குங்குமம் டாக்கீஸ்



* சமந்தா ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பல்லாவரம் வீட்டிற்கு வந்துவிடுகிறார். அவரோடு படித்த தோழிகளை வரச் சொல்லி சந்திக்கிறார்.

* தன் தயாரிப்பில் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, இப்போது பிற தயாரிப்புகளிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். முதலில் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இப்போது தனது படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார்.

* கவிஞர் வெண்ணிலா, ஜோ டி.குரூஸ் முதலிய இலக்கியவாதிகள் இப்போது திரைப்படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

* தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிற கௌதம் மேனன், அடுத்து விக்ரமின் படத்தை இயக்குகிறார். இதற்கான ஒன்லைன் விக்ரமிற்கு பிடித்துவிட்டதாம்.

* ‘புலி முருகன்’ கொடுத்த உற்சாகத்தில் வெளிநாடு பறந்துவிட்டார் மோகன்லால். இந்த கிறிஸ்துமஸை சான் ஃப்ரான்சிஸ்கோவில் கொண்டாடுகிறார்.

* கன்னட ‘ராஜகுமாரா’ ஷூட்டிங்கை கோவாவில் முடித்துவிட்டு மலையாள ஹாரரான ‘எஸ்ரா’ படப்பிடிப்புக்காக திருவனந்த
புரம் திரும்பிவிட்டார் ப்ரியா ஆனந்த்.

* ‘ஷமிதாப்’ தோல்விக்குப் பின் பாலிவுட் பக்கம் போகாமல் இருந்தார் தனுஷ். இப்போது பிஜாய் நம்பியாரின் இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கிறார். ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இது ‘அக்னி நட்சத்திரம்’ ரீமேக் என்கிறார்கள்.

* இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்து ஜனவரி 25ல் ரிலீஸாக இருக்கும் ‘ரயீஸ்’ பட  டிரெய்லர்தான் இப்போதைய வைரல். ‘இது சில வருடங்களுக்குமுன் குஜராத்தில் கள்ளச் சாராய சாம்ராஜ்யம் நடத்திய அப்துல் லத்தீப் எனும் அண்டர்வேர்ல்ட் தாதாவின் நிஜக்கதை’ என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவுகிறது. ஆனால், படத்தின் இயக்குனர் ராகுல் தோலக்கியா ‘‘இது உண்மைக் கதையே அல்ல... அதிலும் இது ஒரு க்ரைம் த்ரில்லர்’’ என்று மறுத்திருக்கிறார்.

* பாலிவுட் ஸ்டார் ஜான் ஆபிரகாம் நடிப்பைவிட பைக் ரேஸ், கார் ரேஸில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். அவர் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ‘நிஸான் ஜி.டி-ஆர்’ காரை வாங்கியிருக்கிறார்.  லேட்டஸ்ட் மாடலான இதற்கு பிராண்ட் அம்பாசிடரும் அவரே!

* தெலுங்கில் சிரஞ்சீவி பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு அஜித் படத்திற்காக பல்கேரியா சென்றார் காஜல் அகர்வால். முதல்முறையாக பல்கேரியாவைப் பார்த்த காஜல், அதன் குளிர் அழகில் செம ஹேப்பியாகியிருக்கிறார்.

* கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது. எல்லா ஹீரோக்களின் முதல் சாய்ஸ் அவராகத்தான் இருக்கிறார். ட்விட்டரில் அவரது ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை 5 லட்சமாக உயர்ந்துவிட்டது.

* சிரஞ்சீவியின் 150வது படம் ‘கைதி எண் 150’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்துவிட்டது. ‘‘சினிமாவுக்கென போஸ்டர் தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு போஸ்டர் வந்ததில்லை. ஜேம்ஸ் கேமரோன், கிறிஸ்டோபர் நோலன் இவர்களுக்குக் கூட இதன் விஷுவல் செழுமை மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும்’’ என ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.

* அஜித் படத்திற்கான பாடல்கள் அனைத்தையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டார் அனிருத். தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தில் ‘எங்கேயும் எப்போதும்...’ பாடலைப் பாடிய மலேசிய ஹிப்-ஹாப் பாடகர் யோகி.பி, பல வருட இடைவெளிக்குப்பின் அஜித் படத்திற்காக அனிருத் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

* ‘துப்பறிவாளன்’ படத்தில் முதல் தடவையாக வில்லனாக நடிக்கிறார் பாக்யராஜ். மிஷ்கின் தனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததைப் பார்த்து வியந்த பாக்யராஜ்,  அவரைக் கட்டிப் பிடித்து பாராட்டினாராம்.

* விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால், சந்தானம் இந்த நான்கு பேரும் சேர்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமையில்  கிழக்குக் கடற்கரை சாலையில் சைக்கிளிங் போகிறார்கள்.

* சந்தோஷ் நாராயணின் ஸ்டூடியோவிற்கே நேரில் சென்று ‘பைரவா’ பாடல்கள் அனைத்தையும் கேட்டு மகிழ்ந்திருக்கிறார் விஜய்.

* திடீரென விஜய்யிடமிருந்து வடிவேலுக்கு போன் போயிருக்கிறது. ‘‘அண்ணா, அடுத்த படத்தில் நீங்க என்னோடு நடிக்கிறீங்க. நான் டைரக்டரைக் கதை சொல்ல அனுப்புகிறேன்’’ என்றாராம். புயல் மறுவார்த்தை பேசாமல் ‘ஓகே’ என சொல்லிவிட்டார். பூங்காற்று திரும்புமா!

* த்ரிஷா திரையுலகிற்கு வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டன. ‘‘இத்தனை வருஷ சினிமா பயணம் சிறந்த பயணமாகத்தான் இருந்திருக்கிறது. நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ என நெகிழ்கிறார்.

* ‘இது நம்ம ஆளு’ படத்திற்கே சிம்பு மியூசிக் செய்வதாக இருந்தது. தம்பிக்கு விட்டுக் கொடுத்துவிட்டார். சந்தானம் வற்புறுத்தியதால், அவரது படத்திற்கு மியூசிக் அமைக்க ஓகே சொல்லிவிட்டார். இப்போதைக்கு இந்தப் படம் மட்டும்தானாம். இதற்கான அட்வான்ஸ் செக்கை சந்தானம் தர, திரும்ப அவரது பாக்கெட்டிலேயே அதை வைத்துவிட்டார் சிம்பு. நண்பேன்டா!