காமாலையால் கலங்க வேண்டாம்



-டாக்டர் கு.கணேசன்

செரிமான மண்டலத்தின் இதயம் போல் செயல்படுகிற கல்லீரலானது மஞ்சள் காமாலை, கொழுப்புமிக்க கல்லீரல், கல்லீரல் சுருக்கம் என்ற மூன்று பெரிய பிரச்னைகளைச் சந்திக்கிறது. இவற்றுள் காமாலை முக்கியமானது. காமாலை வந்தால் பசி எடுக்காது; எதையும் சாப்பிடப் பிடிக்காது. காய்ச்சல் அடிக்கும். எந்நேரமும் களைப்பாக இருக்கும். வாந்தி வரும். உடலில் அரிப்பு ஏற்படும். வலது மேல்வயிற்றில் வலி உண்டாகும். கண்கள், நகங்கள், உள்ளங்கை, உள்ளங்கால், தோல் என உடம்பு மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும். சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போகும். என்ன காரணம்?

குடலில் கொழுப்பு உணவைச் செரிக்க கல்லீரல், பித்தநீரைச் (Bile) சுரக்கிறது. இதன் நிறம் மஞ்சள். காலாவதியாகிப் போன ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் (Spleen) சாகடிக்கப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு ரத்த அணுவும் ஹியூம், குளோபின் என்று உடைகிறது. ஹியூமிலிருந்து பிலிருபின் என்ற ‘பித்த பிக்மென்ட்’ தினமும் 300 கிராம் வரை உற்பத்தியாகிறது. இதன் நிறமும் மஞ்சள்.

இது ஒரு விஷப் பொருள். இதே அளவில் இது ரத்தத்தில் தங்கினால் உயிருக்கு ஆபத்து. எனவே, இதைத் தன்னிடம் வரவழைத்து பித்தநீருடன் கலக்கச் செய்கிறது கல்லீரல். இதனால் பித்தநீர் மஞ்சள் நிறமாகிறது. பித்தநீர் குடலுக்குச் செல்லும்போது அதனுடன் பிலிருபினும் சேர்ந்து சென்று, பித்த உப்பாக மாறி மலத்தில் வெளியேறுகிறது. மிச்சமுள்ளது ரத்தம் வழியாக சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறுகிறது.

இம்மாதிரியான சுத்தப்படுத்தும் சுழற்சியால் பிலிருபினின் அளவு 0.2 - 0.8 மி.கி./டெசி லிட்டர் என பெட்டிப் பாம்பு போல் அடங்கிவிடுகிறது. இதனால், காமாலை வருவது தடுக்கப்படுகிறது. மண்ணீரலில் ‘சுனாமி’ வந்து சிவப்பணுக்கள் கன்னாபின்னாவென்று உடையலாம். கல்லீரல் செல்கள் ‘வேலை நிறுத்தம்’ என்று கொடி பிடிக்கலாம். பித்தநீர் குடலுக்குப் போவதில் தடங்கல் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில் பிலிருபின் அளவு ரத்தத்தில் அதிகமாகிவிடும். காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண், நகம், சிறுநீர் எல்லாம் மஞ்சளாகத் தெரிவது இதனால்தான்!

மலேரியா, தலசீமியா போன்ற நோய்களால் பிலிருபின் குற்றால அருவி போல் கொட்டும். அதைக் கட்டுக்குள் கொண்டுவர கல்லீரல் கஷ்டப்படும். இதனால் மஞ்சள் காமாலை வரும். இதை ‘ரத்த அழிவுக் காமாலை’ (Haemolytic jaundice) என்கிறோம். இதற்கான அடிப்படைக் காரணத்தை சரி செய்தால் நோய் குணமாகும்.

பித்தப்பையில் வீக்கம்/கல் ஏற்பட்டு அடைத்துக்கொண்டால், பித்தக் குழாய் பிரச்னை செய்தால், கல்லீரலில் அல்லது கணையத்தில் கேன்சர் என்றால், பித்தநீர் குடலுக்கு வர முடியாது. பிலிருபின் மலத்தில் வெளியேற முடியாது. அப்போது தோன்றுவது ‘அடைப்புக் காமாலை’ (Obstructive jaundice). மலம் பழுப்பாகப் போவது இதன் முக்கிய அறிகுறி. சர்ஜரி செய்து அடைப்பை அகற்றினால் மட்டுமே இது குணமாகும்.

மது, மருந்து, விஷம், கிருமி, புழு, புற்று, பரம்பரைக் கோளாறு என பல்வேறு ‘தோட்டாக்கள்’ கல்லீரலைத் துளைக்கும்போது காமாலை வருகிறது. வழக்கத்தில், ரத்தம் பிளஸ் சிறுநீர் டெஸ்ட்களும் வயிற்று ஸ்கேனும் காமாலைக்குக் காரணம் சொல்லிவிடும். அடுத்து வருவது ‘தொற்றுக் காமாலை’ (Infective jaundice). வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிற இதுதான் பச்சிளங்குழந்தை முதல் பல் போன கிழவர் வரை பலருக்கும் ஏற்படுகிறது. முக்கியமாக, ‘ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ’ என்ற ஐந்து வகை கிருமிகளில், எந்த வைரஸ் தாக்கினாலும் காமாலைதான்!

இவற்றில் ‘ஹெப்.ஏ, ஈ’ என்ற கிருமிகள் ஒரே ரகம். நாம் அருந்தும் அசுத்தமான தண்ணீர், சாப்பிடும் உணவு ஆகிய இரண்டின் மூலம் நம் உடலுக்குள் இவை போகின்றன. கல்லீரலைத் தாக்கி வீக்கத்தை உண்டாக்குகின்றன. இதனால் கல்லீரல் செல்கள் தற்காலிகமாகச் செயலிழந்து விடுவதால், பிலிருபின் ரத்தத்தில் தேங்கி காமாலை ஏற்படுகிறது. கீழாநெல்லி கீரையில் சரியாகிறது என்று சொல்கிறார்கள் அல்லவா?அது இந்தக் காமாலைதான்.

கொழுப்பும், எண்ணெயுமுள்ள உணவைக் குறைத்துக்கொண்டு, இட்லி, இடியாப்பம், இளநீர், மோர், கரும்புச்சாறு, குளுக்கோஸ் ஆகியவற்றைச் சாப்பிட்டு, நன்றாக ஓய்வெடுத்தால் போதும்; இது தானாகவே குணமாகிவிடும். சுயசுத்தம்/சுற்றுப்புற சுகாதாரம் காத்தால், தடுப்பூசி போட்டுக்கொண்டால் இந்த வகை காமாலையை வரவிடாமலும் தடுக்கலாம்.

‘ஹெப்.ஏ’ வைரஸைவிட ‘ஈ’ வகையிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம்... இது பாதிக்குமானால், ஒருத்தர் இரண்டு பேர் என்று இல்லாமல், ஊர் முழுவதையும் ஒரே நேரத்தில் தாக்கி நியூஸ் பேப்பரில் தலைப்புச் செய்தியாக்கி விடும். இது கர்ப்பிணியைத் தாக்கினால் சிசுவுக்குப் பிரச்னை செய்வதோடு மட்டுமல்லாமல் தாய்க்கும் நிலைமை சீரியஸாகிவிடும்.

‘ஹெப்.பி’ மற்றும் ‘சி’ வைரஸ்கள் வேறு ரகம். சுத்தப்படுத்தப்படாத ஊசிகள் போட்டுக்கொள்ளும்போது, ரத்தம் ஏற்றிக்கொள்ளும்போது, பச்சை குத்திக்கொள்ளும்போது, தகாத பாலுறவு வைத்துக்கொள்ளும்போது, தாயிடமிருந்து குழந்தைக்கு என பல வழிகளில் இந்தக் கிருமிகள் நம் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன. ‘ஹெப்.டி’ எப்போதுமே தனியாகச் செயல்படாது; மற்ற வைரஸ்களுடன் ஒட்டிக்கொண்டுதான் கல்லீரலைத் தாக்கும்.

ஹெப் வகை கிருமிகளில் ‘பி’ கிருமிதான் மிகவும் மோசமானது. ‘உயிர்க்கொல்லி நோய்’ என்று அழைக்கப்படும் எய்ட்ஸ் நோயைக் கொடுக்கும் ‘ஹெச்.ஐ.வி’ கிருமிகளைவிட பலவிதங்களில் ஆபத்தானது! ‘ஹெப்.பி ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ 0.00004 மில்லி லிட்டர் ரத்தம் போதும்’. ஆனால், ஹெச்.ஐ.வி. கிருமி பரவ இதைவிட பல மடங்கு ரத்தம் தேவை. என்றாலும், ஹெப்.பி கிருமி உடலில் புகுந்த மறுநாளே நமக்கு ஆபத்து வந்துவிடாது.

இது ஒரு ‘ஸ்லோ பாய்சன்’. உடலுக்குள் புகுந்து குறைந்தது இரண்டு வருடங்கள் கழித்துத்தான், அது கல்லீரலில் ‘கூடு கட்டி’ இருக்கிற விஷயம் வெளியில் தெரியும் என்றால், இதன் ‘நின்று கொல்லும்’ குணத்தைப் புரிந்துகொள்ளுங்கள். காமாலை அறிகுறிகளுடன் கை, கால் மூட்டுகளில் வலி படுத்தி எடுப்பது ‘ஹெப்.பி’ காமாலையின் முக்கிய அறிகுறி. இதை ஆரம்பத்தில் கவனிக்காதவர்களை ‘கல்லீரல் சுருக்கம்’ (Cirrhosis) என்ற கொடுமையான நோயில் கொண்டுபோய் தள்ளிவிடும்.

இன்னும் சிலருக்கு கல்லீரலில் கேன்சர் வரும் ஆபத்தும் உண்டு. எனினும், இதைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறது என்பதும், இந்தக் கிருமிகளைக் கொல்ல மருந்து இருக்கிறது என்பதும் ஆறுதலான விஷயங்கள். நம்மில் சிலர் மாடியில் குடியிருக்கும் வீட்டுக்காரரோடு சமாதானமாகிப் போவார்கள். ஆனால் அண்டை வீட்டாரோடு அடிக்கடி சண்டை போடுவார்கள். இதுமாதிரியான குணம் ஹெப்.பி கிருமிக்கும் உண்டு. அதாவது, அநேகரின் ரத்தத்தில் இது அமைதியாக இருக்கும்.

தன்னைச் சுமந்துகொண்டிருப்பவரை ஒன்றுமே செய்யாது. இது ஏதாவது ஒரு ரூட்டில் அடுத்தவர்களிடம் போனால், அவர்களின் கல்லீரலைப் பாதித்து, காமாலையை ஏற்படுத்தி, கேன்சரைக் கொடுத்துக் கொன்று விடும். இப்படி வெளியில் தெரியாமல் ஹெப்.பி கிருமியைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் (Carriers) மட்டும் இந்தியாவில் 4 கோடிப் பேர்.

அவர்களில் ஒருவர்தான் பொறியாளர் சந்துரு. அவருக்கு நான்தான் ஃபேமிலி டாக்டர். சிறுவயதிலிருந்தே பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்டவர். இரண்டு நாள் காய்ச்சல் என்றாலும் என்னிடம் கேட்டுத்தான் மருந்து சாப்பிடுவார். தெருவில் விற்கப்படும் உணவுகளைத் தொடவே மாட்டார். குளிப்பதற்கும், குடிப்பதற்கும் எப்போதும் காய்ச்சி ஆற வைத்த தண்ணீர்தான்!

இப்படி ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணா’வாக வளர்ந்த சந்துருவுக்கு துபாயில் வேலை கிடைத்தது. ‘மெடிக்கல் செக்கப்’பின்போது அவருக்கு ஓர் இடி விழுந்தது. ‘அவருடைய ரத்தத்தில் ஹெப்.பி கிருமிகள் இருப்பதாகவும், இதனால் துபாய் வேலை கிடைக்காது என்றும்’ சொல்லிவிட்டனர்.

என்னிடம் ஓடி வந்தார் சந்துரு “இப்படி ஒரு கொடிய கிருமி எனக்கு எப்படி வந்தது, டாக்டர்?” என்று கேட்டார். “இந்தக் கிருமியை உனக்குத் தந்தது உன் அம்மா!” என்று சொன்னால் அவனால் தாங்க முடியுமா? ஆம், அவன் அம்மா கர்ப்பத்தில் அவனைச் சுமந்து கொண்டிருந்தபோது அம்மாவுக்கு ஹெப்.பி கிருமிகள் இருந்தன. இப்போது இருப்பதைப் போல் அப்போது தடுப்பூசிகள் இல்லை. கருவைச் சுத்தம் செய்ய அம்மாவுக்கு சம்மதம் இல்லை. அம்மாவிடமிருந்து குழந்தைக்குக் கிருமி பரவுவதைத் தடுக்க அப்போது வழி இல்லை. அதன் விளைவுதான் சந்துருவின் ரத்தத்தில் கிருமி! எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இது! இப்போதுதான் வெளியில் சொல்கிறேன்.

(இன்னும் பேசுவோம்...)

காமாலையைத் தடுக்க வழிகள்

* மது அருந்தக் கூடாது.
* சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவைச் சாப்பிடவும்.
* கை, கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.
* மலம் கழித்த பிறகு கிருமிநாசினி பயன்படுத்தி கை கழுவுங்கள்.
* ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகளுக்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளவும்.
* ஆரோக்கிய உணவுப் பழக்கம் அவசியம்.
* வயதுக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்கவும்.
* டாக்டர் சொல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள்.

காமாலைக்கான தடுப்பூசிகள்

* ‘ஹெபடைடிஸ் - ஏ’ தடுப்பூசியை குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் முதல் தவணை, ஒன்றரை வயது முடிந்ததும் இரண்டாம் தவணை போட வேண்டும். குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளத் தவறியவர்கள், இப்போது ஒரு தவணையும் ஆறு மாதங்கள் கழித்து ஒரு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

* ‘ஹெபடைடிஸ்- பி’ தடுப்பூசியை குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, 1 மாதத்திலிருந்து 1½ மாதத்துக்குள் இரண்டாம் தவணை, 6 மாதம் முடிந்ததும் மூன்றாம் தவணை இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்.

* குழந்தைப் பருவத்தில் இதைப் போடாதவர்கள், முதல் ஊசியை இப்போது போட்டுக்கொண்டு, ஒரு மாதம் கழித்து ஒருமுறையும், ஆறு மாதங்கள் கழித்து மறு தவணையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணிக்கு ‘ஹெபடைடிஸ்- பி’ காமாலை இருந்தால், பிறக்கப்போகும் குழந்தைக்கு அது பரவாமல் இருக்க, குழந்தை பிறந்தவுடன், ‘ஹெபடைடிஸ்- பி இமுனோகுலோபுலின்’ தடுப்பூசி போட வேண்டும்.

வாசகர் கேள்விகள்

எனக்கு ‘ஐ.பி.எஸ்’ நோய் இருப்பதாகச் சொன்னார்கள். அது ஏன், எப்படி வருகிறது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதற்கு சிகிச்சை உள்ளதா?
-பார்த்திபன், ஸ்ரீரங்கம்.

‘ஐ.பி.எஸ்’ (Irritable bowel syndrome-IBS) நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கும் நடுத்தர வயதுள்ளவர்களுக்கும் ஏற்படுகிற ஒரு குடல் நோய். ஆண்களைவிட பெண்களுக்கு இது அதிகம். இதற்கு மனப்பிரச்னைதான் அடிப்படைக் காரணம். மன அழுத்தம், பயம், பதற்றம், பரபரப்பு, நீடித்த கவலை, தோல்வி, ஏமாற்றம் போன்றவை இதைத் தூண்டுகின்றன.

சாப்பிட்டதும் வயிற்று வலி ஏற்பட்டு, உடனடியாக மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது இதன் முக்கிய அறிகுறி. எவ்வளவு போனாலும், இன்னமும் போக வேண்டும் என்ற உணர்வு இருக்கும். சிலருக்கு மலச்சிக்கலும் பேதியும் மாறி மாறி ஏற்படும். மலத்தில் சளி போகும். வயிற்றில் ஏதோ ஒன்று உருள்வது போலவும், வயிறு உப்புவது போலவும் தோன்றும்.

பாலில் உள்ள ‘லேக்டோஸ்’ அல்லது கோதுமையில் உள்ள ‘குளூட்டன்’ அலர்ஜி உள்ளவர்களுக்கும் இது ஏற்படலாம். குடலில் வேறு நோய்கள் இல்லை என்று பரிசோதித்துத் தெரிந்துகொண்டு, மனக்கவலையைப் போக்கும் மருந்துகள், மன அழுத்தம் குறைக்கும் மருந்துகள், ஹிப்னோதெரபி ஆகிய சிகிச்சைகள் எடுத்தால் நோய் குணமாகும்.

இரைப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன? என்ன சிகிச்சை உள்ளது?
- லோகநாயகி, மடிப்பாக்கம்.

இரைப்பை புற்றுநோயின் ஆரம்பத்தில் இரைப்பை புண்ணுக்குரிய அறிகுறிகள் போலவே தோன்றும். லேசான வயிற்று வலி, வயிற்றுப்பொருமல், பசிக்குறைவு, சாப்பிடப் பிடிக்காதது, அஜீரணம் என்றுதான் ஆரம்பிக்கும். போகப் போக, வயிற்று வலி தொடர்ந்து இருக்கும். சாப்பிட்டதும் வலி அதிகரிக்கும்.

வாந்தி எடுத்தால் வலி குறையும். உடல் எடை குறையும். சோர்வு அதிகரிக்கும். ரத்த வாந்தி எடுப்பது, மலத்தில் ரத்தம் போவது, தார் மாதிரி மலம் போவது, ரத்த சோகை ஏற்படுவது ஆகியவை அடுத்த கட்ட அறிகுறிகள். ‘எண்டோஸ்கோப்பி’ பரிசோதனையில் இந்த நோயை உறுதி செய்யலாம். நோயின் தன்மைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை, மருந்து சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை  தரப்படும்.