆனாலும், இதுவும் ஒரு சுமாரான அமைப்பேயாகும். மிக முக்கியமாக திருமண வாழ்க்கையை இந்த அமைப்பு பாதிக்கும். நான் இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக எடக்கு மடக்காக ஏதேனும் செய்தபடி இருப்பார்கள். மத்திம வயதில் கண் பார்வைக் கோளாறு வந்து நீங்கும். ஒரு வெற்றிக்குப்பிறகு வெகுகாலம் அப்படியே இருந்துவிடுவார்கள். அவ்வப்போது பணப் பற்றாக்குறை வந்து நீங்கியபடி இருக்கும். உடம்பில் சோம்பல்போல ஒரு மதமதப்பு இருக்கும்.

இந்த இடம் கொஞ்சம் கலகத்துவம் கொண்ட இடமாகும். எனவே, பிரச்னைகளால் பெரிய ஆளாக வளருவார்கள். தொண்டை வலி, தொண்டைப் புகைச்சல் போன்றவை அவ்வப்போது வந்து நீங்கியபடி இருக்கும். பல நேரங்களில் பற்றற்ற மனநிலையோடு இருப்பார்கள். மற்றவர்களுக்காக ஒரு வேலையை திறம்படச் செய்யும் இவர்கள், தனக்கென்று வரும்போது தவித்துப் போவார்கள்.

ரிஷப ராசியான ஏழாமிடத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். கூடவே செவ்வாய் சேர்ந்திருப்பதால் செவ்வாய் தோஷம் இதற்குண்டு. லக்னாதிபதியான செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் செவ்வாய் தோஷம் உண்டு. ஆனால், அதே செவ்வாய் அஷ்டமாதிபதியாகவும், அதாவது விருச்சிக ராசிக்குரியவராகவும் இருப்பதால் தோஷத்தின் வீரியம் குறைகிறது. தோஷம் அப்படியே குறைந்து கால் பங்காக மாறுகிறது. வாழ்க்கைத் துணைவர் வழியில் வந்த சொந்தங்கள் இவர்களால் பயனடைவார்கள்.

மீனத்தில் சுக்கிரன் உச்சமாவதால் தன் தகுதிக்கு மீறிய வாழ்க்கைத் துணைக்கு வாய்ப்பிருக்கிறது. அதேசமயம், பெண்கள் விஷயத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. தொடர்ந்து பயணித்துக்கொண்டேயிருப்பது நல்லதாகும். யாராவது ஏதாவது சொன்னால் அதை அப்படியே நம்புவார்கள். புராதனச் சொத்து, பாட்டன் சொத்தையெல்லாம் காப்பாற்றி வைத்துக் கொள்வார்கள். மிதுன ராசியான எட்டாமிடத்தில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் வாழ்க்கையே மிகவும் சவாலாக இருக்கும்.

காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் இந்த அமைப்பில் நிறையபேர் உண்டு. விஷ ஜந்துக்களிடம் கவனம் தேவை. செல்லப் பிராணிகளை  வளர்க்கக் கூடாது. உடன் பிறந்தவர்களை திருமணம் முடிந்தபின்னர் தனிக் குடித்தனம் வைப்பது உங்களின் வருங்கால நீண்ட உறவுமுறைக்கு நல்லதாகும். ஆரம்ப காலங்களில் மருத்துவராக இருந்துவிட்டு பின்னர் வேலையில் சலிப்பு ஏற்பட்டு ஊர் பொதுக் காரியங்களில் கவனம்  செலுத்துவார்கள். டிரஸ்ட் ஒன்றைத் தொடங்கி நிறைய சேவை செய்வார்கள்.

கடக ராசியில் சுக்கிரன் அமைவது என்பது அத்தனை விசேஷமல்ல. இந்த அமைப்பை உடையவர்களின் தந்தையார் குடும்பத்தில் பற்றில்லாதவராக இருப்பார். காலத்தாலும் சூழ்நிலையாலும் எல்லா சொத்துக்களையும் இழந்து மீண்டும் பெறுவார்கள். திருமணத்திற்குப் பிறகு முன்னேற்றம் காட்டும் ஒரு அமைப்பு இது. சொந்த ஊரிலிருந்து அல்லது தந்தையிடமிருந்து விலகி தனித்துவம் பெற்று வளருவார்கள். விரும்பத்தகாத முறையில் திருமண வாழ்க்கை, கூடாப்பழக்க வழக்கங்கள் என்று சரியான பலன்களை இந்த அமைப்பிற்கு கூற முடியாது.

சிம்ம ராசியான பத்தாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் சேர்ந்திருந்தால் ஜெம்மாலஜிஸ்ட் ஆக வரக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு. அறுவை சிகிச்சை நிபுணர், உளவியல் அல்லது மனநல மருத்துவராகும் வாய்ப்புகளும் உள்ளன. ஜுவல்லரி, பியூட்டி பார்லர், மினரல் வாட்டர் என்று தொழில் தொடங்கி பிரமாண்டமாக வருவார்கள். நவீன நாடகங்கள் இயற்றும் கலைஞர்களாகவும் மிளிர்வார்கள். காவல்துறை, ராணுவம், அரசாங்கத்தில் நிர்வாகத் தொடர்புள்ள துறைகளில் சாதிப்பார்கள்.

கன்னி ராசியான பதினோராம் இடத்தில் சுக்கிரன் நீசமாகிறார். அதேசமயம் செவ்வாய் கொஞ்சம் பலவீனமடைகிறார். மூத்த சகோதரர்களால் ஏதேனும் பிரச்சனை வந்தபடி இருக்கும். இல்லையெனில் அவரால் பெரிய அளவில் கடன்படுவார்கள். பாதக ஸ்தானமான பதினோராமிடத்திலே செவ்வாய் அமர்வதால் வர்மக்கலையில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இணைதொழிலால் பெரிய அளவில் லாபம் இல்லாவிட்டாலும் கையைக் கடிக்காமல் சென்று கொண்டிருக்கும்.

பன்னிரெண்டாம் இடமான துலா ராசியில் சுக்கிரனும் செவ்வாயும் அமர்வதால் சிற்றின்ப நாட்டம் அதிகரிக்கும். மத்திம வயதுக்கு மேல் தீவிரமான ஆன்மிகத்தில் இறங்குவார்கள். தேவையில்லாதவர்களுக்கு செலவு செய்து கொண்டிருப்பார்கள். செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்துள்ள அமைப்பில் பிறந்தவர்கள் கொதிக்கும் வெய்யிலில் கூட சுகமாக நடக்கும் சுபாவத்தை உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் செவ்வாயின் உணர்ச்சியை மட்டுப்படுத்தி சுக்கிரனை விவேகமாகக் கையா ண்டால் பெரும் வெற்றிகளை பெறுவார்கள்.

எனவே, காளி போன்ற அமைப்புடைய பெண் தெய்வங்கள் சமனப்பட்டு சாந்தமாக மாறிய தலங்களுக்குச் சென்று வந்தால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் பெரும் பலனை அடைவார்கள். உண்மையிலேயே வேகமும் விவேகமும் கூடவே அழகியலும் இவர்களிடமிருந்து வெளிப்படும். அப்படிப்பட்ட தலத்தில் ஒன்றே திருவொற்றியூர் ஆகும். பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவி அருளிய தலமாதலால் திருவொற்றியூர் ஆயிற்று.

இத்தலத்திலுள்ள ஆதிபுரீஸ்வரர், படம்பக்க நாதர், வடிவுடையம்மனைப் போன்றே வேறொரு சந்நதியான வட்டப்பாறையம்மனும் வீற்றிருக்கிறாள். இவர்கள் தனித்துச் சென்று தரிசிக்க வேண்டியது இந்த வட்டப்பாறை அம்மனையே ஆகும். கவிச்சக்ரவர்த்தி கம்பனுக்கு திருவருள் புரிந்தவளும் இவளே. இவளின் உக்கிர கோலத்தை சாந்தப்படுத்திய ஆதிசங்கரர் அங்கேயே ஸ்ரீசக்ரத்தை நிர்மாணித்துள்ளார். இக்கோயில் சென்னை-, திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் கோயிலில் தனி சந்நதியில் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்