கவிதைக்காரர்கள் வீதி
சக பயணியின் தோளில் தூங்கும் குழந்தையின் பாதங்கள் நம் தலை தொட்டு ஆசீர்வதிக்கையில்தான் அர்த்தமாகின்றன ஒவ்வொரு பயணமும்! - பாலுவிஜயன், சென்னை.

கல்லறையில் உறங்கியவனுக்கு நிம்மதியில்லை... அடுத்த பிணம்! - தில்பாரதி, திருச்சி.
போலீஸ் போலிருக்கிறான் அதிகாரம் செய்யும் ரௌடி ரௌடியைப் போலிருக்கிறது மாமூல் வாங்கும் போலீஸ் சமர்த்தர்களைப் போலிருக்கிறார்கள் இடையே வாழும் நம் மக்கள் - விகடபாரதி, திட்டச்சேரி.
அடுக்குமாடி குடியிருப்பின்கீழ் அவஸ்தையாய் நெளிகிறான் குடுகுடுப்பைக்காரன், யாருக்கு வாக்கு சொல்ல என! - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
கோடை வெப்பம் தாகத்தோடு எல்லைச்சாமி! - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
மெல்லிய மெழுகொளியின் முடிவின் விளிம்பிலிருந்து பார்க்கும் கனத்த இருள்! - வ.முருகன், பாப்பனப்பட்டு.
|