காலை சிக்கலை மருந்தில்லாமல் போக்கலாம்!



-டாக்டர் கு.கணேசன்

அதிகாலையில் வீட்டு வாசலில் நியூஸ்பேப்பர் வந்து விழாவிட்டால் வீட்டுக்கும் வெளிகேட்டுக்கும் சிலர் நடையாய் நடப்பார்கள். காலைக்கடன் இயல்பாக இல்லாவிட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் நரகம்தான்! எந்த வேலையும் ஓடாது. சிலர் வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள். சூடாக காபி, டீ குடிப்பார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது வெளியேற்றியே தீருவது என்று டாய்லெட்டில் உட்கார்ந்து மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.

இப்படி பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவையில்லை. தினமும் காலையில் மலம் கழித்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. காலையில் வரலாம்; மாலையில் வரலாம்; இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை. ஆசன வாயில் எவ்வித எரிச்சலும் இல்லாமல் சீராகப் போவது இயல்புநிலை. லேசான எரிச்சலும் சிரமமும் ஏற்பட்டால், மலச்சிக்கலுக்குப் படி கட்ட ஆரம்பித்து விட்டோம் என்று அர்த்தம்.

மலம் இறுகிப்போவது, கழிக்க சிரமப்படுவது, ஆசன வாயில் வலி, முழுசாகப் போகவில்லை என்ற உணர்வு உண்டாவது, கொஞ்சம்கூடப் போகாமல் ஆசனவாயை அடைத்துக்கொள்வது போன்ற நிலைமைகளை ‘மலச்சிக்கல்’ என்கிறோம். டாக்டர்கள் பாஷையில் சொன்னால், வாரத்துக்கு மூன்று முறைக்குக் குறைவாகப் போவது ‘மலச்சிக்கல்’.

என்ன காரணம்?
நாம் சாப்பிட்ட உணவு இரைப்பை, முன் சிறுகுடல், பின் சிறுகுடல் என்று பயணம் செய்து, தன்னிடம் இருக்கும் சத்துக்களையெல்லாம் ரத்தத்துக்குக் கொடுத்துவிட்டு, சக்கையாக பெருங்குடலுக்கு வந்து சேரும். அதில் தண்ணீர்தான் முக்கால் பங்கு இருக்கும். இதில் பெரும்பகுதியை உறிஞ்சிக்கொண்டு, கால் லிட்டர் தண்ணீரை மலத்தில் வெளியேற்ற வேண்டியது பெருங்குடலின் வேலை. சமயங்களில் அதற்கு தாகமெடுத்து, தண்ணீர் முழுவதையும் உறிஞ்சிவிடும். இதனால் மலம் இறுகி மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

பொதுவாக, தவறான உணவுப் பழக்கம்தான் மலச்சிக்கலுக்குப் பாதை போடும். எண்ணெய் மிகுந்த மேற்கத்திய உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது இப்போது வழக்கமாகிவிட்டது. பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ், ருமாலி ரொட்டி, தந்தூரி வகைகள் என பல்வேறு ஃபாஸ்ட்ஃபுட்களையும் பாக்கெட் உணவுகளையும் ‘மூக்கு முட்ட வெட்டுபவர்கள்’ இருக்கிறார்கள். இன்னும் பலருக்குப் பால் சார்ந்த உணவுகளைச் சாப்பிடப் பிடிக்கும். இன்னொரு கோஷ்டி இருக்கிறது.

நார்ச்சத்துள்ள காய்கறி, கீரை, பழங்களைப் பார்த்தாலே இவர்களுக்கு அலர்ஜி! தொடமாட்டார்கள். வயதானவர்களுக்கு எழுதப்படாத சட்டம் ஒன்று இருக்கிறது. அடிக்கடி ஒன் பாத்ரூம் போக வேண்டுமே என்று சோம்பல் பட்டு தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். இப்படியான பழக்கவழக்கங்கள் மலச்சிக்கலை விசிலடித்து வரவேற்கும்.

அடுத்தது, மலம் கழிக்கும் முறை. ‘தினமும் குறிப்பிட்ட நேரத்தில்’ என ஒழுங்குபடுத்திக்கொள்கிறவர்களுக்கு பெரும்பாலும் மலச்சிக்கல் ஏற்படாது. ஆனால் அநேகம் பேர் இதில்தான் தவறு செய்கின்றனர். மலம் வருகிற உணர்வு உண்டாகும்போது முக்கிய வேலையில் ஈடுபட்டிருப்பது, தொலைக்காட்சியில் சீரியல் பார்ப்பது, பயணத்தில் இருப்பது, கழிப்பறை அருகில் இல்லாதது என்று காரணங்களைக் காட்டி தவிர்க்கின்றனர்; அல்லது தள்ளிப் போடுகின்றனர்.

இதனாலும் மலச்சிக்கல் ஏற்படும். இயல்பாகவே வயது ஆக ஆக மலம் போவது குறையும். அதோடு உணவுமுறை மாறிவிடும். உடற்பயிற்சி குறைந்துவிடும். ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பார்கள். இதனால் உடலியக்கம் குறைந்துவிடும். பலருக்கு மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்புவலி என்று வலிகளும் சேர்ந்துகொள்ளும். இதனால் டூ பாத்ரூம் போவதைத் தள்ளிப்போடுவார்கள். இவை எல்லாம் சேர்ந்து மலச்சிக்கலை ஏற்படுத்தும். 

கர்ப்பிணிகளுக்கு தற்காலிகமாக மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மசக்கை காரணமாக பல பெண்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வார்கள். கருவில் வளரும் குழந்தை தாயின் குடலை அழுத்தும். ஆசனவாய் சுருங்கும். இவர்களின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். இவை மலச்சிக்கலில் கொண்டு போய் விடும்.

நாம் சாப்பிடும் மருந்துகளும் மலச்சிக்கலை வரவேற்பது உண்டு. முக்கியமாக, ‘அலுமினியம்’, ‘கால்சியம்’ கலந்த அல்சர் மருந்துகள், இரும்புச் சத்து மாத்திரைகள், வயிற்றுவலி மாத்திரைகள், வலிப்பு மருந்துகள், தூக்க மருந்துகள், ‘கொடீன்’ கலந்த வலி நிவாரணிகள், சிறுநீர் வெளியேறப் பயன்படும் மாத்திரைகள் ஆகியவற்றைக் கூறலாம். மலச்சிக்கலைப் போக்குவதற்காக பேதி மாத்திரைகளை சிலர் சாப்பிடுவார்கள்.

அந்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டாலும் மலச்சிக்கல் உண்டாகும் என்பது நீங்கள் அறியாத ‘நகைமுரண்’! காய்ச்சல், வாந்தி, பசிக் குறைவு போன்ற பொதுவான பிரச்னைகள் நம்மை வாட்டும்போதும், வெயிலில் அதிகம் அலையும்போதும் உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது மலச்சிக்கல் எட்டிப் பார்க்கும். இளம் பெண்களுக்குப்  பெருங்குடல் சுவரில் தளர்ச்சி ஏற்பட்டு ‘இடியோபதிக் டிரான்சிட் கோலன்’ எனும் நோய் வரலாம்.

அப்போது அவர்களுக்கு மலச்சிக்கல்தான் ஆரம்ப அறிகுறியாக இருக்கும். கைக்குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு செயற்கைப் புட்டிப்பால் தரும்போது மலச்சிக்கல் ஏற்படலாம். மூலநோய், ஆசனவாயில் வெடிப்பு, ஆசனவாய் சுருங்குவது, குடல் அடைப்பு, குடலில் கட்டி, பெருங்குடல் புற்றுநோய், ‘டைவர்ட்டிகுலைட்டிஸ்’ எனும் குடல் தடிப்பு நோய், தைராய்டு குறைவாகச் சுரப்பது, உடலில் கால்சியம் அதிகரிப்பது, பொட்டாசியம் குறைவது, பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், தண்டுவட நோய், மனச்சோர்வு, குறைவான தூக்கம்... என்று இன்னும் இதற்கு ஏகப்பட்ட காரணங்கள்!

எதுவாக இருந்தாலும், மலச்சிக்கலை அலட்சியப்படுத்தாமல் உடனே கவனிப்பது நல்லது. இல்லையென்றால், ஆசனவாயில் விரிசல் விழும்; ரத்தக் கசிவு உண்டாகும். அஜீரணம் தலைகாட்டும். வயிறு உப்பும். வாயுத் தொல்லை படுத்தி எடுக்கும். பிறகு குடலிறக்கம், குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு என்று பெரிய அளவில் கொண்டுபோய் நிறுத்திவிடும். பயப்பட வேண்டாம். ஒரு நாள், இரு நாள் மலச்சிக்கலினால் இந்த மாதிரி ஆகாது. பல மாதங்கள் தொடர்ந்து இருந்தால்தான் இந்த விபரீதங்கள் விளையும்!

அதே நேரம் மலச்சிக்கலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால், சுலபத்தில் குணமாகும். இப்போது மலச்சிக்கலுக்குப் பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேலை செய்கிறது. நோயாளியின் வயது, நோயின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மருந்து தேவைப்படும். டாக்டரிடம் கேட்டு மருந்து சாப்பிடுங்கள்.

‘‘மலச்சிக்கல்தானே... இரண்டு பேதி மாத்திரைகளைச் சாப்பிட்டால் போச்சு!” என்று நினைக்க வேண்டாம். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் இப்படி அடிக்கடி சாப்பிட்டால், அதற்கு அடிமை ஆகிவிடுவீர்கள். பிறகு பேதி மாத்திரை ‘போதை’ மாத்திரையாகிவிடும்! மாத்திரை போடாமல் மலம் கழிக்க முடியாது. அது மட்டுமல்ல, பெருங்குடலில் உள்ள உணர்வு நரம்புகள் பாதிக்கப்படும். இதனால், மலத்தை வெளியேற்ற வேண்டும் என்கிற உணர்வை அவை தெரிவிக்காது.

பிறகு, இயல்பாக இதைச் செய்யவே ரொம்பவும் சிரமப்பட வேண்டும். அப்போது ‘எனிமா’ தரவேண்டிய அவசியம் ஏற்படும். முதலில் உணவுப் பழக்கத்தை  ஒழுங்குபடுத்த வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகை, மது தவிர்க்கவும். தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். எந்த அவசரத்துக்காகவும் இதைத் தவிர்க்கக்கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்கக்கூடாது. தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எப்போது கவனிப்பது?

* மூன்று வாரத்திற்கு மேல் பிரச்னை தொடரும்போது.
* மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.
* குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.
* அந்த நேரத்தில் ஆசனவாய் வலித்தால்.
* மலத்துடன் ரத்தம் வெளியேறும்போது.
* உடல் எடை குறையும்போது.
* மலச்சிக்கலுடன் காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.
* மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறி மாறி வருமானால்.
* வயிறு உப்புசம், பசிக் குறைவு இருக்குமானால்.
* சுவாசத்தில் கெட்ட வாடை வருமானால்.

சிக்கல் தவிர்க்கும் உணவு!

நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை,  வரகு, கொள்ளு போன்ற முழுதானிய உணவுகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.  (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதை  கவனத்தில்கொள்ளுங்கள்). வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரைக்காய், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை, கீரை, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.

இவற்றை அன்றாட உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் ஆகிய வாசனைப் பொருட்களிலும் நார்ச்சத்து உண்டு. எனவே மிளகு ரசம், கொத்துமல்லி சட்னி போன்றவை நல்லது. நாளொன்றுக்கு 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். (சிறுநீரக நோயாளிகள்  இதற்கு விதிவிலக்கு) காபி, டீ, மென்பானங்களைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிக்க வேண்டும். இனிப்பையும் கொழுப்பையும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஃபாஸ்ட்ஃபுட்டுக்கு ‘தடா’ போட வேண்டும். இரவில் இரண்டு பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் என்பதில்லை; பருவத்துக்குத் தகுந்த  எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

வாசகர் கேள்விகள்

எனக்கு வயது 24. இடுப்புக்குக்கீழ் தொடையிலும் கால்களிலும் சதை அதிகமாக இருக்கிறது. என்ன செய்தால் சதை குறையும்?
-எஸ்.கல்யாணி, தூத்துக்குடி.

தினமும் காலையிலும் மாலையிலும் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்லுங்கள். சைக்கிளிங் செய்தால் இன்னும் நல்லது. மாடிப் படிகளில் ஏறி இறங்கும் பயிற்சிகளையும் செய்யலாம். தொடை சதையைக் குறைக்க இவை நன்றாக உதவும். குதிகால் தரையில் படும்படி நன்றாக உட்கார்ந்து எழுந்திருக்கும் ‘சிட்-அப்’ பயிற்சிகளைச் செய்வது இடுப்புச் சதையைக் குறைக்க உதவும். இவற்றோடு உணவுக்கட்டுப்பாடு மிக முக்கியம். குறிப்பாக, கொழுப்பு மிகுந்த, எண்ணெயில் பொரித்த உணவுகளையும், நொறுக்குத்தீனிகளையும் தவிர்ப்பது நல்லது. 

ஃபுளோரைடு பற்பசையை மட்டும் எல்லோரும் பரிந்துரைக்கின்றனர். அப்படியென்றால் மற்ற பற்பசைகளின் பயன்தான் என்ன?
-கே.பிரபாகரன், வேலூர்

பல் சொத்தை ஆவதைத் தடுக்க விரும்புகிறவர்கள் ஃபுளோரைடு பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு மிகவும் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ இருக்கும் உணவுகளைச் சாப்பிட்டால் பற்களில் கூச்சம் ஏற்படும். இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சொத்தைப் பல். அடுத்தது, பல் தேய்மானம். பல் சொத்தைக்குத் தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டும். இதற்குப் பற்பசை மட்டும் பலன் தராது.

பல் தேய்மானம் இருப்பவர்கள் ‘ஸ்ட்ரான்டியம் குளோரைடு’ அல்லது பொட்டாசியம் நைட்ரேட் கலந்த பற்பசை பயன்படுத்த வேண்டும்.
ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டாலோ, ஈறுகள் தேய்ந்து பலமில்லாமல் இருந்தாலோ ‘டானிக் அமிலம்’ அல்லது  ‘ஸ்டேனஸ் ஃபுளோரைடு’ கலந்த பற்பசை உதவும். பற்களில் கறை படிந்து காவி நிறத்துக்கு மாறி இருந்தால், ‘ஒயிட்டனிங் ஏஜென்ட்’ உள்ள பற்பசையைப் பயன்படுத்தலாம். வாய் நாற்றம் உள்ளவர்கள் நறுமணம் கலந்த பற்பசைகளைப் பயன்படுத்தலாம். இதுவரை சொன்னவை எல்லாமே பொதுவான பரிந்துரைகள் மட்டுமே! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பற்பசை பலன் அளிக்கும். எனவே, பல் டாக்டரை ஆலோசித்துக்கொள்வது நல்லது.

(இன்னும் பேசுவோம்...)