பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே!
வரதராஜப் பெருமாள் தோன்றிய விதத்தை வேதாந்த தேசிகன் பாடுகிறார்.
“சுகலேசம் எண்ணிய சூழ்வினை தீர்க்கத் துணிந்தயனார் அகலாத அன்புடன் கொண்ட அயமேத வேள்வியின்மேல் புகலோங்கு பொன்மலை அன்னவோர் புண்ணிய கோடியுடன் பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே!”
சூரியன் முன் மற்ற விளக்குகளின் ஒளி எடுபடாமல் போவதைக் காண்கிறோம். ஆனால் வரதராஜப் பெருமாளின் ஒளிக்கு முன்னால் பகலவனான சூரியனே பகல் விளக்காகி விட்டானாம்!அப்போது வைகுண்டத்திலுள்ள நித்திய சூரிகள் வரதராஜப் பெருமாளைப் போற்றிப் பாடினார்கள்.
“பெருமையுடை அத்திகிரிப் பெருமாள் வந்தார்! பேராத அருள்பொழியும் பெருமாள் வந்தார்! அருமறையின் உச்சிதனில் நின்றார் வந்தார்! அங்கமுடன் அவையாகும் அரியோர் வந்தார்! திருவுரையாய்த் தாம்பொருளாய் நிற்பார் வந்தார்! திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்! மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்! வானேற வழிதந்தார் வந்தார் தாமே!”
அதாவது, மிக்க பெருமை கொண்டவரான வரதராஜப் பெருமாள் வந்தார்! நீங்காத கருணை மழை பொழியும் பெருமாள் வந்தார்! அருமையான வேதாந்தம் போற்றும் பெருமாள் வந்தார்! வேத சொரூபியாய் விளங்குபவர் வந்தார்! சொல்லும் பொருளும் போல் திருமகளுடன் இணைந்து நிற்கும் திருமால் வந்தார்! தன் கருணையால் உலகுக்குச் சிறந்த சாஸ்திரங்களைத் தந்தவர் வந்தார்! பக்தியில்லாதவர்களை மயக்க வல்லவரான மாயன் வந்தார்! பக்தர்கள் அனைவரும் வைகுண்டத்தை அடைய வழிகாட்டும் வரதர் வந்தார்!
“அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்! ஆனைபரிதேரின் மேல் அழகர் வந்தார்! கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்! கருதவரம்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்! முத்திமழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்! மூலமென ஓலமிட வல்லார் வந்தார்! உத்திரவேதிக்குள்ளே உதித்தார் வந்தார்! உம்பர்தொழும் கழலுடையார் வந்தார் தாமே!”
இப்பாடலின் பொருள்: “ஹஸ்திகிரி எனப்படும் காஞ்சியில் குடிகொள்ள வரதராஜப் பெருமாள் வந்தார்! யானை, குதிரை, தேர் ஆகிய வாகனங்கள் மீது அழகுமிக்க பெருமாள் வந்தார்! பார்வையற்றோர்க்குக் கண்ணைக் கொடுக்கும் பெருமாள் வந்தார்! கேட்பவர் கேட்ட வரத்தைக் கேட்டபடி கேட்டவுடன் தரும் பெருமாள் வந்தார்! முக்தி மழையைப் பொழியும் மேகம் போன்றவர் வந்தார்! ஆதிமூலமே என்று அழைத்த யானையைக் காத்த பெருமாள் வந்தார்! பிரம்மாவின் உத்திரவேதியில் வந்து தோன்றிய பெருமாள் வந்தார்! தேவர்களால் துதிக்கப்படும் திருவடிகளை உடையவர் வந்தார்!” என்றெல்லாம் வரதராஜப் பெருமாளின் வருகையை நித்திய சூரிகள் கொண்டாடினார்கள்.
- ராமானுஜதாசன்
|